Link

ணக்கம் வருக வருக....

Pages

புதன், 8 ஆகஸ்ட், 2012

மடுமாதா தேவாலயத் திருவிழாவிற்கு விசேட ரயில் சேவை

 
புதன்கிழமை, 08 ஓகஸ்ட் 2012,
மன்னார், மடுமாதா தேவாலயத்தில் நடைபெறவுள்ள வருடாந்த திருவிழா வைபவத்தில் கலந்துகொள்ளவுள்ள மக்களின் நலன் கருதி விசேட ரயில் சேவைகளை நடத்துவதற்கு புகையிரதத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இந்த ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரத வணிக அத்தியட்சகர் ஜீ.டபிள்யூ.எஸ்.சிசிர குமார குறிப்பிட்டார்.
இதற்கமைய நீர்கொழும்பு மற்றும் மதவாச்சி ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் விசேட ரயில் சேவைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 2012 கொடியேற்ற உற்சவம் 01 . 02

08.08.2012.
நல்லூர் கந்த சுவாமி கோவில் திருவிழா வீடியோக்கள் 2012 முதலாம் நாள் உற்சவம் மாலை நல்லூர் கந்த சுவாமி கோவில் திருவிழா வீடியோக்கள் 2012 2 நாள் உற்சவம் மாலை

தம்புத்தேகம பகுதியில் பதட்ட நிலை; பொலீசார் கண்ணீர்புகை பிரயோகம்

08.08.2012.
news
தம்புத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பிரதேச மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது

கடந்த மாதம் 31ம் திகதி இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரான சாரதியை பிணையில் விடுதலை செய்ய பொலிஸார் எடுத்த முடிவைக் கண்டித்து தம்புத்தேகம பிரதேசவாசிகள் பொலிஸ் நிலையத்தின் மீது கல் வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலீசார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண

ஒரே இரவில் மூன்று கொலைகள்; ஊரெழு மற்றும் விசுவமடுப் பகுதிகளில் பரபரப்பு

08.08.2012.
news
ஊரெழு மற்றும் விசுவ மடுப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மூவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஊரெழு, பொக்கணையில் வட்டக்கச்சியைச் சேர்ந்த சிவராசா (வயது45) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தை கோடரியால் கழுத்து வெட் டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். விசுவ மடு, ரெட்பானாவில் வேலு விஜயகுமார் (வயது33) கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட பின்னர் தூக் கில் தொங்கவிடப்பட்டுள் ளார். விசுவமடு, நெத்தலி யாற்றுப் பகுதியில் அருணா சாலம் இராமநாதன் (வயது 73) என்ற முதியவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிவராசா மற்றும் இராம நாதன் கொலை செய்யப் பட்டபின்னர் அவர்கள் இருவரது வீடுகளும் எரியூட்டப்பட்டுள்ளன. ஊரெழு பொக்கணையில் சிவராஜா வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவரது கழுத்தில் கோடரியால் வெட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
வட்டக்கச்சியைச் சேர்ந்த குறித்த நபர் ஊரெழுவில் மேசன் வேலைசெய்து வருகின்றார். கடந்த மாதம் 28 ஆம் திகதி வீட்டிலிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றார்.
முத்திரைச் சந்தைப் பகுதியிலுள்ள வேலைத்தளத்தில் தங்கி நின்றே அவர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் வட்டக்கச்சியிலுள்ள தனது மனைவியுடன் தொலைபேசியில் கதைத்துள்ளார்.
இதன் போது இன்னும் சில நாள்களில் வேலை முடிந்து திரும்பி வருவதாகவும் கூறியதாக அவரது மனைவி முதற்கட்ட விசாரணைகளின்போது தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் இரவு ஊரெழு பகுதியிலுள்ள ஆலயமொன்றில் இசை நிகழ்ச்சி நடந்தது.
இரவு இசை நிகழ்ச்சி முடிந்த பின்னர் வீடு திரும்பிய மக்கள் ஊரெழு பொக்கணைப் பிரதேசத்தில் வீடொன்று எரிவதை அவதானித்துள்ளனர். வீட்டின் நெருப்பை அணைத்த பின்னர் உள்ளே சென்று பார்த்த போது வட்டக்கச்சியைச் சேர்ந்த குறித்த நபர் கழுத்துவெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
கோடரியால் அவரது கழுத்தில் இரண்டு தடவைகள் வெட்டப்பட்டுள்ளதாகவும் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கோடரியை வீட்டின் முன்புறத்தில் இருந்து மீட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாகக் கோப்பாய் பொலிஸார் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை
விசுவமடுப்பகுதியில் நேற்றுமுன்தினம் விசுவமடு, ரெட்பானா ,வள்ளுவர்புரத்தைச் சேர்ந்த வேலு விஜயகுமார் (வயது 33), மற்றும் விசுவமடு நெத்தலியாற்றுப் பகுதியைச் சேர்ந்ந அருணாசலம் இராமநாதன் (வயது 73) ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
வேலு விஜயகுமார் அவரது வீட்டின் முன்பாக 10 மீற்றர் தூரத்திலுள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டார்.
வீட்டிலிருந்து, வெளியில் சென்று வருவதாக கூறிச்சென்ற பின்னர் வீட்டு முற்றத்திலுள்ள மரமொன்றிலேயே தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டிருந்தார். கிணற்றுக் கப்பிக்குப் பயன்படுத்தும் கயிற்றிலேயே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இவரது சடலம் உடல் கூற்றுப் பரிசோதனை செய்யப்பட்ட போது கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட பின்னரே தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருணாசலம் இராமநாதன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பின்னர் அவரது சடலத்தை, வீட்டோடு சேர்த்து தீ மூட்டியுள்ளனர். வீடு முற்றாக எரிந்துள்ளதுடன் சடலமும் பாதியளவில் எரிந்துள்ளது. உடல்கூற்றுப் பரிசோதனைகளின் போதே வெட்டிக் கொலை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாகவும் முல்லைத்தீவுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

மோதிவிட்டுத் தப்பியது மோ.சைக்கிள் மாணவன் அந்த இடத்திலேயே சாவு; மாங்குளத்தில் நேற்றுப் பரிதாபம்

08.08.2012.
news
மாகாண மட்ட புலமைப் பரிசில் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டி ருந்த மாணவனை மோதித் தள்ளிவிட்டுத் தலைமறை வாகியது மோட்டார் சைக் கிள்.சம்பவ இடத்திலேயே மாணவன் துடிதுடித்து இறந்தான்.இந்தச் சம்பவம் நேற்று மாங்குளத்தில் இடம் பெற்றது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவ தாவது:
நேற்று மதியம் பரீட்சை முடிந்து வீடு செல்வதற்காக பஸ்ஸுக்குக் காத்திருந்த சிறுவனை வீதியால் சென்ற மோட்டார் சைக்கிள் மோதிவிட்டு நிற்காது தப்பிச் சென்றது.சம்பவத்தில் குஞ்சுக்குளம் அ.த.க. பாடசாலையில் கல்விபயிலும் குஞ்சுக்குளம் மாங்குளத்தைச் சேர்ந்த கதிர்காமநாதன் கயந்தன் (வயது10) என்ற மாணவனே பலியானவராவார். கனகராயன்குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கடமை தவறிய பொலீஸ் உத்தியோகத்தர்கள் கடமையிலிருந்தே நீக்கப்பட்டனர்; அஜித் ரோகண தெரிவிப்பு

08.08.2012.
news
மது போதையில் கடமை நேரத்தில் இருந்த மற்றும் கடமையை செய்யத் தவறிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் உற்பட ஐவர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண ஒன்லைன் உதயன் தொடர்பு கொண்டு கேட்டபோது,

நேற்று முந்தினம் இரவு மிகிந்தலை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன், இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் பொலீஸ் சாரதி ஆகியோர் நடமாடும் பணியில் அமர்த்தப்பட்டனர்.

இவர்கள் மது போதையில் இருப்பதாக அநுராதபுரம் பொலிஸ் அதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து பதில் பொலிஸ் அதிகாரி ஒருவரை அவ்விடத்திற்கு அனுப்பி சோதனை செய்தபோது இரு கான்ஸ்டபிள்கள் மது போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அவர்கள் நால்வரும் மிஹிந்தளை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு இரவு பணியில் இருந்து உப பொலிஸ் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

எனினும் உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக மது போதையில் இருந்த இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் பொலிஸ் நிலையத்தைவிட்டு வெளியில் சென்றுள்ளனர்.

இதனையடுத்து உப பொலிஸ் பரிசோதகர், இரவு நடமாடும் சேவைக்கு பொறுப்பான பொலிஸ் சார்ஜன், இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் பொலீஸ் சாரதி ஆகியோர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ் ஐவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

வவுனியா சிறைசாலை கொடூரம்; மரியதாஸ் டெல்றொக்சனும் மரணம்

 08.08.2012.
news
வவுனியா சிறைச்சாலையில் சிறை காவலர்களாலும் சிறப்பு அதிரடிப்படையினராலும் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மஹர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான பாசையூரைச் சேர்ந்த மரியதாஸ் டெல்றொக்சன் (வயது-37) நேற்று இரவு மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா சிறையில் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் மஹர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு ராகம மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான வவுனியாவைச் சேர்ந்த நிமலரூபன் கடந்த மாதம் 3ஆம் திகதி மரணமடைந்தார்.
இந்த நிலையில் கை,கால் முறிந்து கடுமையாகப்பாதிக்கப்பட்டு, கோமா நிலையில் இருந்த மரியதாஸ் டெல்றொக்சன் ஒரு மாதம் கடந்த நிலையில் நேற்று இரவு மரணமாகியுள்ளார்.
வவுனியா சிறைச்சாலையில் இருந்து அனுராதபுரத்திற்கு அழைத்துச் சென்ற மூன்று அரசியல் கைதிகளை மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி, வவுனியா சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் போராட்டம் நடத்தியிருந்தனர்.
இதன்போது கைதிகள் மூன்று சிறை அதிகாரிகளை 16 மணிநேரம் பிணையாக பிடித்து வைத்திருந்தாக கூறி, அதிரடிப்படையினரின் உதவியுடன் சிறைச்சாலை சுற்றிவளைக்கப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 தமிழ் அரசியல் கைதிகளும் கடுமைபாகத் தாக்கப்பட்டதுடன் அவர்களில் 27 பேர் அங்கிருந்து மகர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.
இவர்களில் 3 பேர் கடுமையான பாதிப்பிற்குள்ளான நிலையில் ராஹம வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டனர். இதன்போது சிகிச்சை பயனின்றி வவுனியாவைச் சேர்ந்த நிமலரூபன் மரணமடைந்தார்.
யாழ்ப்பாணம்,மன்னார் ஆகிய இடங்களைச் சேர்ந்த இருகைதிகளும் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று இரவு மரியதாஸ் டெல்றொக்சன் ( புனித செபஸ்தியார் வீதி, பாசையூர் )மரணமாகியுள்ளார்.
இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசைய்யப்பட்டிருந்தார்

சுறா மீனுள் இருந்து குட்டிச் சுறாவுடன் ஒருவர் வெளியே வந்துள்ளார்


 

.08.08. 2012,
சுறா மீன் ஒன்றைப் பிடித்த மீனவர்கள் சிலர் அதனை மயக்கம் அடையச் செய்வதற்காக போராடிக் கொண்டிருந்த வேளை குறித்த சுறா மீனுள் இருந்து குட்டிச் சுறாவுடன் ஒருவர் வெளியே வந்துள்ளார். சுவாரஸ்யமாக காணப்படும் இச்சம்பவமானது கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டதாகும்.

அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் பௌத்த பிக்குகள் நடத்தும் அடாவடித்தனம்!– மாவை சேனாதிராசா

08.08.2012.
அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் பௌத்த பிக்குகள் நடத்தும் அடாவடித்தனத்தைக் கட்டுப்படுத்த தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் ௭ன யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம் ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நேற்று முன்நாள் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
பௌத்த ஒற்றையாட்சி நாடாக இலங்கையை மாற்றுவதற்கு அரசு சதி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஆரம்பமாகவே தமிழ், முஸ்லிம் சமூகங்களை இலக்காகக் கொண்டு அரசு நயவஞ்சக செயற்பாடுகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இத்தகைய அரசின் சதி நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றுபட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
பேரினவாத, மதவாத அடாவடித்தனங்களை சிறுபான்மை சமூகங்களுக்கெதிராக கட்டவிழ்த்து விட்டுள்ள அரசாங்கம் அதற்கான தூண்டுதல்களையும் மேற்கொண்டு வருகின்றது.
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைகள் அமைச்சர்களாக அரசாங்கத்தில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் போதும் அரசின் இலக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் மீது ஒரே வகையாகவே உள்ளது.
இந்து ஆலயங்கள் மீது பௌத்த பேரினவாதம் முன்னெடுத்து வரும் அடாவடித்தனங்கள் இன்று முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் மத்ரஸாக்கள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பௌத்த பிக்குகள் முன்னின்று நடத்தும் இவ் அடாவடித்தனங்களுக்கு அரசின் ஆசீர்வாதமும் மறைமுகமாக கிடைத்து வருகின்றது.
இத் தொடரின் அடிப்படையிலேயே பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில் பாணமை பிள்ளையார் ஆலய விக்கிரகமும் உடைத்தெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கெதிராக இடம்பெற்று வரும் பேரினவாத, மதவாத அடாவடித்தனங்கள் போன்று உலகில் வேறு எங்கும் இடம்பெறுவதில்லை. தமிழ், முஸ்லிம் மக்கள் இந்நாட்டில் அடையாளமுள்ள சமூகங்கள் இல்லையென காட்ட முனையும் அரசின் நடவடிக்கை உச்சநிலைக்குச் சென்றுள்ளது.
ஆதிக்க வெறியாட்டம் மூலம் நாட்டை பௌத்த சிங்கள ஒற்றையாட்சி நாடாக மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஒற்றையாட்சி ஆதிக்கம், பௌத்த இனவாதம் மூலம் இலங்கை முழுவதும் சர்வாதிகார முடிசூடா மன்னன் ஆட்சி முறைமைக்கு இட்டுச் செல்லும் நிலைமை உருவாகியுள்ளது. இதன் காரணமாகவே சிறுபான்மையின மக்களின் மதச் சுதந்திரம் பறிக்கப்பட்டு வருகிறது.
வட, கிழக்கில் தங்களை தாங்களே ஆளும் உரிமை பெற்று வாழ வேண்டுமென்ற இலட்சியம் கொண்ட தமிழ் மக்கள் அரசுக்கெதிராக வாக்களித்து தமது அரசியல் உரிமையை வென்றெடுக்க முன்வர வேண்டும். ஆகவே சிறுபான்மையினரான நாம் அனைவரும் இன, மத வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு அரசின் சதி நடவடிக்கைகளை முறியடிக்க போராட வேண்டும்.
முஸ்லிம்கள் தமிழர்களுக்கெதிரானவர்கள் எனக் காட்ட முனையக் கூடாது. தமிழர்களுக்கெதிராகவும் அவர்களின் அபிலாஷைகளுக்கு எதிராகவும் முஸ்லிம் காங்கிரஸ் செயற்படக்கூடாது எனவும் குரல் கொடுத்தனர்.
உணர்வு பூர்வமாக முஸ்லிம்களிடையே எழுந்த அப் பூகம்பத்தின் விளைவாகவே கிழக்குத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட நேரிட்டது. முஸ்லிம் மக்களின் இத்தகைய உணர்ச்சி பூர்வமான எழுச்சியை தமிழர் தரப்பும் பின்பற்ற வேண்டும்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்பும் தமிழ், முஸ்லிம் மக்கள் அதே உணர்வோடு ஒன்றிணைய வேண்டும். இவ்வாறானதொரு சூழ்நிலை எதிர்காலத்தில் உருவாகும் போது இனப்பிரச்சினை தீர்விலும் சுமுகமான தீர்வினை எங்களுக்கு பெற்றுக் கொள்ள முடியும். நம் தாயகத்தில் நமது உரிமையை நிலை நாட்டுவதற்கான சந்தர்ப்பமாக கிழக்குத் தேர்தலை பயன்படுத்துவோம்.
இத்தேர்தலில் அரசாங்கம் தனது முழுப் பலத்தையும் படை பலத்தையும் தன் கூலிப்படைகளையும் பயன்படுத்தி வெற்றியடைய முயற்சிக்கும். அதேவேளை இறுதி நேரத்தில் வாக்களிக்கச் செல்லாமல் தடுக்கும் உபாயங்களையும் கையாளும்.
கிறீஸ் பூதம், கழிவு எண்ணெய் கலாசாரம் போன்ற சேஷ்டைகள் வரலாம். இது விடயத்தில் நாம் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். இதேவேளை, வாக்களிப்பு வீதத்தையும் நாம் அதிகரித்துக் கொள்ள வேண்டும். இவ்விடயம் தொடர்பாக வாக்காளர்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளில் நாம் ஈடுபட வேண்டும்.
எமது நில ஆக்கிரமிப்புக்காகவும் வாழ்வுரிமைக்காகவும் சாத்வீகப் போராட்டங்களையும் மாநாடுகளையும் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தோம்.
இதற்கிடையில் தேர்தல் குறுக்கே வந்து விட்டது. இந்நாட்டில் ஒரே தேர்தல் மயம் தான் தேர்தலுக்காக கோடிக்கணக்கான ரூபா செலவிடப்படுகிறது. இவை அனைத்தும் மக்களின் பணமாகும். மக்களின் பணத்தை அரசு செலவிடுகிறது.
இவற்றுக்கெல்லாம் ஆப்புவைக்க நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். கிழக்குத் தேர்தல் மூலம் எமது எதிர்ப்பை வெளிக்காட்டுவோம் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மட்டு.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,முன்னாள் எம்.பி சந்திரநேரு சந்திரகாந்தன்,காரைதீவு பிரதேச சபை தவிசாளர் செல்லையா இராசையா மற்றும் கட்சி ஆதரவாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்

தரம் குறைந்த எரிபொருளுக்கு காரணம் அரசியல் தலைவர்களின் அசமந்தப் போக்கு: அநுரகுமார

 
08.08.2012.
அரசியல் தலைவர்கள் மற்றும் கனியவளக் கூட்டுத்தாபன அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால் மீண்டும் ஒருமுறை நாட்டில் தரம் குறைந்த எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இந்த விடயங்களை தெரிவித்தார். கொள்வனவு செய்யப்பட்ட டீசலில் எந்தப் பிரச்சினையும் இல்லை என அரசாங்கமும் கனியவளக் கூட்டுத்தாபனமும் கூறிவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாகனங்களை பழுதாக்கிய டீசலை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அதில் எந்த சிக்கலும் இருக்கவில்லை என கனியவளக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளதாக அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இருந்தபோதும், கனியவளக் கூட்டுத்தாபனத்தால் விநியோகிக்கப்பட்ட டீசலை பயன்படுத்திய வாகனங்கள் பயண இடைநடுவில் செயலிழந்து விடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்கவின் கருத்துக்கு பதிலளித்த கனியவளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, தரம் குறைந்ததாக கருதப்படும் டீசல் வெளிநாட்டுக்கு பரிசோதனைக்கென அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அந்த பரிசோதனை அறிக்கையின் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நேற்று பாராளுமன்றில் தெரிவித்தார்

பிரிட்டன் கம்பனிக்கு எதிராக ஐ.தே.க முறைப்பாடு

 
08.08.2012.
இலங்கையில் நாணயத்தாள்களை அச்சடிப்பதற்காக நிறுவப்பட்ட “டி லா றூ” எனப்படும் பிரித்தானியக் கம்பனிக்கு எதிராக, பிரித்தானிய உயர்ஸ்தானிகரலாயத்தில் ஐக்கிய தேசிய கட்சி முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் பங்கு பரிவரத்தனை கம்பனியான “டி லா றூ” வினால் அந்நிய செலாவணியை மீதப்படுத்த முடியுமெனவும் வேலை வாயப்புகள் உருவாகும் எனவும் கருதப்பட்டது.
ஆனால் அண்மைக்காலத்தில் ஒரு லத்தீன் அமெரிக்கா நாட்டிலிருந்து நாணய தாள்களை இறக்குமதி செய்வதற்கான ஒரு ஒப்பந்த வேலையை மத்திய வங்கி இந்த கம்பனிக்கு வழங்கியுள்ளது. அத்துடன் இந்த வேலைக்கான கேள்விப் பத்திரமும் கோரப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
எனவே இக்கம்பனி அந்த நாட்டின் ஊழல் சட்டத்தின் கீழ் வருகின்றது.
குறித்த கம்பனி கொடுக்கல் வாங்கல் விடயத்தில் மத்திய வங்கிக்கு இலஞ்சம் அல்லது தரகு வழங்கியுள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளது. இதனை அறிய விரும்புவதாக ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பிரித்தானய உயர்ஸ்தானிகராலயத்துடன் கலந்துரையாடவுள்ளோம்.
இதேவேளை, இப்படியான நாணயத்தாள் இறக்குமதி எதுவும் நடக்கவில்லையென மத்தியவங்கி ஆளுநர், அஜித் நிவாட் கப்ரால் கூறினார். நாம் விரும்பினால் எந்த நாட்டிலும் நாணய தாள்களை அச்சிடமுடியும்.
இது சட்டத்துக்கு முரணானது அல்ல. இருப்பினும் நாம் அப்படி செய்யவில்லை.“டி லா று” மூலம் இலங்கையில் நாணய தாள்களை அச்சடித்தோம் என அவர் தெரிவித்துள்ளார்

டெசோ மாநாட்டிற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடாத்த திட்டம்

 
08.08.2012.
சென்னையில் எதிர்வரும் 12 ம் திகதி இடம்பெறவுள்ள டெசோ எனப்படும் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டுக்கு எதிராக, எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தேசப் பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அந்த அமைப்பின் தலைவர் குணதாச அமரசேகர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் 12 ம் திகதி சென்னையில் டெசோ மாநாடு இடம்பெறவிருக்கின்றது. இதன்போது, கருணாநிதி தலைமையில் இலங்கையில் ஈழம் அமைப்பது தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்படவுள்ளது.
இந்த மாநாட்டுக்கு இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்திடம் தமது எதிர்ப்பை வெளியிட்ட போது இந்திய அரசாங்கம் அதனை கவனத்தில் கொள்ளவில்லை.
எனவே, டெசோ மாநாடுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எதிர்வரும் 12ம் திகதி முற்பகல் 10 க்கு கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரகத்திற்கு முன்பாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தப் போவதாக குணதாச அமரசேகர தெரிவித்தார்

கச்சதீவை மீட்க மீனவர்களுடன் சோ்ந்து கடலில் இறங்கி போராடத் தயார் என்கிறார் விஜயகாந்த்

 
08.08.2012.
தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு அச்சப்படாமல் தம்முடன் மீனவர்கள் ஒன்றுசேர்ந்து வந்தால் கச்சதீவை மீட்க கடலில் இறங்கி போராடத் தயாராக இருப்பதாக தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக கட்சி சார்பில், இராமநாதபுரம் அரண்மனை முன்பாக நடைபெற்ற வறுமை ஒழிப்பு தின விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் மேலும் பேசியதாவது:
இலங்கையில் போர் முடிவுற்ற பிறகும், இன்று வரை அந்நாட்டு கடற்படையின் அட்டூழியத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. முதல்வர் பிரதமருக்கும், பிரதமர் இலங்கை அதிபருக்கும் கடிதம் எழுதத்தான் செய்கிறார்களே தவிர, இலங்கை இராணுவத்தின் அத்துமீறல்களை தடுக்க முடியவில்லை.
கச்சதீவை மீட்டால்தான் தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படும். கச்சதீவு ஒப்பந்தத்தை இலங்கை மீறிக் கொண்டிருப்பதை மத்திய அரசு தட்டிக் கேட்கவே இல்லை.
மீனவர்கள் என்னுடன் ஒற்றுமையாகவும், ஆளும் கட்சிக்கு பயப்படாமலும் வந்தால் கச்சதீவை மீட்கும் வரை போராடி அதனைத் திரும்பப் பெற்றுத்தர முடியும்.
ஆளும் கட்சிக்கு பயப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள். என்னை கைது செய்யப் பார்க்கிறார்கள். என் மீது வழக்குப் போட்டிருக்கிறார்கள். ஆனால், நான் யாருக்கும் பயப்படமாட்டேன். எந்த வழக்கையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் சிறையில் இருக்கத் தயாராக இருக்கிறேன்.
எம்.ஜி.ஆர். மக்களை ஏமாற்றாமல் ஆட்சி செய்ததால்தான், தொடர்ந்து 11 ஆண்டுகள் முதல்வராக இருக்க முடிந்தது. கருணாநிதியும், ஜெயலலிதாவும் மக்களை ஏமாற்றியதால்தான் தொடர்ந்து ஆட்சிக்கு வர முடியவில்லை.
தேமுதிக தொண்டர்களின் கடுமையான உழைப்பால்தான், இன்று அதிமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது என்பதை அதிமுக மறந்து விடக்கூடாது. அதிமுக அரசு பழி தீர்க்கும் எண்ணத்தில் செயல்படாமல், மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டும், என்றார் விஜயகாந்த்

மன்னார் நீதவான், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதத்தை மீறிச் செயற்பட்டுள்ளார்: சபாநாயகர்

 
08.08.2012.
மன்னார் நீதவான், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்களை மீறிச் செயற்பட்டுள்ளதாக சபநாயகர் சமால் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றில் ஆற்றும் உரை தொடர்பில் வெளிநபர்கள் அச்சுறுத்தல் விடுக்க முடியாது.
மன்னார் நீதவான், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுசெய்ன் பாருக்கை அச்சுறுத்தியதாக சுமத்தப்பட்ட குற்ற்சாட்டு தொடர்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“நீ நாடாளுமன்றில் என்னைப் பற்றி பேசினாய் அல்லவா, போராட்டத்தில் நீ கலந்து கொண்டாய் அல்லவா என” என மன்னார் நீதவான் தம்மை அச்சுறுத்தியதாக ஹுசெய்ன் பாருக் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 78 நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் அடிப்படையில் இதனை வரப்பிரசாத பிரச்சினையாக கருதப்பட முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
வரப்பிரசாத பிரச்சினை ஏற்பட்டிருந்தால் அதற்காகக் குரல் கொடுக்கத் தயார். எனினும் இது வரப்பிரசாத பிரச்சினையா அல்லது நீதிமன்றத்தின் மீது அழுத்தம் பிரயோகித்த சந்தர்ப்பமா என ரணில் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனினும், 78 நிலையியற் கடட்ளை இதற்கு பொருந்தாது எனவும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் கௌரவத்தை பாதுகாக்க வேண்டியது தமது பொறுப்பு எனவும் சபாநாயகர் சமால் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றில் ஆற்றிய உரை தொடர்பில் எவராலும் கேள்வி எழுப்ப முடியாது. இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்