Link

ணக்கம் வருக வருக....

Pages

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

தமிழர் எதிர்பார்க்கும் தீர்வினை வழங்க அமெரிக்கா ஆதரவு தெரிவிக்க வேண்டும்: அமெரிக்க அதிகாரிகளிடம் பா.உ சிறீதரன்

திங்கட்கிழமை, 20 ஓகஸ்ட் 2012,
யாழ்ப்பாணத்திற்காக விஜயத்தை மேற்கொண்டு நேற்று யாழ்.வந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அதிகாரிகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்களும் சந்தித்துப் கலந்துரையாடியுள்ளனர்.
யாழ். நகரிலுள்ள விடுதியொன்றில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது சமகால விடயங்கள் தொடர்பில் இருதரப்பு அமெரிக்க அதிகரிகளிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.
குறிப்பாக வடகிழக்கில் இடம்பெறும் இராணுவ ஆக்கிரமிப்புக்கள், சிங்கள குடியேற்றங்கள், குறித்து எடுத்துக்காட்டப்பட்டுள்ளதுடன், அவற்றை உடனடியாக நிறுத்துவதற்கு சர்வதேச சமூகம் தமது நிலைப்பாட்டை தமிழர்களுக்குத் தெளிவு படுத்தவேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.
மேலும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு விடயத்தில் முதலில் தமிழ்த் தேசத்திற்கான அங்கீகாரத்தை சர்வதேசம் வழங்கவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்திக் கேட்டிருக்கின்றது.
மேலும் இந்தச் சந்திப்புக் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவிக்கையில்,
யுத்தத்தின் பின்னரும் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்புக்கள் குறித்து எமது தரப்பிலிருந்து தெளிவான ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளோம்.
அதேபோல் யுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்த தரப்புக்கள் இந்தநாட்டில் இனப்பிரச்சினைக்கு தமிழர் எதிர்பார்க்கும் தீர்வினை வழங்குவதற்காகவும் ஆதரவு தெரிவிக்க வேண்டிய கடமையுள்ளதை சுட்டிக்காட்டினோம்.
அந்த வகையில் இந்தச் சந்திப்பு தமிழர் தரப்பு நிலைப்பாட்டை எடுத்துச் சொல்வதற்கான ஒரு சந்திப்பாக அமைந்திருந்தது எனத் தெரிவித்தார்.