Link

ணக்கம் வருக வருக....

Pages

வியாழன், 6 ஜூன், 2013

கல்லூரிக்கு இனந்தெரியாதோரால் தீ வைப்பு


     
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிட்குட்பட்ட ஓட்டமாவடி ஜும்ஆ பள்ளிவாயலுக்கு முன்பாக அமைந்துள்ள சிராஜிய்யா அரபுக்கல்லூரிக்கு இன்று வியாழக்கிழமை அதிகாலை 03.30 மணியளவில் இனந்தெரியாத குழுவொன்றினால் தீ வைக்கப்பட்டுள்ளது.
இதனால் அரபுக்கல்லூரியின் மேல் மாடியில் அமைந்துள்ள அதிபர் அலுவலகம், மாணவர்களின் படுக்கறை விடுதி, விடுதியிலுள்ள பொருட்கள், மாணவர்களின் ஆடைகள், கணனிகள்; உள்ளிட்ட சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதிமிக்க உடமைகள், பொருட்கள்; தீயில் கருகி சேதமாகியுள்ளதாக சிராஜிய்யா அரபுக்கல்லூரியின் பிரதி அதிபர் யூ.ஏ.மஜீத் (சிறாஜி) தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
விடுதியில் தங்கி கற்றல்களை மேற்கொண்டு வந்த மாணவர்களுக்கு கடந்த 29.05.2013ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியே குறித்த தீ வைக்கப்பட்டுள்ளமையால் எவ்வித உயிர்ச் சேதமும் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
சம்பவம் இடம்பெற்ற போது தான் கல்லூரியில் இருக்கவில்லை எனவும் அதிகாலை 4 மணியளவில் எனக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து தான் ஸ்தலத்திற்குச் சென்று அங்கு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரின் உதவியுடனும் பொதுமக்களின் உதவியுடனும் தீ மேலும் பரவாமல் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் யார் மீதும் சந்தேகமில்லை எனவும் இது தொடர்பில் வாழைச்சேனைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் இரண்டு பெற்றோல் போத்தல்கள் காணப்படுவதுடன் பெற்றோலினாலேயே குறித்த விடுதியை இனந்தெரியாதவர்கள் எரித்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தீ விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

அதிர்ச்சி""காணாமல் போன ஊடகவியலாளர் பிரான்ஸில்



காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் லங்கா ஈ நியூஸ் இணைய தளத்தின் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட பிரான்ஸில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 கார்ட்டுன் மற்றும் பத்தி எழுத்தாளராக கடமையாற்றிய ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடந்த 2010ம் ஆண்டில் காணாமல் போயிருந்தார்.

பிரகீத் எக்னெலிகொட பிரான்ஸில் வாழ்ந்து வருவதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
 எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
 இதேவேளை, பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸும் எக்னெலிகொட வெளிநாடொன்றில் வாழ்ந்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 2ம் இணைப்பு
 எக்னெலிகொட பற்றிய தகவல் அதிர்ச்சி அளிக்கின்றத!–  சந்தியா எக்னெலிகொட
 காணாமல் போன ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொட பற்றிய தகவல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.
 பிரான்ஸ் நாட்டில் எக்னெலிகொட பாதுகாப்பாக வாழ்ந்து வருவதாக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
 இந்தத் தகவல் உண்மையென்றால் எக்னெலிகொடவை கண்டு பிடிக்க அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் எனவும் அதற்கான பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 எக்னெலிகொடவை கைது செய்வதற்கு சகல வழிகளிலும் உதவிகளை வழங்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
 ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும், பிரதம நீதியரசரும் எக்னெலிகொட எங்கிருக்கின்றார் என்பது பற்றிய தகவல்களைத் தெரிவித்துள்ளதாகவும், அந்தத் தகவல்கள் உண்மையென்றால் அவரை அழைத்து வர சகல அதிகாரங்களும் அரசாங்கத்திற்கு உள்ளதாக சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்

அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது - சர்வதேச !!


அமெரிக்கா இலங்கை மீது அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது என்று பிரபல சர்வதேச ஆங்கில ஊடகமான சீ.என்.என் செய்தி சேவை தெரிவித்துள்ளது.
 சீ.என்.என் இணைத்தளம் நேற்று வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 இலங்கையின் மனித உரிமை மீறல் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான வன்முறைகள் ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் பேரவை வரையில் விவாதிக்கப்பட்டுள்ளது.
 எனினும் இந்த விடயங்களில் இலங்கை இன்னும் பொறுப்புடைமையை காண்பிக்கவில்லை. இந்த நிலையில், சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
 எனவே மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விடயங்கள் தொடர்பில்,  இலங்கை மீது இந்த தருணத்திலேயே அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்றும் சீ.என்.என் செய்தி சேவை தெரிவித்துள்ளது,