பக்ரீத் பண்டிகை தொழுகையின்போது, ஏமன் நாட்டில் உள்ள மசூதி ஒன்றில் அடுத்தடுத்து மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன. இதில் 25 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
ஏமனில் சண்டை
அரபு நாடான ஏமனில், ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அதிபர் மன்சூர் ஹாதி, கடந்த மார்ச் மாதம் சவுதிக்கு ஓட்டம் பிடித்தார். அதிபர் ஆதரவு படையினரை எதிர்த்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடுமையாக சண்டையிட்டு வந்தனர். கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே படையினரும் கரம் கோர்த்தனர்.
இந்த படைகளை எதிர்த்து சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய 9 நாடுகளின் கூட்டுப்படைகள் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி முதல் வான்தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல்களில் இதுவரை 5 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 25 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அடுத்தடுத்து தாக்குதல்
இந்த நிலையில், தலைநகர் சனாவில் போலீஸ் பயிற்சி கல்லூரி அருகில் அமைந்துள்ள பாலிலி மசூதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று பக்ரீத் பண்டிகையையொட்டி தொழுகை நடத்திக்கொண்டிருந்தனர்.
அப்போது வெடிகுண்டுகளை உடலில் கட்டி வந்திருந்த நபர், அவற்றை வெடிக்கச்செய்தார். குண்டுவெடித்தபோது மக்கள் உயிர் பிழைப்பதற்காக ஓட்டம் எடுத்தனர். அதைத் தொடர்ந்து மசூதியின் நுழைவாயிலில் மற்றொருவரும் மனித வெடிகுண்டாக மாறி தாக்குதல் நடத்தினார். அடுத்தடுத்து நடந்த இந்த குண்டுவெடிப்புகளால் மசூதி பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. ஆங்காங்கே மனித உடல் உறுப்புகள் சிதறிக்கிடந்தன.
25 பேர் உயிரிழப்பு
இந்த தாக்குதல்களில் 25 பேர் உடல் சிதறி பலியானதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்பு படையினரால் மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அங்கிருந்து வருகிற தகவல்கள் கூறுகின்றன.
இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் உடனடியாக பொறுப்பு ஏற்க வில்லை.
ஐ.எஸ். தீவிரவாதிகள்?
இருப்பினும் கடந்த சிறிது காலமாக ஏமனில் ஷியா பிரிவினரை குறிவைத்து சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்தி வந்துள்ளனர். ஷியா பிரிவினரை அவர்கள் எதிரிகளாக கருதுகின்றனர். எனவே ஷியா பிரிவினர் தொழுகை நடத்த வருகிற மசூதி என்பதால், ஐ.எஸ். தீவிரவாதிகள்தான் இந்த தாக்குதல்களை நடத்தி இருப்பார்கள் என சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி இதே சனா நகரில், ஷியா பிரிவினரின் மசூதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 142 பேரை கொன்று குவித்தது நினைவுகூரத்தக்கது.
கடந்த 6 மாதமாக சவுதியில் இருந்து வந்த அதிபர் மன்சூர் ஹாதி, கடந்த 22-ந் தேதி ஏடன் நகருக்கு திரும்பியுள்ள நிலையில் இப்போது சனாவில் ஷியா பிரிவினரின் மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.