Link

ணக்கம் வருக வருக....

Pages

செவ்வாய், 2 அக்டோபர், 2012

இலங்கை தொடர்பில் கேள்வி கேட்க ஐ.நாவில் அனுமதி இல்லை?: இன்னர் சிட்டி பிரஷ் குற்றச்சாட்டு

 
செவ்வாய்க்கிழமை, 02 ஒக்ரோபர் 2012,By.Rajah.ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை உள்ளிட்ட சில குறிப்பிட்ட நாடுகள் தொடர்பிலான கேள்விகளை கேட்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்று இன்னர் சிட்டி பிரஷ் இணையத்தளம் குற்றம் சுமத்தியுள்ளது.
நேற்றைய தினம் பான் கீ மூன் மற்றும் ஜீ.எல்.பீரிஷ் ஆகியோர் சந்தித்த பின்னர், பான் கீ மூன் செய்தியாளர்களை சந்திப்பதாக இருந்தது. இதற்காக சில கேள்விகளை இன்னர் சிட்டி பிரஸ் முன்னதாகவே சமர்ப்பித்திருந்ததாக கூறப்படுகிறது.
எனினும் பான் கீ மூன் உரையாற்றும் போது, கேள்விகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில் நேற்று பிற்பகல் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிப் பொதுச்செயலாளரது ஊடக சந்திப்பும் இடைநிறுத்தப்பட்டது.
அத்துடன் வழமையாக இடம்பெறுகின்ற ஐக்கிய நாடுகளின் பேச்சாளரது நாளாந்த சந்திப்பு, இன்றைய தினம் நடைபெறவுள்ள சபையின் பிரதிப் பொதுச்செயலாளர் ஜோன் எலிசனின் செய்தியாளர் சந்திப்பின் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தற்போது இந்த சந்திப்பும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பான் கீ மூனின் ஐக்கிய நாடுகள் சபையில், இலங்கை தொடர்பான கேள்விகளை முன்வைக்க தடை செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் கூறும் விடயங்களுக்கு புறம்பாக எதனையும் கேட்க முடியாதிருப்பதாகவும் இன்னர் சிட்டி பிரஷ் சுட்டிக்காட்டியுள்ளது

வடக்கில் மாகாண சபை இன்றி, திவிநெகும திட்டத்தை அமுலாக்க முடியாது

 
செவ்வாய்க்கிழமை, 02 ஒக்ரோபர் 2012,By.Rajah.வடமாகாணத்தில் மாகாண சபை அமைக்கப்படாத நிலையில், திவி நெகும சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது சட்டத்துக்கும், அரசியல் அமைப்புக்கும் முரணானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள முக்கிய சட்டத்தரணி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் 13ம் திருத்தச் சட்டத்தின் கீழும், இலங்கையின் அரசியல் யாப்பின் அடிப்படையிலும், மாகாண சபைகளின் அதிகாரத்தை குறைக்கும் வகையிலான சட்ட மூலம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது, ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாணத்தில் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் இலங்கையில் வடக்கிலும் மாகாணம் என்ற ஒன்று இருக்கின்ற நிலையில், அதன் மாகாண சபையில் இந்த சட்ட மூலத்துக்கு அனுமதி பெறுவது முக்கியமானதாக காணப்படுகிறது.
இந்த நிலையில், வடமாகாண சபையின் அனுமதியை பெறுவதற்காக, வடமாகாண ஆளுனரின் தன்னிச்சையான அனுமதியை அரசாங்கம் பெற்றுக் கொள்ளுமா, அல்லது அரசியல் காரணங்களுக்காக வடக்கில் உடனடியாக அரசாங்கம் தேர்தல் நடத்துமா என்ற கேள்வியே தற்போது எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

போர் இடம்பெற்ற பிரதேசங்களில் வேலையில்லாப் பிரச்சினை உக்கிரம்

 
 
செவ்வாய்க்கிழமை, 02 ஒக்ரோபர் 2012,By.Rajah.போர் இடம்பெற்ற பிரதேசங்களில் வேலையில்லாப் பிரச்சினை உக்கிரமடைந்துள்ளதாக IRIN ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும், பிரதேசத்தைச் சேர்ந்த இளம் தலைமுறையினர் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
வடக்கில் வேலையற்றோர் எண்ணிக்கை பற்றிய உத்தியோகபூர்வ புள்ளி விபரங்கள் இல்லாத போதிலும், வடக்கில் கிட்டத்தட்ட 30 வீதமானவர்கள் வேலையின்றி அல்லலுறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2012ம் ஆண்டு அரசாங்கப் புள்ளி விபரங்களின் அடிப்படையில் வடக்கில் 280000 இளைஞர் யுவதிகள் வாழ்ந்து வருகின்றனர். வடக்கின் பல பகுதிகளைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் கூலித் தொழிலையையே பிரதான வாழ்வதாரமாகக் கொண்டுள்ளனர். பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு நிரந்தரத் தொழில் கிடையாது.
தெற்கைச் சேர்ந்தவர்களும் இராணுவத்தினரும் அதிகளவில் வடக்கு அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதனால், பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.
பொதுவாக வடக்கின் பல பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் இன்னமும் உரிய முறையில் முதலீடு செய்யவில்லை எனவும் இதனால் தொழில் வாய்ப்புக்கள் மிகவும் வரையறுக்கப்பட்ட அளவில் காணப்படவதாகவும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது