Link

ணக்கம் வருக வருக....

Pages

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

அஞ்சலி திடீர் வருகை. ஓய்வை அறிவிக்கின்றாரா சச்சின்?


 

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் சமீபகாலமாக மோசமாக ஆடிவருகிறார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இருந்து தற்போது சொந்த மண்ணில் நடந்துவரும் டெஸ்ட் தொடரிலும் சொதப்பி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிராக தற்போது நடந்து வரும் டெஸ்டில் சச்சின் 7 இன்னிங்சில் 112 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். தொடர்ச்சியாக மோசமாக ஆடிவருவதால் நாக்பூர் டெஸ்டுடன் சச்சின் ஓய்வுபெற வேண்டுமென முன்னாள் வீரர்கள் பலரும் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே சச்சின் கடந்த 28-ந் தேதி தனது எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பிசிசிஐ நிர்வாகிகளுடன் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் போட்டி நடைபெறும் நாக்பூருக்கு சச்சினின் மனைவி அஞ்சலி நேற்று திடீரென வருகை தந்துள்ளார். இதனால் சச்சின் ஓய்வு முடிவை அறிவிக்ககூடும் என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக அஞ்சலி கிரிக்கெட் போட்டிகளை மைதானத்திற்கு நேரில் சென்று பார்ப்பது கிடையாது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சச்சின் 50வது சதத்தை அடித்தபோது கூட அதனை நேரில் காண அஞ்சலி செல்லவில்லை. தற்போது அவர் சென்றுள்ளதால் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது

கப்பல் கவிழ்ந்து 18 பேர் சாவு?

கிரேக்கக் கடல் பகுதியில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர்; 9 பேரை காணவில்லை.
துருக்கியிலிருந்து கிரேக்கத்தில் சட்டவிரோதமாகக் குடியேறுவோர் ஆபத்தான கப்பல் பயணத்தை மேற்கொள்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை 28 பேர் கொண்ட குழு துருக்கியிலிருந்து, கிரேக்கத்துக்கு கப்பலில் சென்றது. லெஸ்வோஸ் தீவு அருகே அக்கப்பல் கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் 18 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 9 பேரை காணவில்லை. உயிர் பிழைத்த 20 வயது இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அக்கப்பலில் பயணம் செய்த அனைவரும் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது

விமான நிலையத்தின் மீது ராக்கெட் குண்டு வீசி தாக்குதல்

பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 7 பேர் பலியாயினர், 50 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானின் முக்கிய நகரங்களுள் ஒன்றான பெஷாவரில் உள்ள விமான நிலையம் மீது தீவிரவாதிகள் ராக்கெட் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தினர்.
மேலும் துப்பாக்கி சூடு நடத்தியதால், பாதுகாப்பு படையினர் திருப்பி சுட்டனர். இரு தரப்பினரிடையே தொடர்ந்து பயங்கர மோதல் நடைபெற்றது. இச்சம்‌பவத்தில் தாக்குதல் நடத்திய ஐந்து பேர் பலியாயினர் என கைபர் மாகாணத்தை சேர்ந்த தகவல் தொடர்புத்துறை அமைச்சர் இப்திகார் ஹூசைன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் முதல் ராக்கெட் குண்டு விமான ஓடுதளத்திலும் மற்றொன்று வெளிப்பகுதியிலும் வெடித்தது என கூறினார்.
மேலும் காயமடைந்தவர்கள் விமான நிலையம் அருகே உள்ள கைபர் டீச்சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் நி‌லமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
தொடர்ந்து விமான நிலைம் பாகிஸ்தானின் விமானப்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது{புகைப்படங்கள், }.






துப்பாக்கி சட்டத்தை கடுமையாக்க வேண்டும்: ஒபாமாவுக்கு

 
அமெரிக்க பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த துப்பாக்கிசூட்டில் 28 பேர் உயிரிழந்த நிலையில், துப்பாக்கி சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும் என ஜனாதிபதி ஒபாமாவுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். கனெக்டிகட் மாகாணம் நியூடவுன் பகுதியில் உள்ள சான்டி ஹூக் தொடக்கபள்ளியில், ஆடம் லான்சா என்பவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 20 குழந்தைகள் உட்பட 28 பேர் பலியாயினர்.
பின்னர் அந்த நபரும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துவிட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
பள்ளி மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து லான்சாவின் தந்தை மற்றும் மூத்த சகோதரரிடம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ஜனாதிபதி பராக் ஒபாமா, கண்ணீர் மல்க தொலைக்காட்சிக்கு நேரடி பேட்டி கொடுத்தார்.
இதற்கிடையே வெள்ளை மாளிகைக்கு ஓன்லைன் மூலம் ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தடுக்கும் வகையில், கடும் கட்டுப்பாடுகளுடன் துப்பாக்கி சட்டத்தைத் திருத்தி அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கூட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு அனுப்பப்பட்ட இதில் 43,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
இதுகுறித்து நியூயார்க் நகர மேயர் மைக்கேல் புளூம்பெர்க், துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுடும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்த போதிலும், குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவம் நிகழும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.
இந்த பள்ளிக்கூட துப்பாக்கிச் சூடு குறித்த ஜனாதிபதி ஒபாமாவின் இரங்கல் செய்தி மட்டும் போதுமானது அல்ல. இதுபோன்ற சம்பவங்கள், விர்ஜினியா டெக், அரோரா மற்றும் விஸ்கான்சின் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ள நிலையில், கடுமையான கட்டுப்பாடுகளுடன் துப்பாக்கிச் சட்டத்தை உடனடியாக திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

போனில் மிரட்டிய தீவிரவாதிக்கு சிறைத்தண்டனை

அமெரிக்க மருந்து நிறுவனத்திற்கு மிரட்டல் விடுத்த இந்தியருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியில் உள்ள ரோடி தீவில் வசிப்பவர் ஷானீல் ஜெயின்(வயது 56).
இவருக்கும், அமெரிக்க இராணுவத்திற்கு மருந்துகள் தயாரித்து வழங்கும் இசட்-மெடிக்கா என்ற நிறுவனத்திற்கும் இடையே மோதல் இருந்தது.
இந்தியா வந்த ஜெயின், அங்கிருந்தவாறு அமெரிக்காவில் உள்ள இசட்-மெடிக்கா நிறுவனத்திற்கு பல முறை போன் செய்து மிரட்டியுள்ளார்.
தான் தீவிரவாதி எனவும், அந்த மருந்து நிறுவனத்தை, குண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும், இந்தியாவில் அமெரிக்க சட்டங்கள் செல்லுபடியாகாது எனவும் கூறி மிரட்டியுள்ளார்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட அமெரிக்க பொலிசார் ஷானீல் ஜெயினை கைது செய்தனர். பின் ஜெயின் ஜாமினில் விடுவிக்கப்பட்டு, நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீவிரவாதி என தெரிவித்து மிரட்டல் விடுத்த ஜெயினுக்கு, 6 மாத சிறை தண்டனையும், 6 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து கனெக்டிகட் மாவட்ட நீதிபதி டேவிட் பென் உத்தரவிட்டார்.

ஹிலாரி மயங்கி விழுந்ததால் பரபரப்பு: வட ஆப்ரிக்கா பயணம் ரத்து

அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் திடீரென்று மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஹிலாரி கிளிண்டன் கடந்த 4 ஆண்டுகளில் 112க்கும் மேற்பட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
தற்போதும் தொடர் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு வரும் ஹிலாரி நேற்று திடீரென்று மயங்கி விழுந்தார்.
அவரது வயிற்றில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் மயங்கியதாக டொக்டர்கள் தெரிவித்தனர்.
உடனடியாக மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
உடல் நலம் சரியாகும் வரை அவர் வீட்டில் இருந்தே பணிபுரிவார் என்று கூறப்படுகிறது.
அவரை தினமும் டொக்டர்கள் கண்காணித்து வருவார்கள் என்று தெரிகிறது.
டொக்டர்களின் பரிந்துரையின்பேரில் தான் அவர் வீட்டில் இருந்தே பணிபுரிகிறார்.
அவர் விரைவில் அலுவலகத்திற்கு செல்ல ஆர்வமாக உள்ளதாக அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்துள்ளன.
ஹிலாரி, ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து விட்டு கடந்த வாரம் அமெரிக்கா திரும்பியதும் அவரது வயிற்றில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதனால் அவர் கடந்த வாரம் பணியாற்றவில்லை, இந்த பிரச்னையால் அவர் தனது வட ஆப்பிரிக்க பயணத்தை ரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அவுஸ்திரேலியா அருகே நிலநடுக்கம்

அவுஸ்திரேலியா அருகே பசிபிக் கடலில் உள்ள பப்புவா நியூ கினியா நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இங்கு இன்று அதிகாலை 1 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6 ஆக பதிவானதாக நிலநடுக்க மையம் தெரிவிக்கிறது.
நிலநடுக்கம் ஏற்பட்ட நேரத்தில் வீடுகளில் உள்ள படுக்கைகள், மற்றும் பாத்திரங்கள் உருண்டதனால் மக்கள் பதற்றம் அடைந்தார்கள்.
பூமிக்கு அடியில் 35 கி.மீ ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது