Link

ணக்கம் வருக வருக....

Pages

ஞாயிறு, 11 நவம்பர், 2012

பத்திரிகையாளர்; பிரெட்ரிகா ஜான்ஸை திட்டிய கோத்தபய.



By.Rajah...அரசும், ஊடகமும், நீதித் துறையும் ராஜபக்ஷே​வின் குடும்பச் சொத்து ஆகிவிட்டது என்ற கொந்தளிப்பு, கடல் கடந்து கேட்கிறது!
பல வழக்குகளில் அரசுக்கு எதிராகத் தீர்ப்​பளித்த நீதிபதி ஷிராணி பண்டார நாயக மீது நாடாளுமன்றத்தில் குற்றத் தீர்மானம், அரசுக்கு எதிரான செய்திகளை எழுதியதற்காக சண்டே லீடர் ஆசிரியர் பிரெட்ரிகா ஜான்ஸ் பதவிப் பறிப்பு போன்ற சம்பவங்கள் இலங்கையைக் கொந்தளிக்க​வைத்துள்ளன.
பிரெட்ரிகா ஜான்ஸ்... சண்டே லீடர் ஆசிரியராக இருந்த லசந்தா விக்ரமதுங்க 2009-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பிறகு, ஆசிரியர் ஆனவர் பிரெட்ரிக்கா ஜான்ஸ். ஒரு காலத்தில் சண்டே லீடர் பத்திரிகைக்கு, 'அரசை எதிர்க்கும் அஞ்சாத பத்திரிகை’ என்ற பெயர் இருந்தது. ஆனால் இன்று அந்தப்பெயர் இல்லை. காரணம், அது ராஜபக்ஷே ஆதரவு நிலைக்கு மாறிவிட்டது. அதனால்தான், பிரெட்ரிகா ஜான்ஸ், ஆசிரியர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
'2009 போரின்போது வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்களை கோத்தபய சுடச்சொன்னார்’, 'தன் மனைவிக்கு கோத்தபய வெளிநாட்டில் இருந்து நாய்க்குட்டி இறக்குமதி செய்தார்’ என்றெல்லாம் செய்திகளை அம்பலத்துக்குக் கொண்டு வந்தவர், பிரெட்ரிகா. இந்தச்செய்திகள் தொடர்பான விளக்கம் கொடுப்பதற்காக பிரெட்ரிகா ஜான்ஸை அழைத்த கோத்தபய, 'நீ மலம் தின்னும் பன்றி; கேடுகெட்ட பத்திரிகையாளர்; மக்கள் உன்னை வெறுக்கிறார்கள்; உன்னைக் கொன்று விடுவார்கள்’ என்று கேவலமாகத் திட்டினார். அதையும் அப்படியே ஆதாரத்தோடு வெளியிட்டவர் ஜான்ஸ்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு கோத்தபய, அவரைப் பற்றி வெளியான செய்தி தொடர்பாக வழக்குத் தொடர்ந்தார். அதோடு, ராஜபக்ஷேவின் விசுவாசி​யான அசங்க செனிவிரட்னவை வைத்து 2012 செப்டம்பர் மாதம், சண்டே லீடர் பத்திரிகையை விலைக்கு வாங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே பிரெட்ரிகா நீக்கப்பட்டார். பின்னர், சண்டே லீடர் நிர்வாகம், கோத்தபய பற்றி வெளியிட்ட செய்திக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டது. 'உங்கள் பாஸ்போர்ட் முடக்கப்​பட்டு நீங்கள் கைது செய்யப்படலாம்’ என்று அவரது வழக்கறிஞர்கள் எச்சரிக்கை செய்தனர். அதனால் உடனே வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றார் பிரெட்ரிகா.
எதிர்பார்த்தது போலவே நவம்பர் 7-ம் தேதி பிரெட்ரிகாவைக் கைதுசெய்ய ஆணை பிறப்​பித்தது நீதிமன்றம். விரைவில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது. அவர் கைது செய்யப்பட்டால், அவருக்கு என்ன வேண்டுமானாலும் நிகழலாம் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் இலங்கைப் பத்திரிகையாளர்கள்

கைதிகள் கொல்லப்பட்டனர்! அமைச்சர் தகவல் ??



By.Rajah...இலங்கையில் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் வெள்ளிக்கிழமை மாலை நடந்த மோதல்களின்போது, ஆயுதங்களை ஒப்படைக்கும்படி விடுத்த வேண்டுகோளை 11 கைதிகளே ஏற்று சரணடைந்தனர் என்றும் மற்றவர்கள் சரணடைய மறுத்து தாக்குதலை தொடர்ந்ததாலேயே இராணுவ கமாண்டோ அணி உள்ளே சென்று தாக்குதல் நடத்தியதாக சிறைச்சாலைகள் விவகார அமைச்சர் சந்திரசிறி கஜதீர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த ஆயுத மோதல்களில் 27 கைதிகள் கொல்லப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை பின்னேரம் வெலிக்கடை சிறைச்சாலைக்குள் தேடுதல் நடத்தச்சென்ற சிறப்பு அதிரடிப்படையினருக்கும் கைதிகளுக்கும் இடையே நடந்த மோதல் பின்னர் ஆயுத மோதலாக மாறியதை அடுத்தே பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
சிறையில் இருந்த ஆயுத அறையை உடைத்து துப்பாக்கிகளை எடுத்த கைதிகளுக்கும் படையினருக்கும் இடையில் பல மணிநேரம் பரஸ்பரம் துப்பாக்கித் தாக்குதல்கள் நடந்தன.
சிறைச்சாலை வளாகத்தில் நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் இன்னும் தேடுதல் மற்றும் சீரமைப்பு பணிகள் நடந்துவருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சிறைக்கைதிகளின் கைகளில் சிக்கிய 82 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் 6 துப்பாக்கிகளை காணவில்லை என்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.
சிறைக் கைதிகளின் குடும்ப உறவினர்கள் சிறைச்சாலை வளாகத்தில் குவிந்திருந்தனர்.
16 சடலங்கள் மருத்துமனையில்-11 சடலங்கள் சிறை வளாகத்தில் மோதல்களில் கொல்லப்பட்ட 16 பேரின் சடலங்கள் நேற்றிரவு கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாக பணிப்பாளர் அனில் ஜாசிங்க பிபிசியிடம் கூறினார்.
மேலும் 11 கைதிகளின் சடலங்கள் வெலிக்கடை சிறை வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
காயப்பட்ட 43 பேரில் 23 பேர் கைதிகள், 13 பேர் பொலிஸ் கொமாண்டோக்கள், 4 படைச் சிப்பாய்கள் மற்றும் குறைந்தது ஒருவர் சிறைக்காவலர் என்று கூறிய மருத்துவமனை பணிப்பாளர், 5 பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகக் கூறினார்.
ஆட்டோவில் தப்பிச் செல்ல முயன்ற கைதிகளின் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை வரையில் நீடித்த தேடுதல்களின்போது தப்பியோடிய கைதிகளில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் கைது செய்யப்பட வேண்டியிருப்பதாக சிறைத்துறை அமைச்சின் மூத்த ஆலோசகர் சதீஸ்குமார் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் நடந்த இதே மாதிரியான ஒரு வன்முறையில் வெலிக்கடை சிறைச்சாலையில் 25 கைதிகளும் 4 சிறைக்காவலர்களும் காயமடைந்தனர்.
2010-ம் ஆண்டிலும் தேடுதல் நடத்தச் சென்ற படையினருடன் நடந்த மோதலில் 50-க்கும் மேற்பட்ட பொலிசாரும் சிறைக்காவலர்களும் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியாக பஞ்சன் லாமாவை களமிறக்கும் சீனத்தலைவர்கள



By.Rajah.திபெத் மீது சீனா ஆதிக்கம் செலுத்துவதை நிறுத்த வலியுறுத்தி, 6 புத்த துறவிகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். ஆனால், புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு போட்டியாக, 22 வயது பஞ்சன் லாமாவை நியமிக்க சீன தலைவர்கள் மும்முரமாக உள்ளனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் திபெத் உள்ளது. இந்த பகுதியை விடுவிக்க வேண்டும். சுதந்திரமாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என்று புத்த மதத் தலைவர் தலாய் லாமா தலைமையில் திபெத்தியர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். மேலும், தங்களுக்குள் ஒரு அரசு அமைத்து செயல் பட்டு வருகின்றனர். இதை அங்கீகரிக்க கோரி சர்வதேச நாடுகளின் ஆதரவை தலாய் லாமா திரட்டி வருகிறார். தற்போது இவர் ஜப்பானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் சீனாவின் சிசுவான் மாகாணம் அபா கவுன்டியில் வசித்த 4 புத்த துறவிகள் ஒரே நாளில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். நேற்று 2 பேர் தீக்குளித்து இறந்தனர். 6 பேர் 24 மணி நேரத்தில் தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பரபரப்பான சூழ்நிலையில், சீன கம்யூனிஸ்ட் தலைவர்களின் மாநாடு பீஜிங்கில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், அடுத்த அதிபர், பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அத்துடன், பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், தலாய் லாமாவுக்கு போட்டியாக 22 வயதாகும் பஞ்சன் லாமாவை திபெத் தலைவராக நியமிக்க சீன தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால் மேலும் சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து இந்தியாவின் தர்மசாலாவில் இருந்து செயல்படும் மத்திய திபெத் நிர்வாகக் குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், Ôசீனாவில் 6 துறவிகள் தற்கொலை செய்து கொண்டது உறுதியாகி உள்ளது. சீனாவை கண்டித்து இதுவரை 69 பேர் தீக்குளித்துள்ளனர். அவர்களில் 54 பேர் இறந்துள்ளனர். இப்போது தலாய் லாமாவுக்கு பதிலாக பஞ்சன் லாமா என்பவரை நியமிக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது கண்டிக்கத்தக்கதுÕ என்று தெரிவித்துள்ளது.
பெய்ன்கன் எர்டினி என்ற 22 வயதாகும் பஞ்சன் லாமாவை, சீன அரசு தலாய் லாமாவுக்கு போட்டியாக கடந்த ஆண்டு அரசியலுக்கு இழுத்து வந்தது. இவரும் சீன அரசுக்கு ஆதரவாக டிவிக்களில் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், சீன தலைவர்களின் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.