Link

ணக்கம் வருக வருக....

Pages

புதன், 31 ஜூலை, 2013

தொலைபேசி அழைப்பு 79 பேரின் உயிரை பறித்தது

 
கடந்த வாரம் ஸ்பெயினின் மேட்ரிட் நகரில் இருந்து ஃபெர்ரால் நோக்கி கடந்த வாரம் சென்ற ரெயில் விபத்துக்குள்ளானதில் 79 பேர் பரிதாபமாக பலியாகினர்.
66 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 15 பேரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது.
அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட இருமடங்கு வேகத்தில் வந்த அந்த ரெயில் ஒரு வளைவில் திரும்பும் போது தடம்புரண்டு கவிழ்ந்த காட்சியின் சி.சி.டி.வி. பதிவுகள் உலக ஊடகங்களில் எல்லாம் ஒளிபரப்பாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த விபத்து நிகழ்ந்த போது ரயில் டிரைவர் கட்டுப்பாட்டு அறை அதிகாரியுடன் தொலைபேசியில் பேசிய தகவல் விபத்துக்குள்ளான ரயிலின் கருப்பு பெட்டியில் இருந்து சேகரிக்கப்பட்டு ஒலிப்பதிவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
விபத்தையடுத்து கைது செய்யப்பட்ட டிரைவர் பிரான்சிஸ்கோ கர்சான் காயங்களுக்கு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். காயங்கள் ஆறி குணம் அடைந்ததையொட்டி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
விபத்து தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் பங்கேற்ற அவர் அனுமதிக்கப்பட்ட வேகத்தை கடந்து ரயிலை இயக்கியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 

செவ்வாய், 30 ஜூலை, 2013

கைதிகளை விடுவித்து சென்ற தீவிரவாதிகள் பொலிசார் வேடமிட்டு!!


பாகிஸ்தானில் பொலிசார் போன்று வேடமிட்டு சென்ற தீவிரவாதிகள், 300 கைதிகளை விடுவித்து சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள தேரா இஸ்மாயில் கான் என்ற பகுதியில் சிறைச்சாலை ஒன்று உள்ளது.
இதில் சுமார் 5000 கைதிகள் உள்ளனர், இவர்களில் 250 பேர் கொடூரமான தீவிரவாதிகள்.
இந்நிலையில் பொலிஸ் அதிகாரிகள் போன்று வேடமிட்டு வந்த 150 தீவிரவாதிகள், வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இந்த தாக்குதலில் சிறையின் வெளிப்புற தடுப்புச்சுவர் தகர்க்கப்பட்டது.
இதனையடுத்து தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிறைக்காவலர்களும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இருப்பினும் சிறையில் இருந்த 300 கைதிகளை தீவிரவாதிகள் விடுவித்து சென்றுள்ளனர்.
இத்தாக்குதலுக்கு தெஹ்ரிக் இ தாலிபன் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பின் தகவல் தொடர்பு அதிகாரி ஷாஹிதுல்லா ஷாஹித், தற்கொலை படையினர் 300 சென்றதாகவும், 300 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இத்தகவலை சிறைத்துறையின் ஆலாசகர் மாலிக் காசிம் கட்டாக் உறுதி செய்துள்ளார்.
மேலும், இத்தாக்குதலில் ஏராளமான கைதிகளும், நான்கு சிறைக்காவலர்களும், இரண்டு போராளிகளும் இறந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு முன்னதாகவே, தீவிரவாதிகள் டிரான்ஸ்பார்மர்களை வெடிகுண்டு வீசித் தகர்த்து சிறையை இருட்டாக்கியதும், பொலிசார் தங்களை துரத்தாமல் இருக்க வாகனங்களை சேதப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
 

திங்கள், 29 ஜூலை, 2013

தொடர்ச்சியாக 12 குண்டுகள் வெடித்தது: 47 பேர் உடல் சிதறி ?

 

ஈராக்கில் தொடர்ச்சியாக 12 இடங்களில் குண்டு வெடித்ததில் 47க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈராக்கில் ஷியா மற்றும் சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கு இடையேயான மோதல் தொடர்ந்து கொண்டே உள்ளது.
இந்நிலையில் இன்று காலை ஷியா பிரிவு மக்கள் கூடும் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து கார் குண்டுகள் வெடித்தன.
தொடர்ந்து வெடித்த 12 கார் குண்டுகளால், 47 பேர் உடல் சிதறி பலியாயினர், பலர் படுகாயமடைந்தனர்.
மேலும் அப்பகுதியில் இருந்த வீடுகள், கடைகள் முற்றிலுமாக சேதமடைந்தன.
இக்கொடூர தொடர் கார்குண்டுத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.{புகைப்படங்கள்}


 

ஞாயிறு, 28 ஜூலை, 2013

நீரில் மூழ்கிய சிறுவனின் உடல் கண்டெடுப்பு


பிரான்ஸ் கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த போது காணாமல் போன 16 வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 24ம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தின்போது அவனது தந்தையும் உடன் இருந்தார்.
மீட்பு பணியாளர்களின் உதவியை நாடிய போதிலும் சிறுவனின் உடலை உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்காக 3 உலங்குவானூர்திகள், மற்றும் படகு ஒன்றும் பயன்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று கிரன் நைட் என்ற குறித்த சிறுவனின் உடலம் மீனவர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் பேஸ்புக்கால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும்!


ஜேர்மனியில் பேஸ்புக்கை பயன்படுத்தும் நான்கில் மூன்று பங்கு மாணவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதாக ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
மன்ஸ்டார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சமூக விஞ்ஞானவியலாளர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்விலே இந்த தகவல் வெளிவந்துள்ளது.
33 பாடசாலைகளிலிருந்து சுமார் 5,600 வரையான மாணவர்களிடம் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் அநாவசியமான குறுஞ்செய்திகள் மற்றும் வீடியோக்கள் போன்றன தம்மை வந்தடைவதாக நான்கில் மூன்று பகுதியினர் தெரிவித்துள்ளனர்

சனி, 27 ஜூலை, 2013

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி: ரொறன்ரோவில் சம்பவம்


கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள ரொறன்ரோ பகுதியில் இளைஞன் ஒருவர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றச் இசம்பவத்தில் 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞனே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் ஒன்ராறியோவின் விசேட புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்திவருகின்றனர்.
இதற்கிடையில் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி ஒருவர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில், டுண்டாஸ் வீதியை சுற்றி பொலிசார் நின்றுகொண்டிருந்ததாகவும், ஒரு பொலிசார் அவர்கள் ஒருவரைப் பார்த்து கத்தியைக் கீழே போடுமாறு கூறினார்கள்.
அதன் பின்னர் ஒரு பொலிஸ்காரர் 10 தடைவைகள் துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டாகவும் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டு சம்பத்திற்கு பின்னர் குறித்த நபரை வைத்திசாலைக்கு எடுத்துச்செல்ல முற்பட்ட போதிலும் அவர் இறந்துவிட்டதாக விசேட புலனாய்வுப் பிரிவினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும் இத்துப்பாக்கிப்பிரயோகத்திற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை

மூன்று பெண்களை வீட்டுச் சிறையில் அடைத்து கற்பழித்த காமூகன்


அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர், கடந்த 10 ஆண்டுகளாக மூன்று பெண்களை வீட்டுச் சிறையில் அடைத்து வைத்து கற்பழித்து வந்தது தற்போது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தை சேர்ந்தவர் ஏரியல் காஸ்ட்ரோ(வயது 53).
இவன் கடந்த 2002ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டிற்குள் மிச்சேல் நைட்(வயது 20 ),அமெண்டா பெர்ரி(வயது 17), கினா டிஜெசஸ்(வயது 14) என்ற மூன்று பெண்களை கிளீவ்லாந்து வீதிகளில் கடத்திச் சென்று தனது வீட்டிற்குள் சிறை வைத்திருந்தான்.
இவர்களை கடந்த 10 ஆண்டிற்கும் மேலாக வெளியே விடாமல் அடைத்து வைத்து பாலியல் ரீதியாக அடித்து துன்புறுத்தி வந்துள்ளான்.
இதில் பெண் ஒருவர் கர்ப்பமான போது, கருவை கலைக்கும் வரை அடித்து உதைத்து பட்டினி போட்டுள்ளான்.
இந்நிலையில் கடந்த மே மாதம், மூன்று பெண்களில் ஒருவர் தப்பித்து வந்த போது தான், இவனின் சுயரூபம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து விரைந்து சென்ற பொலிஸ் அதிகாரிகள் காஸ்ட்ரோவை கைது செய்ததுடன், மற்ற பெண்களையும், பெர்ரிக்கு பிறந்த ஆறு வயது சிறுமியையும் விடுவித்தனர்.
 

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கில், காஸ்ட்ரோவுக்கு ஜாமினில் வெளியே வராதபடி, ஆயிரம் ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இவனது சொத்துக்கள் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

துருக்கி நாட்டை உளவு பார்த்த பறவையால் பரபரப்பு

 

துருக்கி நாட்டை உளவு பார்க்க வந்த பறவையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அண்டை நாடுகளை உளவு பார்ப்பதற்கு ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் துருக்கி நாட்டை உளவு பார்க்க பறவை ஒன்று எலாஷிக் மாகாணத்தின் அல்டினால்யா கிராமத்தில் வித்தியாசமாக பறந்து கொண்டிருந்தது.
அதைப்பார்த்த மக்கள் கிராம அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கவே உடனே அவர்கள் அந்த பறவையை பிடித்தனர்.
அதன் உடலில் ஒரு உலோகத்தினால் ஆன வளையம் பொருத்தப்பட்டிருந்தது.
அந்த வளையத்தில் “24311 டெல் அவி வுனியா இஸ்ரேல்” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
எனவே, எக்ஸ்ரே உள்ளிட்ட மருத்துவபரிசோதனை எடுத்து பரிசோதிக்கப்பட்ட பின்பு, மீண்டும் பறவை பறக்கவிடப்பட்டது.
துருக்கியை உளவு பார்க்க இஸ்ரேல் இப்பறவையை அனுப்பிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்தனர்

குர்ஹாம் சாக்கி சம்பவத்திற்காக அமைச்சர் பசில்


பிரித்தானிய தன்னார்வ தொண்டர் குர்ஹாம் சாக்கீ படுகொலைச் சம்பத்திற்காக, இலங்iயின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வருத்தம் வெளியிட்டதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சிமோன் டான்சூக் தெரிவித்துள்ளார். குர்ஹாம் சாக்கீ படுகொலை மற்றும் அவரது ரஸ்ய காதலி தாக்கப்பட்டமைக்காக அமைச்சர் பசில் ராஜபக்ஷ மன்னிப்பு கோரியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் சட்ட மா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் தொடர்ச்சியாக கேள்வி எழுப்ப உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பாராளுமன்றில் இது குறித்து கேள்வி எழுப்பப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

குர்ஹாம் சாக்கீ கொலை குறித்த விசாரணைகள் நிறைவடையாவிட்டால் அது குறித்து பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் போது கேள்வி எழுப்ப வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். 2011ம் ஆண்டு கிறிஸ்மஸ் தினமன்று குர்ஹாம் சாக்கீ மற்றும் அவரது ரஸ்ய காதலி தாக்கப்பட்டனர். இந்தத் தாக்குதலில் தன்னார்வ தொண்டரான குர்ஹாம் சாக்கீ படுகொலை செய்யப்பட்டார்

தடுப்பு முகாமிலிருந்து இலங்கையர்கள் தப்பியோட்டம்


இந்தோனேஷிய தடுப்பு முகாமொன்றிலிருந்து இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்தோனேஷியாவின் சுகாபுமி என்னும் தடுப்பு முகாமிலிருந்து இவ்வாறு இலங்கையர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

மூன்று இலங்கையர்களும், மூன்று ஈரானியர்களும் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த முகாமில் 66 புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். தற்போது 60 புகலிடக்கோரிக்கையாளர்களே இந்த முகாமில் இருப்பதாகவும், ஆறு பேர் தப்பிச் சென்றுள்ளதாகவும் முகாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாருக்கும் தெரியாமல் எவ்வாறு குறித்த இலங்கை மற்றும் ஈரானிய புகலிடக் கோரிக்கையாளர்கள் தப்பிச் சென்றாhகள் என்பது புரியவில்லை என முகாம் பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

வெள்ளி, 26 ஜூலை, 2013

படகு, கொக்கோஸ் தீவுக்கு அருகில் தத்தளிப்பு


முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து அவுஸ்திரேலியா சென்ற படகு, கொக்கோஸ் தீவுக்கு 40கடல் மைல் தொலைவில் கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த படகில் பயணித்தவர்கள் தம்மை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு முல்லைத்தீவிலுள்ள அவர்களது உறவினர்களுக்கு சட்லைட் தொலைபேசி மூலம் தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த படகு சுமார் ஒரு மாத காலத்திற்கு முன்னர் 60 பயணிகளுடன் முல்லைத்தீவிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. எனினும் இதுவரை காலமும் எந்தவிதமான தகவல்களும் கிடைத்திராத நிலையில், இன்று மாலை படகிலுள்ளவர்கள் தமது உறவினர்களுக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர்.
படகிலுள்ள 60 பயணிகளில் நான்கு கர்ப்பணி தாய்மார்களும் ஒன்பது சிறுவர்களும் உள்ளதாகவும், இரண்டு, மூன்று தடவைகள் விமானம் தம்மை வட்டமிட்டுச் சென்றதாகவும் எனினும் தம்மை காப்பாற்ற அவுஸ்திரேலிய கடற்படை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
உணவு மற்றும் எரிபொருள் முற்றாக தீர்ந்து போன நிலையில் தொடர்ந்தும் பயணிக்க முடியாத நிலையில் தாம் இருப்பதாகவும் அவர்கள் தமது உறவினர்களுக்குத் தகவல் வழங்கியுள்ளனர்,

வியாழன், 25 ஜூலை, 2013

எனது மகனின் தலையில் என்னை விட அதிக முடி உள்ளது: இளவரசர் !!


தன்னை விட தனது குழந்தைக்கு அதிகமான முடி இருப்பதாக இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் இளவரசர் வில்லியம்- கேத் மிடில்டன் தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனை பிரிட்டன் மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாட்டு மக்களும் கொண்டாடி வருகின்றனர்.
இதுகுறித்து வில்லியம் கூறுகையில், தனது குழந்தை வெயிட்டாக உள்ளதாகவும், பார்க்க பெரியதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தன் மகனின் தலையில், தனது தலையில் இருப்பதை விட அதிகமாக முடி உள்ளது என்று வில்லியம் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

புதன், 24 ஜூலை, 2013

அஸ்தியை திருடிய வாலிபர்போதைப்பொருள் என நினைத்து


அமெரிக்காவில் உள்ள டென்னிசி நகரில் 28 வயதான வில்லியம்   என்ற வாலிபர் பக்கத்து வீட்டு கதவை உடைத்து ஒரு மர்ம பெட்டியை திருடினார்.
அந்த பெட்டியுடன் தனது பாட்டி வீட்டிற்கு தப்பி ஓடினார். ஆனால் அதில் அவர் எதிர்பார்த்த பொருள் இல்லாமல் பெரும் ஏமாற்றம் அடைந்தார்.
பிறகு வில்லியம்சை கைது செய்து விசாரித்ததில் அவர் கூறிய பதில் பொலிஸாரை வியப்படைய வைத்தது.
‘அந்த பெட்டியில் போதைப்பொருளை வைத்திருப்பதாக நினைத்து திருடினேன். ஆனால் அதில் அஸ்தி இருந்தது’ என்று கூறினார்.
பெட்டியின் உரிமையாளர் ஸ்டீவன் மிட்லே கூறுகையில்
அது தனது தாயின் அஸ்தி என்று தெரிவித்தார். அதை அவர் ஏன் பாதுகாத்து வருகிறார் என்பது தெரியவில்லை. இருப்பினும் வீடு புகுந்து திருடியதற்காக வில்லியம்சை பொலிஸார் கைது செய்தனர்

பிரதமரை கொலை செய்ய சதி முயற்சி!!!


பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை மனித வெடிகுண்டு மூலம் கொல்லும் சதி திட்டம் முறியடிக்கப்பட்டதாக பாகிஸ்தான் உளவுத்துறையினர் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ராஜா கிலானியின் மகன் ஹைதர் கிலானி கடந்த மே மாதம் மர்ம மனிதர்களால் கடத்தப்பட்டார்.
இது தொடர்பாக வசீரிஸ்தான் பகுதியில் இயங்கிவரும் தீவிரவாத அமைப்பினரை உளவுத்துறையினர் பிடித்து விசாரித்தபோது ரைவிண்ட் பகுதியில் உள்ள பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டை சுற்றி அவரை கொல்வதற்காக அனுப்பப்பட்ட தற்கொலை படை தீவிரவாதிகள் சுற்றி வருவதாக தெரிய வந்தது.
இதற்காக பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷரப், முன்னாள் பிரதமர் சவுக்கத் அஜீஸ் ஆகியோர் மீது வெற்றிகரமாக தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய மடியுர் ரஹ்மான், முஹம்மது யாசீன் ஆகியோர் நியமிக்கப்பட்டதாக விசாரணையில் தெரிந்தது.
இவர்கள் இருவரையும் உயிருடனோ, பிணமாகவோ ஒப்படைப்பவர்களுக்கு ரூ.30 லட்சம் சன்மானம் வழங்குவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் வீடு அமைந்துள்ள ரைவிண்ட் பகுதியில் உள்ள தப்லீகி ஜமாத் அலுவலக வளாகத்தில் தங்கியிருந்த தற்கொலை படையினர் செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொண்டு பொது தொலைபேசி மூலமாகவே பிரதமரின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
சுமார் ஒரு வார காலம் அங்கே தங்கியிருந்த அவர்கள் உளவுத்துறையினர் தேடும் தகவலை ரகசியமாக தெரிந்துகொண்டு அங்கிருந்து தப்பியோடி விட்டதாகவும் இதன்மூலம் பிரதமரை கொல்ல நடத்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் உளவுத்துறையினர் தெரிவித்ததாக பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் 'எக்ஸ்பிரஸ் டிரிபியூன்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
 

புயல் வீசலாம்! பிரான்ஸ் மக்களுக்கு எச்சரிக்கை!!



[ செவ்வாய்க்கிழமை, 23 யூலை 2013, 02:38.54 பி.ப GMT ]
பிரான்ஸின் வடக்கு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனல் காற்று வீசலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலை படிப்படையாகக் குறைவடைந்து தற்போது மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
கடும் மழையினால் வீதிகளின் மேலாக நீர் தேங்கியிருப்பதால், மக்கள் போக்குவரத்திற்கு சிரமப்படுகின்றனர். கட்டிடங்களினுள்ளும் நீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை மழையுடன் கூடிய கடுங்காற்று காணப்படுவதனால் புயல் ஏற்படும் சாத்தியம் அதிகளவில் இருப்பதாகவும், இது மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தினைக் கொண்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

{காணொளி, இணைப்பு)











 

செவ்வாய், 23 ஜூலை, 2013

மற்றுமொரு நெருக்கடி சிறிலங்கா சந்திக்கவுள்ள??



 பிரித்தானிய தன்னார்வ தொண்டர் குர்ஹாம் சாக்கீ படுகொலை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்ப உள்ளதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சிமோன் டான்சூக் தெரிவித்துள்ளார்.
 

2011ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினமன்று, குர்ஹாம் சாக்கீயும் அவரது ரஸ்ய காதலி விக்டோரியாவும் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளரான குர்ஹாம் சாக்கீ கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் உரிய முறையில் நடைபெறவில்லை என ஏற்கனவே பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சிமோன் டான்சூக் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வார இறுதியில் சிமோன் டான்சூக் சிறிலங்காவுக்கு விஜயம் செய்ய உள்ளார்.

விசாரணைகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்ப உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடொன்று இவ்வாறு நடந்து கொள்வது சரியா என தாம் கேள்வி எழுப்ப உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை மூடிமறைக்க சிலர் முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆளும் கட்சி உறுப்பினர் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய காரணத்தினால் இவ்வாறு முயற்சிக்கப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சம்பவம் தொடர்பான இரண்டு பிரதான சாட்சியாளர்களுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்
 

ஞாயிறு, 21 ஜூலை, 2013

பீயர்போட்டி சோகத்தில் முடிவடைந்தது ??


உலகில் நாட்டுக்கு நாடு பல்வேறு வித்தியாசமான முறையில் திருவிழாக்கள் நடைபெறுகிறது.
இதேபோன்று ஸ்பெயின் நாட்டின் முர்சியா மாவட்டத்தில் உள்ள கிராமமொன்றில் பீர் குடிக்கும் போட்டி நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்டு பல்வேறு நபர்கள் பாட்டில், பாட்டிலாக பீர் பானத்தை வயிற்றுக்குள் தள்ளினர்.
இதில் கிராசிகா(வயது 45) என்பவர் 20 நிமிடத்தில் 6 லிட்டர் பீர் குடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.
ஆனால் இந்த வெற்றி சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை, போட்டி முடிந்ததுமே இடைவிடாது வாந்தி எடுத்தார்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றும், எவ்வித பலனும் இல்லாமல் போனது.
கோலாகல ஆரவாரத்துடன் நடைபெற்ற போட்டி இறுதியில் சோகத்தில் முடிந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 

இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலில் 30 பேர் ?


ஈராக்கிய தலைநகர் பக்தாத்தில் இடம்பெற்ற தொடர் கார்க் குண்டுத் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தலைநகர் பகத்தாத்தின் பல பகுதிகளில் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வர்த்தக வலயங்களான கராடா, சூத்ரா, டொபிச்சீ, பஹய்யா, ஸபார்னியா போன்ற பிரதேசங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நோன்பு திறக்கும் சந்தர்ப்பத்தில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களில் மட்டும் 2500 ஈராக்கியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஷியா மற்றும் சுனி முஸ்லிம்களுக்கு இடையிலான மோதல்களில் இவ்வாறு பாரியளவில் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஷியா இனத்தைச் சேர்ந்த பிரதமர் தங்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்துவதாக சுனி முஸ்லிம்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
 

சிறைக் கைதிகளை விடுதலை செய்ய இஸ்ரேல் முடிவு


இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை ஏற்படுவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக இஸ்ரேல் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தங்கள் நாட்டு சிறையில் இருக்கும் பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கடந்த சில மாதங்களுக்குள் ஆறாவது முறையாக இஸ்ரேலுக்கு வந்தபோது, நடந்த நான்கு நாட்கள் பேச்சுவார்த்தையின் முடிவில் இந்த முடிவு எட்டப்பட்டது.
இது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில்,
ஜோன் கெரி அடுத்த வாரத்தில் இதுகுறித்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை வாஷிங்டனில் தொடங்கலாம் என்று அறிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டினால்தான், மற்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பதால் ஜான் கெர்ரி இதில் தீவிரமாக முயற்சி செய்தார் என்று பத்திரிகையாளர் செய்தி தெரிவிக்கின்றது.
இஸ்ரேலிய மனித உரிமை கழகத்தின் கணக்கீட்டின்படி 4,817 பாலஸ்தீனியர்கள் கைதிகளாக உள்ளதாகவும், அவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தெரியவருகின்றது.
பாலஸ்தீனியர்களும் அவர்கள் தரப்பில் கடந்த ஒன்பது மாதங்களாக சமரசப் பேச்சுவார்த்தைக்கு முயற்சித்து வந்ததாக பிரதமர் லிகட் பெடிநோவின் கட்சி உறுப்பினரான ஸ்டெய்னிட்ஸ் தெரிவித்தார். ஆனால், இஸ்ரேலால் ஆக்ரமிக்கப்பட்ட வெஸ்ட்பேங்க் மற்றும் கிழக்கு ஜெருசலேமில் நடைபெறும் கட்டுமானத் தீர்வு நிறுத்தம் போன்ற பாலஸ்தீனத்தின் முன் நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்க மறுத்துவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
கட்டுமான நிறுத்தம் அல்லது இஸ்ரேலின் சலுகைகளோ, எல்லைகளோ வரையறுக்கப்படும் முன்னால் பாலஸ்தீனம் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு உடன்படாது என்றும் அவர் கூறினார்.
கடந்த 2010ஆம் ஆண்டு இரண்டு நாடுகளும் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது கட்டுமானப்பணிகள் குறித்த விஷயத்தில் உடன்படிக்கை ஏற்படாததால் பேச்சுவார்த்தை நின்றுபோனது. இத்தகைய கட்டுமானங்கள் சர்வதேச விதிகளுக்கு முரணானவை என்றபோதிலும் இஸ்ரேல் அதனை மறுத்துள்ளது

சிறை விலைமாதர்களை விலை கொடுத்து வாங்கிய!!


இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோயின் மூன்று உதவியாளர்கள் விலைமாதர்களை விலைகொடுத்து வாங்கிய குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவருக்கும் ஐந்து தொடக்கம் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
17 வயதான பெண்ணுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வதற்கென பணம் வழங்கிய குற்றச்சாட்டில் சில்வியோ பெர்ஸ்கோனிக்கு கடந்த மாதம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும் தம்மீதான குற்றச்சாட்டை சில்வியோ பெர்லஸ்கோனியும், குறித்த 17 வயதுப் பெண்ணும் நிராகரிப்பதாக குறிப்பிட்டிருந்தனர்.
இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ள போதிலும், அவர் தொடர்ந்தும் சுதந்திரமாக நடமாடுவதுடன், பாராளுமன்ற உறுப்பினராகவும்

ஆடம்பர திருமணம்: சீன தலைவர் கட்சியிலிருந்து?


மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் நடத்திய, சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர், பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சீனாவின் புதிய அதிபர் சி ஜின்பிங், கடுமையான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
சீனாவின், ஹீபி மாகாணத்தின், பிங்டிங்பாவ் நகர கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலராக இருந்தவர் யூ ஷû வாங். சமீபத்தில், இவரது மகளுக்கு, 20 லட்சம் ரூபாய் செலவில் திருமணத்தை நடத்தினார்.
திருமணத்தின் போது ஏராளமான மொய் பணமும், அன்பளிப்புகளும் கிடைத்தன.
கட்சியின் சிக்கன நடவடிக்கையை மீறி செயல்பட்டதாக, இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, இவர் கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
திருமணத்தின் போது கிடைத்த மொய் பணம் மற்றும் அன்பளிப்புகளை திருப்பிக் கொடுக்கும்படி, அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 

சனி, 20 ஜூலை, 2013

தீவிரவாதியின் 5 குழந்தைகள் குண்டு வெடித்து ?


ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதி தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்த குண்டு வெடித்து ஒரு தீவிரவாதியின் குடும்பமே பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீவிரவாத கும்பலான தலிபான் இயக்கத்தின் பக்திக்கா மாகாண தளபதியாக இருப்பவன் அப்துல்லா. அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களை கொல்லும் நோக்கத்தில் நேற்று முன்தினம் தனது வீட்டில் அப்துல்லா ரகசியமாக வெடி குண்டுகளை தயாரித்துக் கொண்டிருந்தான்.
குண்டுகளை காய வைத்துவிட்டு அப்துல்லா வெளியே சென்றிருந்தபோது அவனது குழந்தைகள் அந்த வெடி குண்டுகளை எடுத்து பந்து போல் உருட்டி விளையாடின. சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதனையடுத்து, மற்ற குண்டுகளும் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இந்த விபத்தில் அப்துல்லாவின் வீட்டில் இருந்த ஒரு பெண்ணும் அவனது 5 குழந்தைகளும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பலியான குழந்தைகள் 3 முதல் 7 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

ஒன்றிய கண்காணிப்பாளர்களை அழைக்கவும்-


 ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து தேர்தல் கண்காணிப்பாளர்களை கொண்டுவருமாறு தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
தேர்தல் கண்காணிப்பாளர்கள் என்ற வகையில் அவர்களுக்கு உலகளாவிய அங்கீகாரம் உள்ளதால் அவர்கள் கருத்துக்கு கூடிய நம்பகத்தன்மை இருக்கும். இதை நாம் அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தியுள்ளோம் என்று பவ்ரல் அமைப்பின் தலைவர் ஜெஸிமா இஸ்மெயில் தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணையாளருடன் நான் தொடர்புகொண்டபோது ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் வரும் சாத்தியம் இன்னும் உள்ளது என்றும். ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளிலிருந்து கண்காணிப்பாளர்களை அழைப்பதை தான் நிராகரிக்கவில்லையென பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் றோகன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
சுதந்திர தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பைச்சேர்ந்த நேபாளம் பங்களாதேஷ் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் 10 பேரை பவ்ரல் அழைக்கவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
'ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கு தேர்தல் செயன்முறையில் பங்குபற்றுவதற்கு பிரஜைகளை இணைத்துக்கொள்ளல்' எனும் திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் 88 677 அமெரிக்க டொலர்களை வழங்கும்போதே பவ்ரவ் அமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வு ஜப்பானிய தூதரகத்தில் நேற்று நடைபெற்றது. வட மாகாண சபைத்தேர்தலுக்காக 4500 தேர்தல் கண்காணிப்பாளர்களை பயிற்றுவிப்பதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது

வியாழன், 18 ஜூலை, 2013

குழந்தை பிறக்க தாமதம் ஏன் கேத் மிடில்டனுக்கு ?


இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவியும், நிறைமாத கர்ப்பிணியுமான கேத் மிடில்டன் பிரசவத்திற்காக லண்டன் செயிண்ட்மேரிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு கடந்த வாரம் சனிக்கிழமை குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.
ஆனால் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது, இதனால் போனில் எப்போது தகவல் வரும் என அரச குடும்பமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.
இதேபோன்று பிறக்க போகும் குழந்தையும், தாயையும் புகைப்படம் எடுப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த பத்திரிக்கையாளர்களும், புகைப்பட நிபுணர்களும் குவிந்துள்ளனர்.
இதற்கிடையே ஆண் குழந்தை பிறக்குமா? பெண் குழந்தை பிறக்குமா? என்று பெரிய அளவில் சூதாட்டமே நடக்கிறது.
மேலும் குழந்தை பிறப்புக்காக ராணுவத்தில் இருந்து விடுமுறையில் வந்துள்ள இளவரசர் வில்லியம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் சகோதரர் ஹாரியுடன் போலோ விளையாடி பொழுதை கழிக்கிறார்

சேர்க்கையாளர்கள் திருமண சட்டமூலத்திற்கு மகாராணி ""


இங்கிலாந்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துக்கொண்டு சேர்ந்து வாழ்வதற்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுந்து வந்தது.
பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவின் சில மாநிலங்கள் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு அங்கீகாரம் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கோரிக்கை வலுப்பெற்றது.
இதுதொடர்பாக ஆளும் கட்சி எம்.பி.க்களுக்கிடையே கருத்து பேதம் ஏற்பட்டதால் இந்த சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல் நீடித்தது. பல ஆண்டு கால தடைகளை முறியடித்து பாராளுமன்ற கீழ்சபையில் ஓட்டெடுப்பின் மூலம் இந்த மசோதா வெற்றி பெற்றது.
மேல்சபையான பிரபுக்கள் சபையில் சிறிய விவாதத்திற்கு பின்னர் ஓட்டெடுப்பு இல்லாமல் இந்த மசோதா நிறைவேறியது.
இங்கிலாந்து நாட்டு சட்டப்படி, எல்லா மசோதாக்களும் இங்கிலாந்து ராணியின் ஒப்புதல் பெற்ற பின்னரே சட்டமாக முடியும். எனவே, இந்த சட்ட மசோதா ராணியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
இந்த மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதற்கான அறிவிப்பு நேற்று இங்கிலாந்து பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட போது எம்.பி.க்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இதனையடுத்து, ஓரின சேர்க்கையாளர்கள் தேவாலயங்களில் திருமணம் செய்துக்கொண்டு சேர்ந்து வாழ்வதற்கு இங்கிலாந்தில் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் அடுத்த (2014) ஆண்டு துவக்கத்தில் முதல் ஓரினச் சேர்க்கையாளர் திருமணம் இங்கிலாந்தில் நடைபெறும் என தெரிகிறது

5520 லட்சம் கோடி ரூபாய் கணக்கில் வந்ததால் இன்ப அதிர்ச்சி!!


அமெரிக்காவை சேர்ந்த கிரிஸ் ரெனால்ட்ஸ்(56) என்பவர் பழங்கால கார் உதிரி பாகங்களை வாங்கி விற்கும் தொழிலை செய்து வருகிறார்.
இணையதளம் மூலமாக இந்த தொழிலை செய்ய வசதியாக 'ஆன் லைன் பேங்கிங்' எனப்படும் உடனடி பணப் பறிமாற்ற நிறுவனமான 'பே பால்' நிறுவனத்தில் இவர் கணக்கு தொடங்கியுள்ளார்.
சென்ற மாதத்தின் கணக்கு இறுதி அறிக்கையை பே பால் நிறுவனம் கிரிஸ் ரெனால்டுக்கு அனுப்பி வைத்தது.
இதைக் கண்ட அவருக்கு இன்ப அதிர்ச்சியில் மூச்சே நின்று விடுவது போல் ஆகிவிட்டது. அவரது கணக்கில் கையிருப்பாக 92 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்புக்கு 5 ஆயிரத்து 520 லட்சம் கோடி ரூபாய்)இருப்பதாக அந்த மாத அறிக்கை குறிப்பிட்டது.
பே பால் நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக கணக்கு வைத்திருக்கும் கிரிஸ் ரெனால்ட், 'இதுவரை இந்த கணக்கின் மூலம் மாதமொன்றுக்கு 100 டாலர்களுக்கு மேல் நான் வரவு - செலவு செய்தது கிடையாது.
என் கணக்கில் இவ்வளவு பெரிய தொகை இருப்பதாக அறிக்கை வந்ததும், நாம் வங்கிக்கு இவ்வளவு பணம் கட்ட வேண்டுமா? என்று பயந்து விட்டேன். பிறகுதான் என் கணக்கில் இந்த தொகை பற்றாகி இருப்பது தெரிய வந்தது.
உடனடியாக 'ஆன் லைன்' மூலம் என் கணக்கு விபரத்தை சரிபார்த்த போது எனது கையிருப்பு பூஜ்ஜியம் டாலராக இருந்தது' என்கிறார்.
கம்ப்யூட்டர் குளறுபடியால் இந்த தவறு நேர்ந்து விட்டதாக பே பால் நிறுவனம் அறிவித்துள்ளது.
உண்மையாகவே இவ்வளவு பெரிய தொகை உங்களுக்கு கிடைத்து விட்டால் என்ன செய்வீர்கள்? என்று அவரிடம் கேட்டபோது, 'நான் சமூக பொறுப்பு மிகுந்த குடிமகன். முதலில் அமெரிக்காவின் எல்லா கடனையும் அடைத்துவிட ஏற்பாடு செய்வேன்' என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார்

புதன், 17 ஜூலை, 2013

பாதியில் இடைநிறுத்தப்பட்ட விண்வெளி பயணம்


நாசா விண்வெளி மையத்திலிருந்து ஆறு விண்வெளிவீரர்கள் விண்ணிற்கு செலுத்தப்பட்டுள்ளனர்.
அதில் லுகா பர்மிடானோ என்ற இத்தாலி வீரர் விண்ணில் நடக்க இருக்கும் முதல் இத்தாலியர் என்ற பெருமையுடன் கிறிஸ்டோபர் காசிடி என்ற மற்றொரு வீரருடன் இன்று விண்வெளியில் நடக்க ஆரம்பித்தார்.
விண்வெளியில் நடத்தப்பட வேண்டிய வழக்கமான பராமரிப்பு பணியுடன், கேபிள் இணைப்பு போன்ற பணியையும் செய்வதற்காக அவர்கள் ஆறு மணி நேரம் விண்வெளியில் இருப்பதாக இருந்தது. ஆனால், ஒரு மணி நேரத்திற்கெல்லாம் பர்மிடானோ தனது பின்னந்தலையில் நிறைய தண்ணீர் இருப்பதுபோல் உணருவதாக சொன்னதும் கண்காணித்துக் கொண்டிருந்த அனைவரும் திடுக்கிட்டனர்.
முதலில், அதனை வியர்வை என்று அவர் நினைத்தார். தண்ணீர் குடிப்பதற்காக ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருந்த தண்ணீர்ப் பையிலிருந்து கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று அவரது சக வீரர் காசிடி தெரிவித்தார். ஆனால், சிறிது நேரத்திற்கெல்லாம் அந்தத் தண்ணீர் அவரது கண்ணில் நிறைய ஆரம்பித்தது.
இதனால் நாசா மையம் இருவரையும் விண்வெளி மையத்திற்கு திரும்ப அழைத்தது. அதற்குள் அவரது மூக்கு,வாய் போன்ற இடங்களிலும் நீர் சேர ஆரம்பித்து அவரால் நாசாவின் அறிவிப்பைக் கூட கேட்க இயலவில்லை. பர்மிடானோ திரும்புவதற்கு உதவிய காசிடி, உடனடியாக தாங்கள் நின்றிருந்த பகுதியை சுத்தம் செய்த பின்னர் மீண்டும் விண்வெளி மையத்திற்குள் நுழைந்தார்.
அங்கிருந்த மீதி நால்வரும் பர்மிடானோவின் ஹெல்மெட்டைக் கழற்றி அவரது தலையைத் துவட்ட உதவினர். நாசாவின் தொலைக்காட்சியில் தோன்றிய பர்மிடானோ அனைவரையும் நோக்கி உற்சாகத்துடன் கையசைத்தார்.
இந்த நீர்க்கசிவு எதனால் ஏற்பட்டது என்று ஆராயப்பட்டு வருகின்றது. கடந்த 2004-ம் ஆண்டு, ரஷ்ய வீரர்களும், அமெரிக்க வீரர்களும் விண்வெளியில் நடந்தபோது, அவர்கள் அணிந்திருந்த உடையில் ஏற்பட்ட பிரச்சினையினால் 14 நிமிடத்திற்கெல்லாம் திரும்ப அழைக்கப்பட்டனர். இப்போது இவர்களின் விண்வெளி நடை ஒரு மணி 32 நிமிடம் நீடித்தது
 

மண்டேலாவின் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாட


தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பினத் தலைவரும், இனவெறிக் கொள்கையை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டு ஜனாதிபதியாக உயர்வு பெற்ற நெல்சன் மண்டேலாவின் பிறந்ததினம் வெகு விமர்சையாக கொண்டாப்படவுள்ளது.
எதிர்வரும் 18ம் தேதி அவரின் பிறந்த நாள் ஆகும்.
உயிர் காக்கும் சாதனங்களின் உதவியுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நெல்சன் மண்டேலாவின் 95வது பிறந்த நாளை உலகளாவிய அளவில் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
பொது வாழ்க்கையில் நெல்சன் மண்டேலாவின் 67 ஆண்டு கால தொண்டினை போற்றும் விதமாக 67 நிமிடங்களை பொதுப்பணிக்கு செலவிட உள்ளேன் என இங்கிலாந்தின் பிரபல தொழிலதிபரான ரிச்சர்ட் பிரான்சன் தெரிவித்துள்ளார்.
மண்டேலா பிறந்த ஊரில் வரும் 18ம் தேதி அவரது பெயரில் புதிதாக அமைக்கப்பட்ட சிறப்பு அறிவியல் பாடசாலை திறக்கப்படுகிறது. தென்னாபிரிக்காவிலுள்ள பாடசாலைகளுக்கு  வர்ணம் பூசவும், ஏழை குழந்தைகளுக்கு இலவச ஆடைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 17 நகரங்களில் நலத்திட்ட உதவிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஆப்பிரிக்க இசை கலைஞர்கள் மெல்போர்ன் நகரில் மாபெரும் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
தனது வாழ்நாளில் 46 ஆண்டுகளை சிறை தண்டனையில் கழித்த மண்டேலா 2010ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடுமையான நுரையீரல் நோய்த்தொற்று காரணமாக நெல்சன் மண்டேலா கடந்த மாதம் 8ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது நிலைமை மோசமாகவே, உயிர் காப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டன.
இதனிடையில் மண்டேலா குடும்பத்தினரின் கல்லறைப் பிரச்சினைகள் நீதிமன்றம் வரை சென்றன. அவ்வழக்கை விரைந்து முடிப்பதற்காக மண்டேலா கோமா நிலைக்குச் சென்றுவிட்டார் என்றும் சொல்லப்பட்டது.
பின்னர், அரசும், அவரது மனைவி மற்றும் நண்பர்கள் அனைவரும் இதற்கு மறுப்பு அறிக்கையும் விடுத்தனர். பொதுமக்கள் அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 6 வாரங்கள் கடந்த நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவமனை அறிவித்துள்ளது. அவரது மனைவியும் அதனை ஆமோதித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா முழுவதும் இருக்கும் பாடசாலை குழந்தைகள் ஒரே நேரத்தில் அவரை வாழ்த்தி 'ஹேப்பி பேர்த் டே டூ யூ..' என இசைக்க உள்ளனர்

செவ்வாய், 16 ஜூலை, 2013

பிறக்க போகும் குழந்தையை தத்தெடுக்க போட்டி


அமெரிக்காவில் நோயுடன் பிறக்க போகும் குழந்தையை தத்தெடுக்க நூற்றுக்கணக்கானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கர்ப்பமாக உள்ளார்.
அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்த போது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு டவுன் சின்ட்ரோம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து குழந்தையை கலைக்க அவர் விரும்பினார். ஆனால் கருவை கலைக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் அமெரிக்காவின் சட்டப்படி, கர்ப்பமான 5 மாதத்திற்கு பிறகு கருவை கலைக்கக் கூடாது. அப்பெண்ணுக்கு 5 மாதம் முடிய இன்னும் ஒரு வார காலம் கூட இல்லை.
இந்நிலையில் இது குறித்து அறிந்த கெய்ன்ஸ்வில் ட்ரினிட்டி கத்தோலிக்க தேவாலய பாதிரியார் தாமஸ் வான்டர் வூட் தேவாலயத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.
அதாவது நோயுடன் பிறக்கும் இந்த குழந்தையை தத்தெடுக்க விரும்புவோர் தன்னை தொடர்புகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதைப் பார்த்து உலகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் குழந்தையை தத்தெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளன.
அதில் 3 குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன, அதில் ஏதாவது ஒரு குடும்பத்திடம் குழந்தை ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.

டெலிவரிக்கு கவர்ச்சியான பெண்களைத் தேடும் நிறுவனம்


சுவிட்சர்லாந்தில் புல்டாக் பிட்சா நிறுவனம் தனது கிளையில் பணிபுரிய அழகான இளம் பெண்கள் வேண்டும் விளம்பரம் ஒன்றை அறிவித்துள்ளது.
புல்டாக் பிட்சா நிறுவனமானது ஜெனிவா மற்றும் லுசேர்ன் நகரங்களுக்கு இடையேயுள்ள நியான் என்னும் பகுதியில் இதனை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
மேலும் இதன் மூலம் நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு பிட்சா வழங்க விரைவில் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது.
இந்த விளம்பரம் குறித்து மேகாலி ஹெல்ஸ்மேன் என்னும் பெண்ணியவாதி தனது கடும் எதிர்ப்பினை சுவிஸ் ஊடகமொன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனமானது பெண்கள் மட்டுமே வேலைக்கு வேண்டும் மேலும் அவர்கள் தோற்றத்தில் அழகானவர்களாக இருத்தல் வேண்டும் என்று விளம்பரம் கொடுத்துள்ளனர்.
இந்த விளம்பரத்தால் அந்த நிறுவனமானது சட்டரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.
மேலும் கவர்ச்சியான பெண்களை இந்த தொழிலுக்கு பயன்படுத்துவது என்பது முட்டாள்தனமாக விடயம் என்றும் இதனால் அந்த பெண்கள் ஏராளமான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் கூறியுள்ளார்.
இது குறித்து புல்டாக் பிட்சா உரிமையாளரான பீட்டர் செட்பர் கூறுகையில், நான் இந்த பிட்சா தொழிலை தொடங்கும் போது எதிர்மறையான கருத்துக்களை எதிர்பார்த்தேன் என சுவிஸ் பத்திரிக்கையில் பதில் கூறியுள்ளார்.
பேஸ்புக்கில் இந்த பிட்சாவிற்கான விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது, அவற்றில் ஒரு இரு பெண்கள் மார்பகம் தெரியும் வகையில் வெள்ளை சட்டை மற்றும் தலையில் தொப்பியுடன் கூடவே ஒரு பிட்சா பாக்சுடன் விளம்பரம் கொடுத்துள்ளனர்.
எனது நிறுவனத்தில் மிகவும் மோசமான ஆடைகளை அணிந்து கொண்டு இந்த தொழிலை செய்யப்போவதில்லை. மேலும் அவர்கள் ஏதேனும் பிரச்சனைகளுக்கு ஆளானால் அவர்களை பாதுகாத்துக் கொள்வதற்காக கண்ணீர் வரவைக்கும் புகைக் குண்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு 4 பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மொடல் அழகிகளும் உள்ளனர். ஏராளமான ஆண்கள் இந்த பணிக்கு விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால் அவர்கள் தெரிவு செய்யப்படவில்லை.
மேலும் இந்த விளம்பரமானது முழுக்க முழுக்க ஒரு வியாபார நோக்கத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

திங்கள், 15 ஜூலை, 2013

போலந்து ஜனாதிபதி மீது முட்டை வீச்சு


1943ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ரஷ்யாவின் உக்ரைன் பகுதியில் நடந்த படுகொலை ஒன்றில், உக்ரைனின் கிளர்ச்சியாளர்கள் குழுவைச சேர்ந்த போலந்து நாட்டவர்கள் பெருமளவில் உயிர் இழந்தனர்.
அவர்களுக்கு ஆண்டுதோறும் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
சென்ற வாரம் போலந்து நாட்டின் பாராளுமன்றக் கூட்டத் தொடரில் உக்ரைன் படுகொலையில் இறந்தவர்கள் பற்றிக் குறிப்பிடப்படும் போது இனப்படுகொலை என்ற முத்திரையுடன் இனத்தை சுத்திகரிப்பு செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி உக்ரைனில் வசித்துவந்த போலந்து மக்களை கோபப்படுத்தியது.
நேற்று ஞாயிற்றுக் கிழமையன்று, போலந்தின் ஜனாதிபதி ப்ரோனிஸ்லாவ் கொமொரொவ்ஸ்கி உக்ரைனின் வடக்கில் உள்ள வயோலின் பகுதிக்கு சென்றிருந்தார். அங்கிருந்த போர் நினைவிடத்தைப் பார்வையிட்ட அவர், கத்தோலிக்க ஆலயத்தின் பிரார்த்தனைக் கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
பிரார்த்தனைக் கூட்டத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்த அவரின் தோளை அருகில் இருந்த கூட்டத்திலிருந்து ஒருவர் தட்டினார். திரும்பிப் பார்த்த அவர் முகத்தில் தன் கையிலிருந்த அவரது முகத்தில் முட்டையை வீசினார்..
உக்ரைனின் தெற்குப் பகுதியான சப்போரிஷியாவைச் சேர்ந்த 21 வயதுடைய அவரை பொலிஸார் கைது செய்தனர். அவருக்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
 

ஜனாதிபதியாக முஹம்மது எல்பரடெய் பதவியேற்பு


எகிப்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சியை அடுத்து முன்னாள் ஜனாதிபதி முஹம்மது மோர்சியை ராணுவம் பதவி நீக்கம் செய்தது.
இதனையடுத்து, முஹம்மது எல்பரடெய் பிரதமராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரை பிரதமராக நியமிப்பதற்கு பலர் ஆட்சேபனை தெரிவித்ததால் துணை அதிபராக நியமித்து தற்காலிக ஜனாதிபதி அட்லி மன்சூர் அறிவித்தார்.
அதிபர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் எகிப்தின் வெளியுறவு துறைக்கான துணை ஜனாதிபதியாக முஹம்மது எல்பரடெய் பதவி ஏற்றார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அணு கட்டுப்பாட்டு கழகத்தின் முன்னாள் இயக்குனராகவும் எல்பரடெய் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீப்பிடித்ததற்கு பேட்டரிகள் காரணமல்ல: ஆய்வாளர்கள்?


 
பேட்டரி பிரச்சினை காரணமாக கடந்த ஜனவரி மாதம் போயிங் விமான நிறுவனத்தின் 50 டிரீம் லைனர் விமானங்கள் தரையிறக்கப்பட்டன.
இந்தப் பிரச்சினை சரி செய்யப்பட்டபின், அவை மீண்டும் இயக்கத்திற்கு வந்தன.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று இங்கிலாந்து நாட்டின் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எத்தியோப்பியன் விமானம் ஒன்று திடீரெனத் தீப்பிடித்தது. இந்த விமானம் டிரீம் லைனர் வகையைச் சேர்ந்தது.
பேட்டரி பிரச்சினைக்கு பின்னர் செயல்படும் முதல் வர்த்தக விமானம் இதுவாகும். எனவே தீயை அணைத்த பின்னர், போயிங் நிறுவன அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்த ஆய்வை மேற்கொண்டனர். ஆரம்பகட்ட ஆய்வில் பேட்டரிகளால் இந்த தீவிபத்து ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேட்டரிகள் பொருத்தப்பட்டிருந்த இடத்தின் அருகில் தீவிபத்து ஏற்படவில்லை என்றும் அவர்களால் கூறப்பட்டது.
இந்த விமானம் லண்டன் விமான நிலையத்திலேயே ஒரு கூடாரத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணைகள்
நடைபெற்று வருகின்றன. விமானத்தின் பின்புறமுள்ள சிக்கலான உடல் பகுதியின் மேல்புறம் அதிக வெப்ப சேதம் ஏற்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.
விமானத்தின் துணை பேட்டரி பவர் யூனிட் அமைந்துள்ள பகுதி இது என்றபோதிலும், இதுதான் காரணம் என்பதற்கு எந்தவித நேரடி ஆதாரமும் இல்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எத்தியோப்பியன் நிறுவனம் தனது டிரீம் லைனர் விமானங்களைத் தொடர்ந்து இயக்கப்போவதாக அறிவித்துள்ளது. தீப்பிடிப்பதற்கு முன்னால், அந்த விமானம் எட்டு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எனவே, இந்த சம்பவத்தினால் விமானப் பாதுகாப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று அந்நிறுவனம் கருதுகின்றது

ஞாயிறு, 14 ஜூலை, 2013

தேர்தலில் முஸ்லிம் பெண்கள் முகத்தை காட்ட வேண்டும்


எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் நிகாப் அணிந்து வரும் முஸ்லிம் பெண்கள் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேசிய அடையாள அட்டையினை கொண்டு வரும் அதேவேளை கட்டாயமாக அவர்களுடைய முகத்தையும் அங்குள்ள அதிகாரிகளுக்கு காண்பிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இவ்வாறு நிகாப் அணிந்து வரும் முஸ்லிம் பெண்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி சோதனையிடுவதற்கென சகல வாக்குச்சாவடிகளிலும் பெண் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தலில் வாக்களிக்க வரும் முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிந்து வருவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. அதனை தடை செய்யுமாறு நாம் கோரவுமில்லை. ஆனால் வாக்குச்சாவடிகளில் இருக்கும் பெண் உத்தியோகத்தர்களிடம் தேசிய அடையாள அட்டையினை காண்பிக்கும் போது முகத்தையும் காண்பிக்க வேண்டும்.
தேர்தல் சமயத்தில் நடைபெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கும் வீண் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்குமே இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேவேளை குறித்த மூன்று மாகாணங்களிலும் தேர்தலை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்

மாத்திரைகள், சுன்னத் செய்யும் கருவிகளுடன் பாகிஸ்தான் பிரஜை


பாகிஸ்தான் பிரஜை ஒருவர் 6 ஆயிரம் மாத்திரைகளுடனும் சுன்னத் செய்வதற்கான உபகணங்களுடனும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று காலை 7.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஸ்கட்டிலிருந்து ஓமன் ஏர்வேஸ் விமானத்தில் வந்த 37 வயதுடைய பாகிஸ்தான் பிரஜையிடமிருந்தே 3 இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான குறித்த மாத்திரைகளும் சுன்னத் செய்வதற்கான ஆயிரத்துக்கு மேற்பட்ட கருவிகளும் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இம்மாத்திரைகள் மனநோயாளிகளின் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும்
என்பதோடு மாணவர்கள் இதனை கூடுதலாக பயன்படுத்தும் போது ஒருவித போதை ஏற்படுவதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த நபருக்கு 10 ஆயிரம் தண்டம் விதித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சந்தேக நபர் இதற்கு முன்னரும் சுங்கப் பிரிவினரால் இவ்வாறான மாத்திரைகளை கடத்தி வந்த போது கைது செய்யப்பட்டவர் எனவும் இவர் கொழும்பு பிரதேசத்தில் உள்ள பெண்ணொருவரை திருமணம் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

சனி, 13 ஜூலை, 2013

இறந்த நபர் மேயராக தெரிவான அதிசயம் !!!


மெக்சிகோவில் இறந்த நபர் ஒருவர் மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு மெக்சிகோவில் உள்ள ஓயாகசா நகருக்கு அருகே உள்ளது சான் அகஸ்டின் அமாடென்கோ என்ற கிராமம்.
இந்த கிராமத்தில் மேயரை தெரிவு செய்வதற்கான நடந்த தேர்தலில், லெனின் கார்பெல்லிடோ என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், லெனின் கடந்த 2010ம் ஆண்டு இறந்துவிட்டதாக வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ் கிடைத்துள்ளது தான்.
அதன் பிறகு தான் லெனின் போலியாக இறப்புச் சான்றிதழ் வாங்கியது தெரிய வந்தது.
முன்னதாக கடந்த 2004ம் ஆண்டு லெனின் மற்றும் 4 பேர் சேர்ந்து தன்னை கற்பழித்ததாக பெண் ஒருவர் பொலிசில் புகார் கொடுத்தார்.
இந்த வழக்கில் கைதாவதில் இருந்த தப்பிக்க லெனின் இறந்துவிட்டதாக அவரது இறப்பு சான்றிதழை பொலிசாரிடம் அவரது உறவினர் ஒருவர் காட்டியுள்ளார்.
இறந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ள ஒருவர், மேயர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

அந்தரங்க உறுப்புகளை சோதனையிட தடை


குவாண்டோமோ பே தடுப்பு முகாமில் உள்ள கைதிகளின் அந்தரங்க உறுப்புகளை சோதனையிட வாஷிங்டன் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அமெரிக்காவின் குவாண்டோமோ பே தடுப்பு முகாமில் சுமார் 160க்கும் மேற்பட்டவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தங்களது வழக்கறிஞர்களை சந்தித்த பின்னரும், அவர்களுடன் தொலைபேசியில் உரையாடிய பின்னரும் மிக கேவலமான சோதனைக்கு உள்ளாவதாக புகார் எழுந்தது.
மேலும் பாதுகாப்பு காரணங்களை காட்டி அவர்களது அந்தரங்க உறுப்புகளை இராணுவத்தினர் சோதனை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இவ்வாறான சோதனைகள் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், பழைய முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தாங்கள் மிக மோசமான சோதனைகளுக்கு ஆளாவதை கண்டித்து கைதிகள் பலரும் உண்ணாவிரதம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது

வியாழன், 11 ஜூலை, 2013

பென்ஸ் கார்களுக்கு பிரான்சில் தடை

ஜேர்மனியின் புதியரக மெர்டிஸ் பென்ஸ் கார்களுக்கு பிரான்ஸ் தடை விதித்துள்ளது.
கடந்த ஜனவரி ஒன்று முதல் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு, புதியதாக உருவாக்கப்படும் கார்களில் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாத ஆர்1234 ஒய் எப் வகை குளிர்சாதனக் கருவிகளையே உபயோகிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
ஆனால் ஜேர்மனியின் பென்ஸ் உற்பத்தி நிறுவனமான டெய்ம்லர் நிறுவனம், இந்த வகை குளிர்சாதனக் கருவிகளில் உள்ள வாயு எளிதில் தீப்பற்றிக் கொள்ளும், விபத்து நேரிட்டால் கார் வெடித்துச் சிதறிவிடும் வாய்ப்பும் உண்டு என்று தெரிவித்துள்ளது.
அதனால், இந்த நிறுவனம் வாடிக்கையாளரின் பாதுகாப்பிற்கு நம்பகத்தன்மை கொண்ட பழைய வகையான ஆர் 134ஏ குளிர்சாதனக் கருவிகளையே தொடர்ந்து புதிய ரகங்களிலும் உபயோகப்படுத்துகின்றது.
இந்நிலையில் இந்த வகை கார்களுக்கு பிரான்ஸ் தடை விதித்துள்ளது.
ஆனால் மற்ற எந்த ஐரோப்பிய நாடுகளும் தங்களின் புதிய ரக கார்களுக்குத் தடை விதிக்கவில்லை என்று டெய்ம்லர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஐரோப்பிய யூனியனின் செயல்பிரிவான ஐரோப்பிய கமிஷன் சென்ற மாதம், ஜேர்மன் நிறுவனம் தொடர்ந்து பழைய ரக குளிர்சாதனக் கருவிகளையே தங்கள் வாகனங்களில் உபயோகிக்குமானால் பொருளாதாரத் தடை விதிக்கப்பபோவதாக எச்சரித்தது குறிப்பிடத்தக்கது
 

பெண் கல்லால் அடித்து கொலை: பாகிஸ்தானில் பயங்கரம்


பாகிஸ்தானில் செல்போன் வைத்திருந்த பெண் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் தேரா காஜி கான் என்ற கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார்.
இது குறித்த தகவல் தெரியவந்ததும், அந்த ஊர் பஞ்சாயத்து கூட்டப்பட்டது.
பின்னர் பஞ்சாயத்து உத்தரவை மீறி செல்போன் பயன்படுத்தியதற்காக 2 குழந்தைகளுக்கு தாயான அப்பெண்ணை கல்லால் அடித்துக் கொல்லுமாறு பஞ்சாயத்தார்கள் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து அப்பெண்ணை அவரது மாமா மற்றும் உறவினர்களே கல்லால் அடித்துக் கொன்றனர்.
இத்தகவலை கொல்லப்பட்ட பெண்ணின் உறவினர்கள் இரண்டு பேர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தை சேர்ந்த 3 பேர்களுக்கு எதிராக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதன், 10 ஜூலை, 2013

இந்திய தேசத்தின் சுதந்திர போராட்ட வரலாறு


 
இங்கிலாந்து பாடப்புத்தகத்தில் இந்திய தேசத்தின் சுதந்திர போராட்ட வரலாறு இடம்பெற உள்ளது.
அதாவது பள்ளியில் பயிலும் 5 முதல் 16 வயது வரையிலான மாணவர்களின் பாடப்புத்தகத்தில் தான் இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாறு இடம்பெறப் போவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு அறிவிக்கப்படும்.
இப்புதிய பாடத்திட்டம் அடுத்தாண்டு செப்டம்பர் முதல் அமலில் வரும் என்றும், இதற்கு பிரிட்டிஷ் பாடத்திட்டத்தில் புதிய அத்தியாயம் எனவும் பெயரிட்டுள்னர்.
மேலும் இங்கிலாந்து 1901ம் ஆண்டு முதல் இதுவரையிலும் கடந்து வந்த பாதை மாணவர்களுக்கு தெளிவாக தெரிந்திருக்க வேண்டும் என்பதே இப்பாடத் திட்டத்தின் நோக்கம் எனவும் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்
 

செவ்வாய், 9 ஜூலை, 2013

வேலையில்லா திண்டாட்டத்தில் தவிக்கும் ஜேர்மன் மக்கள்


 ஜேர்மன் நாட்டு மக்கள் வேலையின்மை மற்றும் பணம் பற்றாக் குறைவு குறித்து மிகுந்த கவலையில் இருப்பதாக ஆய்வில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேலையில்லா திண்டாட்டம் குறித்து 7 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 72 சதவீதம் ஸ்பானிஷ் (Spanish), 69 சதவீதம் பிரான்ஸ் (France), மற்றும் 32 சதவீதம் ஜேர்மன் (German) மக்கள் இந்த ஆய்வு குறித்து பதிலளித்துள்ளனர்.
ஐரிஸ்(Irish) மற்றும் ஸ்வேட்ஸ்(Swedes) நாடுகள் மிகவும் கவனமாக இருந்ததாகவும் ஆனால் ஜேர்மன் நாடானது வேலையின்மை குறித்து மிகவும் கவலையில் இருப்பதாக இலாப நோக்கமற்ற சந்தை ஆராய்ச்சி குழு தகவல் தெரிவித்துள்ளது.
ஒட்டு மொத்தமாக இவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளின் சதவீதமானது ஜேர்மன் நாட்டினருக்கு 2.5 பிரச்சனைகளும் மற்றும் ஐரிஸ்(Irish), ஸ்வேடஸ்(Swedes) நாட்டினருக்கு 1.2 பிரச்சனைகள் இருப்பதாக அந்நாட்டினர் பதிலளித்துள்ளனர்.
ஐரோப்பா முழுவதும் உள்ள 10 பிரச்சனைகளில் முக்கியமானதாக வேலையின்மை, பணவீக்கம், பொருளாதார பற்றாக்குறை, வீட்டு வாடகை மற்றும் கல்வி, ஊழல் என்று இந்த மாதிரியான பிரச்சனைகளே அதிகம் காணப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டின் இன்றியமையாத பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் ஐரோப்பாவில் 2013ம் ஆண்டிற்கான இன்றியமையாத பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்யப்படவில்லை.
ஐரோப்பாவில் ரஷ்யா மற்றும் நெதர்லாந்து நாடுகளைத் தவிர 37 சதவீதம் பேர் வேலையின்மை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
மேற்கொண்ட ஆய்வானது 13,300 மக்களிடம் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆஸ்திரியா, ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போலந்து, ரஷ்யா, ஸ்பெயின் ஆகிய நாடுகள் உள்ளடங்கியுள்ளன.
முதன்முறையாக அயர்லாந்து நாடானது இந்த ஆய்வில் சேர்த்துக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

இலங்கைச் சிறுவன் அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில்

  
11 வயதான இலங்கைச் சிறுவன் ஒருவன் அவுஸ்திரேலியாவின் தஸ்மானியா  தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோதமான முறையில் புகலிடம் கோரியதனால் இவ்வாறு சிறுவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.

குறித்த சிறுவன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தஸ்மானியா ஹோபார்ட் முகாமிற்கு அண்மையில் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் டோனி புர்க்கே விஜயம் செய்துள்ளார். குறித்த தடுப்பு முகாம் சிறுவர்களை நீண்ட காலத்திற்கு தடுத்து வைக்க உகந்ததல்ல எனத் தெரிவித்துள்ளார்.

11 வயதான இலங்கைச் சிறுவனை தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்