Link

ணக்கம் வருக வருக....

Pages

செவ்வாய், 4 டிசம்பர், 2012

இஸ்ரேலின் வீடு கட்டும் திட்டத்திற்கு ஜேர்மனி எதிர்ப்பு

பாலஸ்தீனியர் ஆக்கிரமித்திருக்கும் இஸ்ரேலின் நிலப்பகுதியில் 3000 புதிய வீடுகளைக் கட்ட இஸ்ரேலிய அரசு, அறிவிப்பு வெளியிட்டிருப்பதை ஜேர்மனி எதிர்த்துள்ளது. பேச்சுவார்த்தை நடத்தி பாலஸ்தீனியரிடமிருந்து அந்த நிலப்பகுதியைக் கையகப்படுத்திய பின்பே அங்கு கட்டுமானத் திட்டங்களை வகுக்க வேண்டும்.
பாலஸ்தீனியரின் கைவசம் இருக்கும்போதே அங்கு வீடு கட்ட "டெண்டர்" விடுவது அடாத செயல் என்றும் இத்திட்டத்தை உடனே அரசு திரும்பப் பெறவேண்டும் என்றும் ஜேர்மனி அரசின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீஃபன் ஸீபெர்ட் கூறினார்.
இந்த வாரத்தில் ஜேர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்கெலும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகுவும் ஆக்கிரமிப்புப் பகுதி குறித்துப் பேச இருக்கின்றனர்.
இந்நிலையில் கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக் கரைப்பகுதியில் அரசு யூதர்களுக்கான 3000 வீடுகளைக் கட்ட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இரு தரப்பினரும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டால் மட்டுமே அமைதிப் பேச்சுவார்த்தை எதிர்பார்த்த பலனைத் தரும் என்றார் ஸீபெர்ட்.
இஸ்ரேல் தூதருக்கு அழைப்பு விடுத்த பிரான்ஸ் மற்றும் பிரிட்டனைப் போல ஜேர்மனியும் செய்யுமா என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளியும் கேள்வி எழுப்பிய போது ஜேர்மனிக்கு இஸ்ரேலியத் தூதரை அழைத்துப் பேசும் திட்டம் எதுவும் இல்லை என்றார்.
இந்த வாரம் பெர்லினில் நடக்கும் கூட்டத்தில் மெர்கெல் மற்றும் நெதான்யாகுவுடன் அவர்களின் அமைச்சரவை சகாக்களும் கலந்து கொள்கின்றனர்.
இஸ்ரேலின் இந்த அறிவிப்பு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இடைஞ்சல் விளைவிப்பதாகும் என்று ஸீபெர்ட் கூறினார்.
கடந்த வாரமே இஸ்ரேல், ஜேர்மனியிடம் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஐநா சபையில் வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது.
ஆனால் இஸ்ரேலின் விருப்பத்திற்கு மாறாகப் பாலஸ்தீனம் ஐநாவில் இடம்பெற்றுவிட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல் இந்த வாரம் பெர்லினில் நடக்கும் பேச்சுவார்த்தையைக் கூட ரத்துச் செய்து விடலாம் என்று சில அதிகாரிகள் கூறுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மெக்சிகோவில் புதிய ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்

மெக்சிகோவில் ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி போராட்டம் நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை மெக்சிகோவின் புதிய ஜனாதிபதியாக என்ரிக் பெனா நெய்டோ பதவியேற்று கொண்டார்.
அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் “யோ சோய் 132” எனப்படும் மாணவர்கள் இயக்கம் போராட்டம் நடத்தியது.
அப்போது பொலிசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் போராட்டக்காரர்கள் 92 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி தலைநகர் மெக்சிகோ சிட்டியில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரசாயண ஆயுதங்களைப் பயன்படுத்தாதீர்: அசாத்திற்கு ஒபாமா?

சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் ரசாயண ஆயுதங்களைப் பயன்படுத்தினால் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று அசாத்திற்கு ஒபாமா எச்சரிக்கை விடுத்தார். இதற்கிடையே, ஐநா தன்னுடைய முக்கியமல்லாத சர்வதேசப் பணியாளர்களிடம் சிரியாவை விட்டு வெளியேறுமாறு சொல்லிவிட்டது.
இதனால் ஐநாவின் நூறு பணியாளர்களுள் 25 பேர் இந்த வாரத்திற்குள் வெளியேறிவிடுவர்.
ஐநாவின் செய்தி நிறுவனமான ஐரின், சிரியாவின் தலைநகரமான டமாஸ்கஸில் நடைபெறும் மனித நேயப்பணிகளும் சிறிதுகாலம் நிறுத்தப்படும் என்று கூறியுள்ளது.
ஃபோர்ட் மெக் நேரில் உள்ள தேசியப் பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் பேசிய ஒபாமா, லிபியாவில் இருக்கும் அணு ஆயுதங்களும் சிரியாவிலிருக்கும் ரசாயண ஆயுதங்களும் மற்ற இடங்களுக்குப் பரவமால் இருக்க நாங்கள் முயல்கிறோம்.
இருபதாம் நூற்றாண்டின் மோசமான ஆயுதங்களைக் கொண்டு 21ம் நூற்றாண்டை இருட்டாக்க நாங்கள் அனுமதிக்க முடியாது.
இன்று நான் ஆசாத்துக்கு ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
ரசாயண ஆயுதங்களை பயன்படுத்தும் பெருங்குற்றத்தில் நீங்கள் ஈடுபட்டால் அதற்கான பின்விளைவுகளை நீங்களே பொறுப்பாக வேண்டும் என்றார்.
ஆனால் சிரியா அரசு ஒபாமாவின் ஊகத்துக்கு மறுப்புத் தெரிவித்துள்ளது.
எந்த நிலையிலும் நாங்கள் ரசாயண ஆயுதங்களைப் பயன்படுத்தமாட்டோம். மேலும் எங்களிடம் அதுபோன்ற ஆயுதங்களையே கிடையாது என்று சிரியா தெரிவித்துவிட்டது.
சிரியாவில் பன்னிரெண்டு இடங்களில் அதிக விஷத்தன்மை உடையதும் நரம்புகளைச் செயலிழக்கச் செய்வதுமான ரசாயண ஆயுதங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.
சிரியா ரசாயண ஆயுதங்களை, போர் விமானம் மற்றும் ஏவுகணை மூலமாகத் தனது இலக்கு நோக்கி தாக்க முடியும் என்று CIA அமெரிக்காவின் உளவு நிறுவனம் தெரிவித்தது.
பெயர் சொல்ல விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் நியுயார்க் டைம்ஸ் செய்தியாளரிடம் பேசியபோது சிரியாவில் ஆற்றல் மிகுந்த ரசாயண ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
மேலும் அமெரிக்க அரசு சில எதிர்பாராத திட்டங்களை வகுத்து வருவதாகவும் கூறினார்.

புகலிடம் தேடி வந்த டுனீஷிய இளைஞர் சுட்டுக்கொலை ?

சுவிட்சர்லாந்தில் சூரிச் மாநிலத்தில் உள்ள எம்பிராச் நகராட்சியில் உள்ள புகலிட மையத்தில் தங்கியிருந்த டுனீஷியர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரைச் சுட்ட சில நிமிடங்களில் காவல்துறைக்கு தொலைபேசித் தகவல் வந்தது.
சூரிச் காவலர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது துப்பாக்கியால் சுட்ட காயங்களுடன் ஒருவர் தரையில் விழுந்துகிடந்தார்.
அவரைப் பிழைக்க வைக்க எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை.
கொலை செய்ததாகக் கருதப்படும் இளைஞரைக் காவலர் கைது செய்தனர்.
புகலிட மையத்தில் இருப்பவர்கள் மூன்று முறை துப்பாக்கியால் சுட்ட சத்தம் கேட்டதாகத் தெரிவித்தனர்.
தற்போது காவல்துறையும், விசாரணை அதிகாரிகளும் இக்கொலை பற்றிய புலனாய்வில் ஈடுபட்டுள்ளனர்

வடகொரியாவுக்கு ரஷ்யா திடீர் எதிர்ப்பு


வடகொரியா கடந்த ஏப்ரல் மாதம் ஏவிய ராக்கெட் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து தனது இரண்டாவது ராக்கெட்டை வருகிற 10ஆம் திகதிக்கும், 22ஆம் திகதிக்கும் இடையில் ஏவ திட்டமிட்டுள்ளது. இப்பணியில் வடகொரியா அதிகாரிகளுக்கு ஈரான் அதிகாரிகள் உதவி புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் வடகொரியாவின் ராக்கெட் ஏவும் திட்டம் ஐ.நா விதிமுறைகளை மீறும் செயல் என அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே தற்போது ரஷ்யாவும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரஷ்ய வெளிவிவகாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகொரியா ராக்கெட் ஏவும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதை கைவிடுவது ஏற்புடையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது