Link

ணக்கம் வருக வருக....

Pages

வியாழன், 25 அக்டோபர், 2012

பாம்புகளும் பரமசிவன் கழுத்தும் சிறப்பு கட்டுரைகள் >>

26.10.2012.By.Rajah.குறித்துரைக்கப்பட்ட குறிக்கோள் அல்லது குறிக்கோள்களை அடைவதற்கானதொரு கட்டமைக்கப்பட்ட ஒழுங்கில் ஒழுகுகின்ற, இரண்டு அல்லது மேற்பட்ட நபர்களுடைய இணைவு நிறுவனம் எனப்படுகின்றது.
முகாமைத்துவத்துறை விற்பன்னரான பார்ஹர் பொலெட் எனும் அறிஞர் 1941 ஆம் ஆண்டில் சொல்லிச் சென்ற வரைவிலக்கணத்தின் இலகுபடுத்தப்பட்ட தமிழாக்கம் இது! "குறித்துரைக்கப்பட்ட", "கட்டமைக்கப்பட்ட", "ஒன்றிணைக்கப்பட்ட'' போன்ற வினையெச்சங்களுக்குள் "குறிக்கோள்", "ஒழுங்கு", "நபர்கள்" எனும் பெயர்ச் சொற்கள் கச்சிதமாகப் பொருத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள குறித்த நிறுவலினுள், வினையெச்சங்களின் பிரசன்னமில்லாத போது, பெயர்ச்சொற்களிடம் வெறுமையே எஞ்சும் என்பதை கொஞ்சம் மூன்றாம் கண் திறந்து பார்த்தால் தெரிந்து கொள்ள முடியும்.

எவராலும். வெறும் கற்களாலும், சாந்தினாலும் மரத்தினாலும் முடிக்கப்பட்ட "வீடு", மனிதர்களும், உணர்வுகளும், அன்பும், பண்பும் இணைந்து பின்னால் "இல்லம்" ஆக மாறுவதை மேலே கூறப்பட்ட நிலைமைக்கு இன்னொரு உதாரணமாக்கிட முடியும்.

அரச இயந்திரத்தின் கீழ் இயங்குகின்ற நிறுவனங்கள் என்பனவும், பொது வரைவுக்குள் அகப்பட்டுக் கொள்வதனால் சகல நிபந்தனைகளுக்குமான எழுத்துருவில் அரச, தனியார் என பாகுபடுத்தப்படுவதில்லை. இன்றைய நாள்களில் ஐரோப்பிய தேசங்களில் பிரபல்யமடைந்து வருகின்ற "காகிதமற்ற அலுவலகங்கள்" (Paperless offices) போன்ற புரட்சியாக" மனிதர்களற்ற அலு வலகங்கள்" எனும் மாற்றம் நிகழுமாயின் மட்டுமே உணர்வுகளற்ற நிறுவனங்களை தாபன விதிக் கோவையுடன் 100 வீதம் ஒத்துப் போகின்றவையாக இறுக்க முடியும் என்பது யதார்த்தம். தவிர, என்பு தோல் போர்த்த, இரத்தம் சுழன்றோடும், சிரிக்கும் விலங்குகளால் அங்கத்துவம் வகிக்கப்படுகின்ற நிறுவனங்கள் யாவையும், "நெகிழ்வு" எனும் மரியாதைக்குரிய பிரயோகத்துடனான "விதிவிலக்கினை"ப் பெறுவதிலிருந்து தவறுவதேயில்லை.

எல்லா அதிகாரிகளும், எல்லாப் பணியாளர்களும் எல்லாச் சேவகர்களும் அரசின் அங்கங்கள் என்பதற்கு மேலாக யாரோவொரு தாயின் மகள் யாரோவொரு தந்தையின் மகள், அங்காடியிலிருந்து திரும்பும் பெண்ணின் கணவர், எதிர்ப்படும் மனிதனின் துணைவி, அந்தப் பேருந்திலிருந்து கைகாட்டும் குழந்தையின் தந்தை, வெள்ளிக்கிழமை முடிந்த சந்தோஷத்தோடு போகின்ற மாணவனின் தாய் போன்ற வகிபாகங்கள் உணர்வுபூர்வமானவையா? இல்லையா? இன்னமும் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுச் சொல்ல வேண்டுமாயின் "யாவருமே மனிதர்கள்" இல்லையா? கண்ணீர், வலி, துக்கம், சிரிப்பு, அழுகை போன்ற வெளிப்பாடுகளை வீசி விட்டுத்தான் அலுவலகம் வருபவர்கள் இல்லை எவருமே!

போரின் அவலங்களைத் தாண்டியும் மக்களுக்கு சிறப்பான சேவையாற்றியவர்கள் என்கின்ற எழுதாப்பெருமை வடக்கு கிழக்கின் தமிழ் பேசும் அரச ஊழியர்கள் பற்றி நாட்டின் ஏனைய பாகங்களில் உள்ளவர்களால் இன்னும் பேசப்படுகின்றது. ஆனால் இன்றைய தமிழ் பேசும் பகுதிகளின் அரச நிர்வாகிகள் உண்மைத் தோலின் மேலுள்ள வியாதிகளை இன்னும் எத்தனை நாளைக்கு 'பழைய' அரிதாரங்களால் பூசி மெழுகி மறைத்திடமுடியும்? குறிப்பாக 'வடமாகாண சபை'யின் தொற்று நோயாளர் விடுதி, அதிகார, ஏதேச்சாதிகார, நோயாளிகளால் நிரம்பி வழிவதை என்ன வகை 'ஸ்டிக்கர்' ஒட்டி மறைக்கப் போகின்றோம்?

இன்றைய திகதி வரைக்கும் வெளித் தெரிகின்ற முறைகேடுகள் வெகு சில வாகவும், அறியப்படாத அவலங்கள் மிகப் பலவாகவும் சடுதியாக ஆர்முடுகுகின்ற "நிர்வாக நகரம்" என்ற சொல் வட மாகாண சபையைப் பொறுத்த மட்டில் மிகையில்லை. இராணுவ மிடுக்கும், இதயக் கோளாறும் கடும் போட்டியிருக்கின்ற "கடவுள் பாதி, மிருகம் பாதி கலந்த" மனிதனின் மீதான புகார்கள், குற்றப்பட்டியல்கள் மீதான விசாரணைகள் என்றைக்குமே தீர்வு கண்டுவிடாத பேரினவாதத்தின் ஜனநாயக "வால்வில்" உள்ள பெரும் அடக்குமுறை அடைப்பு.

அது மாத்திரம் தான், பிரச்சினைகளின் ஏக புத்திரன் என்றால், தலைகீழாக நின்றாகினும் தலை முழுகி விடலாம்! இருக்க, இன்றைய இடங்களை தக்கவைக்கவும், நாளைய இடங்களை முன்பதிவுறுதி செய்யவும், நேற்றைய காலாவதிகளை நீடிக்கவும் கருதி, ஆறறிவிலிருந்து ஐந்து, நான்கு என்று அதலபாதாளத்துக்குள் மனிதமிழக்கும் எம்மவர்கள்தானே முதன்மைச் சிக்கல்கள்.

பிரிக்கப்பட்டதன் பின் இன்னமும், மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற பிரகிருதிகள், மன்னிக்க, பிரதிநிதிகள் சபை ஒன்று தோற்றுவிக்கப்படாமல் இருப்பது மட்டுமே இவையாவைக்குமான "சர்வரோக நிவாரணி" என்று எடுத்த எடுப்பிலேயே கம்பீரம் காட்டிவிடமுடியாது. காரணம், "வீழ்த்திவிட முடியாத மாகாண சபை" என்று தொடை தட்டி, "ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி"யின் மூக்குக்கு முன்னால் சபதம் செய்யுமளவுக்கு, மீதமிருந்த கொஞ்சநஞ்ச "விரல் வித்தை"யையும் சற்று முன்னரே ஹசன் அலியிடமும் ஹக்கீமிடமும் காவு கொடுத்த, வலி சுமக்கும் உணர்வாளர்கள் எவரும் துணிந்து விடப் போவதில்லை. (பார்த்தீர்களா, கடைசியா "முன்னணி" பெயரைச் சரியாகவே எழுதிட்டோமே!)

"மூன்று நாள் பயிற்சி நெறிக்கான விண்ணப்பம் கோரி வரும் சுற்றறிக்கை கடிதங்களைக் கூட ஊழியர்களிடம் மறைப்பது", "தேவை நிமித்தம் விண்ணப்பிக்கின்ற தற்காலிக இடமாற்றக் கோரிக்கைகளைக் கூட முற்றளிக்காமல் முடக்குவது", "ஊக்குவிப்புக் கொடுப்பனவு, பதவியுயர்வுகள், சம்பள ஏற்றங்களுக்கான விண்ணப்பங்களை பரிந்துரைக்கான ஒப்பமிடாமல் இழுத்தடிப்பது" என்று விசமத்தனமாகத் தொடங்கும் அதிகார விசக் கொடுக்கின் தீண்டல்களால் பாதிக்கப்படாத "வரலாற்றுத்தாள்" களும் "ஆண்டறிக்கை" களும் வெகு சொற்பமே!

கடந்த மாதங்களில் அலுவலக மேசைகளில் கோப்புகளை விட அலாதியாக விரித்து வைக்கப்பட்டிருந்த சம்பவங்களான மகளிர் கல்லூரி அதிபர் நியமனத்துக்கும், முல்லைத்தீவிலிருந்து தீவகத்துக்கு தூக்கியடிக்கப்பட்ட வலயப் பணிப்பாளரின் இழுபறிக்கும் மேலதிகமாக இவ்வாரத் தொடக்கத்தில் தண்டனை இடமாற்றம் செய்யப்பட்ட முன்னாள் உள்ளூராட்சி உதவி ஆணையாளரின் இன்றைய பொம்மைக் கதிரைக்கும் காரணமான முன்னோட்டங்களே, புளிக்காத அவல்!

இற்றைக்கு சரியாக மூன்று மாதங்களுக்கு முன்பாக, வலி.தெற்கு சுன்னாகம் பிரதேச சபைக்கென்று பூரணப்படுத்தி முடிக்கப்பட்ட அழகான கட்டடம், திறப்பு விழா காண்பதற்கு முன்னைய இரவு கழிவு எண்ணெய் ஊற்றி கண்டன அபிஷேகம் செய்யப்பட்டது யாவர்க்கும் நினைவிருக்கும். அன்றைக்கு எத்தி விளையாடப்பட்ட எண்ணெய் கழிக்கப்பட்ட வாகனத்தின் இலக்கத்தைக்கூட கண்டு பிடிக்கும் அதிகாரமும், கையில் வெண்ணையும் இருக்கின்ற போதிலும் தண்டிக்கப்பட்டது யார்?

வலி.தெற்கு பிரதேச சபையின் தவிசாளரிடம் கட்டடத்தின் சாவியை ஒப்படைத்த நேரடிக் காரணியாக அடையாளம் காணப்பட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளரை பெயரே இல்லாத பதவியொன்றுக்கு இட்டு நிரப்பி ஆத்ம திருப்தி கண்டுகொண்டது அதிகாரி மையம்.

கட்டட ஒப்பந்தக்காரருடனான உடன்படிக்கை வாசகங்களின் பிரகாரம், வலி.தெற்கு பிரதேச சபையிடம்தான் புதுக்கட்டடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்கின்ற விடயம், அத்திபாரக் கல்லோடு சேர்த்து இடப்பட்ட விடயம். புதுக்கட்டடத் திறப்பு விழா ஆளுநரின் முதன்மையிலிருந்து தவறி, சபையின் மக்களதிகாரத்தைக் கைவசம் கொண்டுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரிடம் சென்றுவிடக் கூடாதென்கின்ற அழுக்காறு, ஆயுத முனையில் மிரட்டி அசிங்கப்படுத்துமளவுக்கு துணிச்சலைக் கொடுத்துக் கெடுத்தது.

காட்டுக்கந்தோர் ஒழுங்கையின் சார்பில், களமிறங்கச் செய்தது "ஸ்ரான்லி வீதி" தான் என்பது, "ஆடியபாதம் வீதிக்கு" மட்டுமன்றி அனைத்துக் குடாநாட்டுக்கும் தெரியும் என்றாலும், தவறே இல்லாத விடயத்துக்காக தண்டிக்கப்பட்டிருப்பது, அன்றைக்கு உதவி உள்ளூராட்சி ஆணையாளர் பதவியில் இருந்த இளம் அதிகாரியும், அவர் சார்பில் பதிலொப்பம் இட்டிருந்த பதவிநிலை உத்தியோகத்தருமே!

மத்திய அரசின் ஆளுகைக்குட்பட்ட பதவிப் பொறுப்பில் இருந்த குறித்த இலக்கை, நிர்வாக சேவை தரமுடைய அதிகாரியின் "பணிக்கூர்மை" யினால் கவனித்து அவரை மாகாண சபைக்குள்ளான பொறுப்பான பதவிக்குள் ஈர்ப்பதற்கு காரணமான பெரிய அம்மணியே! இன்றைக்கு தண்டனை இடமாற்றத்துக்கான உத்தரவினை ஏவிவிட்ட பெருமிதத்துக்கும் காரணமானவர் என்பது நிச்சயம் தற்செயலானதோ, துர்ப்பாக்கியமானதோ அல்ல! குறித்த நிகழ்வு பற்றிய ஒழுக்காற்று விசாரணைகள் நிலுவையில் இருந்துகொண்டிருக்கும் பொழுதே, அந்த அதிகாரிக்குக் கிடைக்கப்பெற்ற வெளிநாட்டு புலமைப் பரிசில் ஒன்றுக்கான வாய்ப்புக்கள் விமானப் பயணச்சீட்டு வரை வந்து சடுதியாக நிறுத்தப்பட்டதும் கூடவா அரச கொள்கை? "கழிவு முகாமைத்துவம்" தனியே மாநகரசபைக்கு மட்டுமன்றி, முழு மாகாண சபைக்குமான துப்புரவாக்குதலின் அவசிய சேவை. ஏனெனில் "தூக்க" வேண்டிய கதிரைகள் தொகை பெரிது! பெரிது!
An Administrator does right the things, A leader does right things — நிர்வாகி, சரியானதைச் செய்பவன் — தலைவன்''! என்றாகும் சரி என்பதை எண்ணமாகவேனும் கொள்ளாதவர்களை எவ்வாறு நிர்வாகிகளாகவோ, தலைவர்களாகவோ காணப் போகின்றோம்.

எதிர்க்கட்சி வேட்பாளரை, தனது அமைச்சரவையில் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கும் பெருந்தன்மையும், எதிரில் நின்றவனையும் பக்கத்தில் வைத்துப் பார்க்கும் பக்குவமும் இருந்ததால்தானே, இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன்பு கூட கொடுமைப்படுத்தப்பட்ட அமெரிக்க கறுப்பினத்திலிருந்து வெள்ளை மாளிகைக்கு வரமுடிந்தது ஒபாமாவினால்! எங்களால், பழைய பூங்காவில் முதிர் மரங்களின் சாவின் மேல் பங்களா கட்டி, பளிங்குக்கல் பதித்துப் பால் காய்ச்ச மட்டுமே முடிந்தது!!

"யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு ஆள்கள் போக இயலாத நேரம், சோதினை எழுதி பதவிக்கு வந்தவைக்கு இவ்வளவுதானே மண்டை" என்கின்ற அவப்பெயர்களும், அதே உயரதிகாரிகள் பெண்களாயுள்ளபோது எக்கச்சக்கமாக வீசப்படுகின்ற "தனிப்பட்ட வாழ்வின்" கறை ஊகங்களும் பொய்யாகிவிட வேண்டும் என்பதே எமது பிரார்த் தனைகளும்கூட!

"வாளி தூக்குதல்", "சோப்புப் போடுதல்", "ஐஸ் அடித்தல்", "கொள்ளி சொருகுதல்", போன்ற கொள்கைத் தொடர்களை வசனங்களாக மட்டுமே வைத்திருக்க வடமாகாணத்தின் எல்லா மேலதிகாரிகளும் வரும் நாள்க ளில் மனது வைப்பார்கள் எனவும் நம்பு வோமாக!

"நான்", "நீ" எனும்போது உதடுகள் ஒட்டுவதில்லை, "நாம்" என்கையிலேயே உதடுகள் கூட ஒட்டும் என்று அரச பேருந்துகளில் எழுதி வைத்தவர் கலைஞர் கருணாநிதி!

காலக் கொடுமை என்னவெனில், "ஆளுநர்" என்கின்றபோது ஒட்டாத உதடுகள் "அமைச்சர்" எனும் போது இறுகி ஒட்டிக்கொள்வதை மீளவும் உச்சரித்து சரிபார்க்கும் நானும் நீயும் மட்டுமே அப்பாவித் தமிழர்களடா

சீற்றத்தில் கோத்தா

25.102012.By.Rajah.13ஆவதுஅரசமைப்புத் திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ள பாதுகாப்புச் செயலர் கோத்த பாய ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போருக்குப் பிந்திய அரசியல் மூலோபாயம் இதை விட மாற்று வழி எதையும் விட்டுவைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் ஊதுகுழலாகச் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்து, இலங்கை அரசும், எதிர்க்கட்சிகளும், அனைத்துலக சமூகமும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

வடக்கில் நிரந்தரப் படைத்தளங்களை அமைப்பதற்கான உதவிகளை நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் முன்வைத்துள்ள வேண்டுகோள் தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவித்தவை வருமாறு 13 ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்து, முடிவு செய்யப்பட வேண்டும். விடுதலைப் புலிகளின் மரபுரீதியான போரிடும் திறனை அழித்து விட்டதற்காக அரசு திருப்தியடைந்து விடக்கூடாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பு தேவையற்றது. தமிழ்ப் பகுதிகளில் படைத்தளங்களை அமைப்பதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது முட்டாள்தனமானது.
போர்க்காலத்திலோ அமைதிக் காலத்திலோ படையினரின் நிலை கொள்ளல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அரசுக்கு உத்தரவிட முடியாது.

13 ஆவது திருத்தத்தில் ஒன்றுமில்லை. விடுதலைப் புலிகளால் தீவிரவாதத்தின் மூலம் அடைய முடியாததை இதன் மூலம் கூட்டமைப்பு அடைய முனைகிறது.
நட்பு நாடுகளுடனான இலங்கை அரசின் உறவுகளை சீர்குலைக்க முனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சிகளின் விளைவுகளை இலங்கை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் இரண்டு தடவைகள் சீனர்கள் கொல்லப்பட்டபோது, அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவலை தெரிவிக்கவில்லை.

2001 தொடக்கம் 2009 மே வரையிலான காலப்பகுதியில் அவர்கள் வகித்த பங்கிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்புக் கூற வேண்டும். 2001 டிசம்பர் நாடாளுமன்றத் தேர்தலின்போது, விடுதலைப் புலிகளே தமிழ் பேசும் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று இரா.சம்பந்தன் கூறியிருந்தார்.

போர் முடிவுக்கு வந்த பின்னர் தமிழர் பகுதிகளில் வெளியாட்கள் குடியேற்றப்படுவதான குற்றச்சாட்டுகளின் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்த முனைகிறது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெளியாட்களை குடியர்த்துவதற்கு இலங்கை அரசுக்கு எந்தத் தேவையும் இல்லை. ஆனால், நாட்டின் எந்தப் பகுதியிலும் வசிக்கின்ற உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும்.

தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு சட்டம் ஏனையவர்களுக்கு ஒரு சட்டம் இருக்க முடியாது. மோதல் இடம்பெற்ற காலங்களில் வடக்கு, கிழக்கில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைதியாக வாழ்கின்றனர்.

அதுபோலவே, ஏனைய மக்களுக்கும் நாட்டின் எந்தப் பகுதிகளிலும் வசிக்கின்ற உரிமை உள்ளது. இதனை அரசியல்கட்சிகளோ, அரசியல்வாதிகளோ பிரச்சினையாக்கக் கூடாது என்றார் அவர்

சீனர் வைரக்கல் விழுங்கியது அதிசயமா? - தயாசிறி

25.10.12.By.Rajah.மஹிந்த சிந்தனை ரணசிங்க பிரேமதாசவினால் உருவாக்கப்பட்டதல்ல. அது மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டது. அதனைப் பற்றித்தான் கேள்வி கேட்டிருந்தேன் அதற்கு நேரடியாகப் பதிலளித்தால் போதும் என வீடமைப்பு புனர்நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு அறிவுரை கூறினார், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்கப் பிரேமதாசவின் புதல்வரும், அம்பாந்தோட்டை மாவட்ட ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச.
நேற்று நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே இப்படியொரு சுவாரஷ்யமான சம்பவம் இடம்பெற்றது. நாடாளுமன்றம் நேற்று பிற்பகல் ஒருமணிக்கு பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமையில் கூடியது.
நவம்பர் எட்டில் வரவுசெலவுத் திட்ட உரை 2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பார் என்றும் அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் உத்தியோகபூர்வ அறிவித்தல் ஒன்றை விடுத்தார் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி.

விடை கிடைக்காத வினாக்கள்
வழமைபோல் நாடாளுமன்ற ஒழுங்குபடுத்தலில் வாய்மூல விடைக்கான பதினைந்து கேள்விகள் குறிப்பிடப்பட்டிருந்தன. அவற்றுள் பெருமளவிலானவை மூன்று தடவைகளுக்கு மேல் கேட்கப்பட்டுப் பதிலளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டவை. அதேபோல் இன்றும் பன்னிரெண்டு வினாக்களுக்கு விடையளிக்கக் கால அவகாசமே கேட்கப்பட்டது. உரிய பதில்கள் கிடைக்கவில்லை.
வடக்குகிழக்கு மாகாணங்களுக்கு
15, 000 வீடுகள் எப்போது
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 15, 000 வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உங்களுடைய அமைச்சின் மூலம் இதுவரை எத்தனை வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
அதற்கு செலவிடப்பட்ட தொகை எவ்வளவு. எத்தனை பேருக்கு வீடுகள் தேவை என்ற புள்ளி விவரம் இருக்கின்றதா? என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச வீடமைப்பு நிர்மாணத்துறைகள் அமைச்சரிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார்.

6197 மில்லியனில் 8858 வீடுகள்
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல்வீரவன்ச தனது அமைச்சின் மூலம் 6197 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுவரை 8858 வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார். இந்த இடத்தில் இடைமறித்தார் சஜித் பிரேமதாச. நீங்கள் 15, 000 வீடுகள் என்கின்றீர்கள் ஜனாதிபதி 15 லட்சம் வீடுகள் என்கிறார்கள். எதுவும் நடந்தபாடில்லை. வடக்கு கிழக்கில் எத்தனை பேருக்கு வீடுகள் தேவை என்ற விவரமாவது உங்களிடம் உண்டா என்று கேட்டார்.
நாம் மட்டுமல்ல பல அமைப்புகள்
வீடுகளைக் கட்டுகின்றன
இது தொடர்பாக நான் ஏற்கனவே கூறிவிட்டேன். பாதுகாப்பு அமைச்சு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, சமுர்த்தி மீள்குடியேற்ற அமைச்சு என்பனவும் தொண்டர் நிறுவனங்களும் வீடுகளைக் கட்டி உள்ளன. இந்திய அரச 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக்கொடுக்க முன்வந்துள்ளது என்றார் அமைச்சர் விமல் வீரவன்ச.
இந்திய வீடு 5 லட்சம் ரூபா
நமது வீடு 3லீ லட்சம் ரூபா
இந்தியா 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக்கொடுக்க முன்வந்துள்ள போதும், வீடுகளைக் கட்டுவதற்கு தகுதியான இடமும் பயனாளிகளின் பெயர்ப் பட்டியலும் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதால்தான் இந்திய வீட்டுத் திட்டம் தாமதப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றதே என கிண்டிவிட்டார் சஜித் பிரேமதாச.
நீங்கள் இந்தியப் பிரதிநிதியா? அல்லது தூதுவரா?
சஜித் பிரேமதாசவின் கேள்வி விமல் வீரவன்சவுக்கு கடுப்பை ஏற்றிவிட்டது. நாம் சகலவிவரங்களையும் தக்க சமயத்தில் கொடுத்துள்ளோம். நீங்கள் என்ன இந்திய அரசின் பிரதிநிதியா? அல்லது இந்தியத் தூதுவரா?
மஹிந்த சிந்தனையின் படி நாம் எமது வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். இந்தியா ஒரு வீட்டைக் கட்டுவதற்கு 5 லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
நாங்கள் 3லீ லட்சம் ரூபாவில் வீடுகளை அமைக்கின்றோம். இங்கே "றோ' அமைப்பிடம் பணம் பெறுபவர்கள் தான் வெறுமனே அலட்டிக்கொள்கின்றனர் எனப் பதிலடி கொடுத்தார் அமைச்சர் விமல் வீரவன்ச.
சூடான விவாதம்
சுவையான விடயங்கள்
இதனால் இருவருக்குமிடையில் சூடான விவாதம் ஏற்பட்டது. அப்போது முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்கப் பிரேமதாசவின் பெயரும் சபையில் இழுக்கப்பட்டது.
பிரேமதாச ஜனாதிபதியாக, பிரதமராக மட்டுமன்றி வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராகவும் இருந்தார். அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் 5 லட்சம், 10 லட்சம், 15 லட்சம் வீடுகளைக் கட்டுவோம் என்று கூறினார்.
ஆனால் 45 ஆயிரம் வீடுகளை மட்டுமே கட்டினார். பிரேமதாச கூறியபடி வீடுகளை அமைத்திருந்தால் இன்று நாட்டின் மக்களை விட வீடுகளே அதிகமாக இருந்திருக்கும் என்றார் அமைச்சர் விமல் வீரவன்ச.
மஹிந்த சிந்தனை ரணசிங்க பிரேமதாசவுடையதல்ல
அமைச்சர் எப்போதும் இடக்கு முடக்காகப் பேசுவதில் கெட்டிக்காரர். நான் மஹிந்த சிந்தனை தொடர்பாகத் தான் கேள்வி எழுப்பினேன். அவர் பிரேமதாச பற்றிப் பேசுகின்றார். பாவம் அறியாதவர்.
ஒரு மணி நேரத்தில்
11 வீடுகள்
அமைச்சர் கூறுகின்றார் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன் ஆறு லட்சம் வீடுகள் கட்டப்படும் என்றார். அப்படியானால் ஒரு மணி நேரத்தில் 11 வீடுகளைக் கட்டி சாதனை படைத்து விடுவார்களோ என்றும் ஒரு கேள்வியை மீண்டும் எழுப்பினார் சஜித் பிரேமதாச.பிரேமதாச உயிருடன் இருந்தால் தற்கொலை செய்து கொள்வார்
இந்த உறுப்பினர் இடக்கு முடக்காகப் பேசுகின்றார். பிரேமதாச ஜனாதிபதியாகவும் அமைச்சராகவும் இருந்தபோது இவர் வெளிநாட்டில் இருந்தார். இங்கே இருந்திருந்தால் வீட்டைக் கட்ட எவ்வளவு சிமெந்து, எவ்வளவு கற்கள், எவ்வளவு சுண்ணாம்பு செலவிடப்பட்டது என்று அவரிடமே கேள்ளி எழுப்பி இருப்பார்.
இன்று அவர் உயிருடன் இருந்தால் இப்படியொரு பிள்ளையைப் பெற்றோமே என்று தற்கொலை செய்துகொண்டிருப்பார் என்று திருப்பி அடித்தார் அமைச்சர் விமல் வீரவன்ச.
இப்படியான சூடான வாதப் பிரதிவாதங்களுடன் கேள்விநேரம் முடிந்தது. கேள்விகளுக்கு விடைகள் கிடைக்காவிட்டாலும் விமல் சஜித் விவாதம் சூடாகவும் சுவாரஷ்யமாகவும் இருந்தது.
காப்புறுதி தொழிலை ஒழுங்குபடுத்தும் சட்டவரைவு
இதனைத் தொடர்ந்து வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம காப்புறுத் தொழிலை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான திருத்தச் சட்ட வரைவை சபையில் சமர்ப்பித்தார். இந்த விவாதத்தில் ஆளும் தரப்பினரை விட எதிர்த் தரப்பினரே கூடுதலாகப் பங்கு கொண்டனர்.
சீனா நமது நாட்டையே விழுங்கப்போகின்றது
ஒரு சீனர் இரத்தினக் கல்லையே விழுங்கிவிட்டார்.
இந்த விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினராக தயாசிறி ஜயசேகர பல விடயங்களைப் புட்டுவைத்தார். அதாவது இன்றைய அரசாங்கம் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் நாட்டின் பெரும்பகுதியை கொடுக்கப்போகின்றது. சீனா நமது நாட்டையே விழுங்கப் போகின்றது. இப்படியான ஒரு நிலையில் கண்காட்சிக்கு வந்த ஒரு சீனர் இரத்தினக் கல்லை விழுங்கியது ஒன்றும் ஆச்சரியமில்லை என்றார்.
இந்தியாவுக்கும் றோ அமைப்புக்கும் எதிராக வீரம் பேசுபவர்கள் இரகசியமாக ஒப்பந்தங்களை செய்வது ஏன்?
அமைச்சர் விமல் வீரவன்ச 13ஆவது திருத்தத்தை ஒழிப்போம் என்கின்றனர். இந்திய அரசையும் றோ அமைப்பையும் காரசாரமாக விமர்சிக்கின்றார். சபையில் தான் ஒரு தேசிய வீரர் போன்று பேசுகின்றார். அதேவேளை இந்தியாவுக்கும் போகின்றார்.
அரசாங்கம் பல உடன்படிக்கைகளைச் செய்து கொள்கின்றது, காணிகளை வழங்குகின்றது. இலங்கை இந்திய உறவைப் பலப்படுத்துவோம் என்றும் கூறுகின்றார். ஏன் இந்த இரட்டை வேடம் என்றும் கடுமையாக விமர்சித்தார் தயாசிறி ஜயசேகர.
13ஆவது திருத்தத்தை மேலும் பலப்படுத்துவோம் என்கிறார் அரச தரப்பு எம்.பி.
இன்று நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பது 13ஆவது திருத்தம். ஜனாதிபதியின் சகோதரர்களாக கோத்தபாய, பஸில் ஆகியோருடன் அமைச்சர்களான விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க உட்பட சிலர் 13 ஆவது திருத்தத்தை நீக்க வேண்டுமென பொதுவாகப் பரப்புரை செய்கின்றனர்.
ஆனால் நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஆளும் கட்சி உறுப்பினராக அருந்திக்கப் பெர்னாண்டோ இந்த அரசாங்கம் 13ஆவது திருத்தத்தை மேலும் பலப்படுத்தும். பேச்சுக்களின் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண்போம். தனிப்பட்ட நபர்களின் கருத்துகள் அரசின் கருத்துகள் அல்ல என்றும் குறிப்பிட்டார்

மிட் ரோம்னியின் பேரனை கொஞ்சி மகிழ்ந்த ஒபாமா!

         
Thursday 25 October 2012  By.Rajah.{புகைப்படங்கள்,}
அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 6ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இத் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் பராக் ஒபாமாவும், குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னியும் போட்டியிடுகின்றனர்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரே மேடையில் விவாதம் நடத்துவது வழக்கம். முதல் சுற்று விவாதம் டென்வர் நகரிலும், இரண்டாவது சுற்று விவாதம் நியூயார்க்கிலும், மூன்றாவது சுற்று விவாதம் நேற்று முன்தினம் புளோரிடாவிலும் நடந்தன.
இந்த விவாதத்தில் கலந்து கொண்ட ஒபாமா, மிட் ரோம்னியின் பேரனை கொஞ்சி மகிழ்ந்தார்.
கொஞ்சி மகிழ்ந்த ஒபாமா
கொஞ்சி மகிழ்ந்த ஒபாமா




அஜித்துடன் குத்தாட்டம் போடத் துடிக்கும் ஸ்ரீதேவி!

         
Thursday 25 October 2012  By.Rajsah.
கொலிவுட் முதல் பாலிவுட் வரை கனவுக் கன்னியாக ஜொலித்தவர் நடிகை ஸ்ரீதேவி. திருமணத்திற்கு பின்பு பல வருடங்கள் நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த இவர் மீண்டும் தற்போது நடித்து வெளிவந்த படம் இங்கிலிஷ் விங்கிலிஷ்.
இப்படத்தில் ஆங்கிலம் தெரியாததால் சிரமப்படும் குடும்பத்தலைவியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். இப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்த அஜித் குமார் பணம் எதுவும் வாங்காமல் தனது சொந்த செலவிலேயே மும்பைக்கு சென்று நடித்துக் கொடுத்தார்.
இதனால் மகிழ்ச்சியடைந்த ஸ்ரீதேவி பேட்டியின் போது கூறுகையில், அஜித் தனது படத்தில் நடிக்க அழைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்றும் குத்துப்பாடலுக்கு ஆட அழைத்தாலும் கூட தயார் எனவும் கூறியுள்ளார்.

இலங்கைக்கான சீனத்தூதுவர் இன்று யாழ்ப்பாணத்திற்கு!!

         
Thursday 25 October 2012  By.Rajah.
இராணுத்தின் ஏற்பாட்டில் இலங்கைக்கான சீனத்தூதுவர் இன்று யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இன்று காலை 9.00 யாழ். மாநகர சபைக்குச் சென்று, யாழ். மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவைச் சந்தித்து கலங்துரையாடினர்.
யாழ் மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத்திட்டங்கள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்துள்ளனர்.
அத்துடன், யாழ் நூலகத்திற்குச் சென்ற சீனத்தூதுவர், நூலகத்திற்கென ஒரு லட்சம் ரூபாவினை நன்கொடையாக வழங்கினார்.
அங்கு நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய சீன தூதுவர், இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்களை பாராட்டிப் பேசியதுடன் இந்தியவிற்கும் இலங்கைக்கும் இருக்கும் நெருக்கத்தையும் தெளிவுபடுத்திப் பேசினார்.
யாழ். மாவட்டச் செயலகத்திற்கு சென்ற குழுவினர், அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து சீனக்குழுவினருக்கு அரச அதிபர் விளக்கமளித்தார்.
சீனத் தூதுவரின் வருகையை முன்னிட்டு, யாழ். மாநகர சபை, யாழ். நூலகம், கச்சேரி போன்ற பகுதிகளில் பெருமளவு இராணுத்தினர் சிவில் உடையில் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2ம் இணைப்பு
தமிழருக்கான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதில் கூட்டமைப்பு ஆர்வம் – சீனத் தூதுவர்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழருக்கான தீர்வைப் பெற்றுக் கொள்வதில் ஆர்வமாக உள்ளதை அவர்களோடு நடத்திய சந்திப்புக்களில் மூலம் தாம் கண்டு கொண்டுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கு ஜாங்கோ தெரிவித்தார்.
யாழ்.நூலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்விதம் கூறினார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அண்மையில் கொழும்பில் என்னைச் சந்தித்துப் பேச்சுவார்ததை நடத்தினர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் வடபகுதிக் கட்டமைப்புக்களில் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
உண்மையில் யாழில் வீதி அபிவிருத்தி துரிதகதியில் நடபெறுகின்றது. அதை நான் நேரில் பார்ப்பதற்காக வந்துள்ளேன்.
யாழின் அபிவிருத்தி திட்டங்களை சீன அரசாங்கம் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வேலைத்திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது.
வீதி அபிவிருத்தியில் முக்கிய பங்காற்றும் சீன அரசாங்கம் வடபகுதியில் வீதிப் போக்குவரத்து வசதிகளைச் செய்து கொண்டு வருகின்றது. யாழ்ப்பாணம் யுத்தத்திற்கு பின்னர் பாரிய துரித வளர்ச்சியடைவதாக என்னால் பார்க்க முடிகின்றது என்றார்.
இதேவேளை யாழிக்குச் சென்ற சீனத் தூதுவர் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தைச் சந்தித்து யாழில் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினார்.
அதன் பின்னர் யாழ்.நூலகத்திற்கு சென்ற சீனத் தூதுவர் யாழ்.நூலகத்தின் வளர்ச்சிக்காக ஒரு மில்லியன் ரூபாவை அன்பளிப்புச் செய்துள்ளார்.
இதேவேளை சீன தூதுவர் நல்லூருக்கு இன்று வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












பாதுகாப்பு படைக்குமுன்னாள் போராளிகள்


Thursday 25 October 2012 By.Rajah.கிளிநொச்சி, அம்பால்நகர் பிரதேசத்தில் சிவில் பாதுகாப்பு படையினால் விவசாய வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட முன்னாள் போராளிகள் 350பேர் உட்பட சுமார் 3000 இளைஞர் யுவதிகள் இந்த வேலைத்திட்டத்தில் பங்குபற்றினர்.



அமெரிக்க அரசாங்கத்தின்நிதியுதவியில்


Thursday25 October 2012  ByRajah.மட்டக்களப்பு புல்லுமலையில் அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியில் புனரமைக்கப்பட்ட இன நல்லுறவுக்கான கூட்டிணைவு வீதியை இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் திறந்து வைத்தார்.
மட்டக்களப்பிற்காஇரண்டுநாள் விஜயத்தினைமேற்கொண்டு வருகைதந்துள்ளஇலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன், நேற்றைய தினம் மாலை 3.30 மணிக்கு மட்டக்களப்பின் மீள்குடியேற்ற எல்லைக் கிராமமானபுல்லுமலைக்குவிஜயம் செய்ததுடன்,அங்கு அமெரிக்க நிதியுதவியில் யு.எஸ்.எயிட்.நிறுவனத்தினால் புனரமைக்கப்பட்டபுல்லுமலைக்கும் மங்களகமைக்கும் இடையிலான தமிழ்-சிங்கள இன நல்லுறவுக்கான வீதியைத் திறந்துவைத்தார்.
சுமார் ஏழு கிலோமீற்றர் தூரத்தினைக் கொண்ட இவ் வீதியானது கடந்த முப்பது வருட காலமாக இடம்பெற்ற யுத்தம் காரணமாக புல்லுமலை, மங்களகம கிராமங்களில் வசித்து வந்த தமிழ்-சிங்கள மக்களுக்கு இடையிலான கசப்புணர்வை போக்கி இரண்டு சமூகங்களுக்கு இடையிலான இன நல்லுறவை கட்டியெழுப்பும் நோக்குடன் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன்,
யுத்தம் நடைபெற்ற காலத்தில் தமிழ், சிங்கள மக்களுக்கு இடையில் ஏற்பட்ட கசப்புணர்வுகளை இரண்டு இன மக்களும் மறந்து எல்லா மக்களும் ஒருங்கிணைந்து செயற்படுவதை இங்கு நடைபெற்ற நிகழ்வுகளின் ஊடாக தான் அவதானித்ததாகவும் இங்கு நடைபெற்ற தமிழ்- சிங்கள் மக்களின் இனநல்லுறவை ஏற்படுத்தும் நாடகமும், இங்கு திறந்துவைக்கப்பட்ட சுவர் ஓவியமும், இன நல்லுறவை கட்டியெழுப்பும் நோக்குடன் திறந்துவைக்கப்பட்ட வீதியும் என மூன்று விடயங்களும் தன்னை கவர்ந்துள்ளதாகவும் இதற்காக உழைத்த அனைவருக்கும் தான் நன்றிகளை தெரிவித்துகொள்வதாகவும் அவர் கூறினார்.
இந் நிகழ்வில் வரவேற்புரையை ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் நிகழ்த்தியதுடன், கிராம இளைஞர்களினால் இன உறவை மேம்படுத்தும் நாடகமும் நடைபெற்றது.
இந் நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் அவர்களுடன் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளும், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் திரு.வினோத், சர்வோதயம் அமைப்பின் கிழக்குப் பிராந்திய இணைப்பாளர் திரு.கரீம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் யு.எஸ்.எயிட் நிறுவன அதிகாரிகள், பாடசாலை அதிபர், சமூக அமைப்புக்களின் தலைவர்கள், தமிழ், சிங்கள மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.













மூன்று இளம்பெண்களை 9 பேர் சேர்ந்து மாறி மாறி சிதைத்த கொடூரம்

           
Thursday 25 October 2012  By.Rajah.
தோட்ட நகரம், அமைதிப் பூங்கா... சிலிகான் சிட்டி என்று வர்ணிக்கப்படும் பெங்களூரு, இப்போது கற்பழிப்பு நகராக மாறி வருகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது அந்தச் சம்பவம்!

பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தேசிய சட்டக் கல்லூரியில் படிக்கும் நேபாள மாணவி கவுஷிகா, கடந்த 13-ம் தேதி மாலை தன் நண்பனுடன் கல்லூரி வளாகத்தில் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது, திடீரென வந்த எட்டு மனித மிருகங்கள் பேசிக்கொண்டிருந்த நண்பனைத் தாக்கி விட்டு, கவுஷிகாவைக் கடத்தி காட்டுக்குள் தூக்கிப் போய்... பெண்மையைச் சிதைத்து சின்னாபின்னமாக்கினர்.

பெங்களூருவை அதிர வைத்த இந்தச் சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த மூன்று பெண்‌களைக் கடத்திச் சென்று கற்பழித்திருக்கிறது ஒன்பது பேர் கொண்ட கும்பல்.

'பெங்களூரு காந்தி நகரில் இருக்கும் கேசினோ ராயல் பாரில் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள், டான்ஸர்களாகவும் சர்வர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் ஏழு பெண்கள் நித்தியின் பிடதி ஆசிரமத்துக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கின்றனர். தான் உண்டு தங்கள் வேலை உண்டு என்று இருந்தவர்கள் வாழ்வில்தான் விதி விளையாடியது.

''கடந்த 18-ம் தேதி இரவு 1 மணிக்கு, இரண்டு ஆம்னி வேன்களில் ஒன்பது பேர் வந்திருக்கிறார்கள். யார் என்று கேட்பதற்குள் குடியிருப்பின் வாட்ச்மேனைத் தாக்கி விட்டு, இரண்டு பேரை வீட்டுக்கு வெளியே காவலுக்கு நிறுத்தி விட்டு, மற்ற ஏழு பேரும் முதல் தளத்தில் இருக்கும் பார் டான்ஸர்களின் வீட்டுக் கதவைத் தட்டி இருக்கின்றனர்.

வில்லங்கம் புரியாமல் கதவைத் திறக்க... கத்தி, வீச்சரிவாளைக் காட்டி மிரட்டியபடி அறைக்குள் நுழைந்திருக்கிறார்கள். எதிர்ப்பு தெரிவித்த பெண்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கி இருக்கிறார்கள். அத்தனை பேரின் செல்போன்களையும் பறித்தவர்கள், பணம், நகை மற்றும் வீட்டில் இருந்த டி.வி. உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் மூட்டை கட்டினார்கள்.

அதற்குப் பின், ''பாரில் மட்டும்தான் குட்டி குட்டியா டிரெஸ் போட்டுக்கிட்டு ஆடுவீங்களா... இங்கேயும் ஆடுங்கடி!'' என்று மிரட்டி... கத்தி முனையில் ஆட வைத்திருக்கிறார்கள். அதன்பிறகு ஃபேஷன் ஷோவில் நடக்கிற மாதிரி 'பூனை நடை’ நடக்கச் சொல்லி, அவர்களில் மூவரை மட்டும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அந்த மூன்று பேரின் கண்களையும் வாயையும் துணியால் கட்டியவர்கள், அவர்களை காரில் தூக்கிப் போட்டுக்கொண்டு அதே ஏரியாவில் ஆள் இல்லாத வீட்டுக்குப் போயிருக் கிறார்கள். அங்கே மூன்று பெண்களையும் ஒன்பது பேரும் சேர்ந்து மாறி மாறி சிதைத்து இருக்கிறார்கள்'' என்று அதிர்ச்சி விலகாமல் சொல்கிறார்கள் அந்தக் குடியிருப்புவாசிகள்.

பாதிக்கப்பட்ட பெண்கள் சேர்க்கப்பட்டிருந்த ராஜராஜேஸ்வரி மருத்துவமனைக்குச் சென்றோம். பலத்த போலீஸ் பாதுகாப்பும், தீவிர மருத்துவப் பரிசோதனையும் நடந்து கொண்டு இருந்ததால், அவர்களுடன் பேச முடியவில்லை. மற்ற பெண்களும் அதிர்ச்சி விலகாமல் பேச மறுக்க, ஒருவர் மட்டும் முகத்தையும் பேரையும் மறைத்துக் கொண்டு பேசினார்.

''நாங்களே ஊரு விட்டு ஊரு வந்து வயிற்றுப் பிழைப்புக்காகவும் குடும்பக் கஷ்டத்துக்காகவும்தான் இந்த வேலையைச் செய்றோம். வேற வேலை கிடைக்காமத்தான் இதைச் செய்றோம். வாங்குற சம்பளத்தில் பாதி, வாடகைக்கும், சாப்பாட்டுக்கும், மேக்கப்புக்கும் போயிடும். மீதியை வீட்டுக்கு அனுப்புவோம். எங்களை ஏன் மனுஷியாவே யாரும் மதிக்க மாட்டேங்​கிறாங்க..?'' என்று விம்மி விம்மி அழுதார். சமாதானப்படுத்தியதும் பேசியவர், ''அவங்க மூணு பேரையும் அடிச்சி உதைச்சி கையைக் கட்டிப்போட்டு ரேப் பண்ணியிருக்காங்க. அவங்க அரைகுறை மயக்கமா இருக்கும் போதே கெங்கேரி மேம்பாலத்தில் போட்டுட்டுப் போய்ட்​டாங்களாம். எங்ககிட்ட இருந்த செல்போன், பணம் எல்லாத்தையும் பாவிங்க பிடுங்கிட்டுப் போனதால எங்களால் ஒண்ணுமே செய்ய முடியலை. அலங்கோலமா வீட்டுக்கு வந்தவங்களை நாங்கதான் ஆஸ்பத்திரியில் சேர்த்து போலீஸ்ல புகார் கொடுத்தோம். அவங்க ரேப் பண்ணும்போது வீடியோ எடுத்தாங்களாம். போலீசுக்குப் போனா இன்டர்நெட்டில் போடுவோம்னு மிரட்டியிருக்காங்க. இனி நாங்க என்ன பண்ணப் போறோமோ?'' என்று கண்ணீர் வடித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பெங்களூரு போலீஸ் கமிஷனர் ஜோதி பிரகாஷ் மிர்ஜியிடம் பேசினோம். ''கற்பழிப்புகள் தொடர்வது வருத்தமளிக்கிறது. சட்டக்கல்லூரி மாணவி கற்பழிப்பில் ஆறு பேரை பிடிச்சிட்டோம். அதேபோல, பார் பெண்கள் கேஸில், அவர்களுக்குத் தெரிந்தவர்கள் அல்லது நீண்ட நா​ட்களாக ஃபாலோ செய்தவர்கள்தான் செய்​திருக்க வேண்டும். மூன்று தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகிறோம். கூடிய விரை​வில் அனைவரையும் கைது செய்து விடுவோம்'' என்றார்.

சம்பவம் நடந்து மூன்று நாட்கள் ஆனபிறகும் யாரையும் கைது செய்யாததைப் பார்க்கும்போது, பெங்களூரு நகரம் ஆபத்தின் பிடியில் சிக்கியிருப்பது தெரிகிறது!

பிரபல குங் பூ வீரர் புரூஸ் லீ-யின் வீட்டை விற்க முடிவு

வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2012, By.Rajah.
பிரபல குங் பூ வீரர் புரூஸ் லீ ஹொங்காங்கில் வசித்த வீடு ரூ.130 கோடிக்கு விற்கப்பட உள்ளது. கடந்த 1970ஆம் ஆண்டுகளில் வெளிவந்த, பிஸ்ட் ஆப் ப்யூரி, என்டர் தி டிராகன் உள்ளிட்ட படங்களில் நடித்து உலகப் புகழ் பெற்றவர் குங் பூ வீரர் புரூஸ் லீ.
இவர் 32வது வயதில் மர்மமான முறையில் இறந்தார். ஹொங்காங்கில் கோவ்லூன் டோங் மாவட்டத்தில் இரண்டடுக்கு கொண்ட கட்டிடத்தில் இவர் கடைசியாக வசித்தார்.
460 ச.மீ கொண்ட இந்த வீடு தற்போது ஓட்டலாக செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தை மியூசியமாக அறிவிக்க வேண்டும் என புரூஸ் லீயின் ரசிகர்கள் பல காலமாக வற்புறுத்தி வந்தனர்.
ஆனால் இக்கட்டிடத்தின் உரிமையாளர் யூ பாங் லின் 130 கோடி ரூபாய்க்கு இந்த வீட்டை விற்க திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து யூ பாங் லின் கூறுகையில், ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று அரசுடன் பல முறை இந்த கட்டிடத்தை மியூசியமாக மாற்றுவது குறித்து பேசினேன். ஆனால் அரசு இதற்கு ஒத்துழைப்பு தரவில்லை.
இனிமேலும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. தற்போது ஓட்டல் நடத்தும் உரிமையாளரும், இரண்டு ஆண்டுகளாக வாடகை பாக்கி வைத்துள்ளார். எனவே கட்டிடத்தை விற்க முடிவு செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

ஒரு மாத பச்சிளம் குழந்தையை விற்ற தந்தைக்கு சிறைத்தண்டனை

வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2012, By.Rajah.
சீனாவில் ஒரு மாத பச்சிளம் குழந்தையை விற்ற தந்தைக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. சீனாவின் ஜியாங்சு மாகாணத்தை சேர்ந்தவர் சுவோ(வயது 36). நகை வியாபாரம் செய்து வருகிறார்.
வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் தவித்த சுவோ, தன் ஒரு மாத குழந்தையை 6 லட்சம் ரூபாய்க்கு விற்று விட்டார். இதுகுறித்து சுவோவின் மனைவி பொலிசில் புகார் செய்தார்.
இதையடுத்து சுவோவை பொலிசார் கைது செய்தனர். குழந்தையை விற்ற குற்றத்துக்காக சுவோவுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
தாயிடமிருந்து குழந்தையை பிரித்த குற்றத்துக்காக 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. குழந்தை தற்போது தாயிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது

மெக்சிகோவில் மர்ம கும்பலுக்கும், கடற்படையினருக்கும்

 வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2012,By.Rajah.
இடையே மோதல்: 7 பேர் பலி மெக்சிகோவின் வடக்கில் உள்ள ஜகாடெக்ஸ் மாகாணத்தில் கடற்படையை சேர்ந்த ஒரு பிரிவினருக்கும், மர்ம கும்பலுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து மாகாண அரசு வழக்குரைஞரின் செய்தித் தொடர்பாளர் ஜார்ஜ் ஃபுளோரிஸ் கூறுகையில், கடற்படையை சேர்ந்த ஒரு பிரிவினருக்கும், மர்ம கும்பலுக்கும் இடையே 2 மணி நேரம் நடைபெற்ற மோதலில் அந்த கும்பலைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். எனினும் அவர்களின் சடலங்களை அடையாளம் காண முடியவில்லை என்றார்.
எனினும் இந்த மோதல் குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை என அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது.
ஜெட்டா இனத்தவர்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் வன்முறைச் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வது வழக்கம்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அந்த இனத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் கடற்படையினரால் கொல்லப்பட்டார்.
இதற்கு பழிவாங்கும் விதத்தில் இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சுக்கு உடல்நலக்குறைவு

 வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2012,By.Rajah.
அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் இரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச். இதனால் அசாஞ்ச் மீது கடும் கோபத்தில் உள்ளது அமெரிக்கா. இந்நிலையில் அசாஞ்ச் மீது சுவீடன் அரசு பாலியல் வழக்கை தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக லண்டனில் தங்கியிருந்த அசாஞ்ச் கடந்த 2010ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அதன் பின் ஜாமீனில் வந்த அசாஞ்ச், லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார்.
தற்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈக்வடார் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் மார்கோ அல்புஜா மார்டினஸ் கூறுகையில், அசாஞ்சின் உடல்நிலை மிக மோசமாக உள்ளது.
அவரை மருத்துவமனையில் சேர்த்து உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்கு பிரிட்டன் அரசு அனுமதி தரவேண்டும் என்று தெரிவித்தார்.

எங்களது தொழிற்சாலை மீது இஸ்ரேல் தான் தாக்குதல் நடத்தியது:

 வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2012, By.Rajah.
 சூடான் குற்றச்சாட்டுஎங்களது நாட்டிலுள்ள ஆயுத தொழிற்சாலை மீது இஸ்ரேல் தான் தாக்குதல் நடத்தியது என சூடான் குற்றம் சுமத்தி உள்ளது. சூடான் தலைநகர் கார்டோமில் ஆயுத தொழிற்சாலை ஒன்று உள்ளது. இத்தொழிற்சாலையின் மீது கடந்த செவ்வாயன்று நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் இறந்தனர்.
இந்நிலையில் 4 இஸ்ரேல் விமானங்கள் தான் எங்கள் ஆயுத தொழிற்சாலையின் மீது தாக்குதல் நடத்தியது என கலாசார மற்றும் செய்தித்துறை அமைச்சர் அகமது பிலால் உஸ்மான் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கிருந்து பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதாக சந்தேகம் எழுந்ததன் பேரிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
பன்னாட்டு சட்டத்தை மீறி சூடான் ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களை தயாரிப்பதாக கூறி கடந்த 1998ஆம் ஆண்டில் இத்தொழிற்சாலை மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.