Link

ணக்கம் வருக வருக....

Pages

புதன், 29 ஆகஸ்ட், 2012

தமிழகத்தில் மட்டும் 25 கோடி ரூபாயை வசூலித்த நான் ஈ

Wednesday, 29 August 2012.BY.rajah.
எஸ். எஸ். ராஜமவுலியின் இயக்கத்தில் சுதீப் நடித்த நான் ஈ திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 25 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
கன்னட நடிகர் கிச்சா சுதீப் தெலுங்கில் நடித்த படம் ஈகா.
இது தமிழில் நான் ஈ ஆகா டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. படத்தில் ஈ தான் கதாநாயகன் என்றாலும் வில்லன் சுதீப் ஈயிடம் மாட்டிக் கொண்டு படும்பாடு நகைச்சுவை கலந்து சொல்லப்பட்ட விதம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது.
இதனால் மிகப்பெரிய நடிகர்கள் நடித்த திரைப்படங்களைக்கூட எடுத்துவிட்டு தமிழ்நாட்டில்நான் ஈ திரைப்படங்களை திரையிட்டனர்.
இந்த திரைப்படம் ஆந்திராவிலும், தமிழிலும் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறாதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 25 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது நான் ஈ.
இந்நிலையில் கன்னட நடிகரான கிச்சா சுதீப் பிற்கு தெலுங்கு திரை உலகில் ரசிகர் மன்றம் அமைக்க ஆரம்பித்துவிட்டனர் தெலுங்கு ரசிகர்கள்

ஆண், பெண் நண்பர்களாக பழகினால் தவறா? த்ரிஷா கேள்வி

 Wednesday, 29 August 2012,BY.rajah.
நடிகர் ராணாவுடன் காதல், விரைவில் திருமணம் என்றெல்லாம் வதந்திகள் பரவுவதற்கு காரணம் இருக்கிறது என்கிறார் த்ரிஷா.
தெலுங்கு நடிகர் ராணா, த்ரிஷா நெருக்கமாக பழகி வருவதாகவும், அடுத்த ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இது மட்டுமல்லாமல் சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது என்றும், அப்போது த்ரிஷாவுக்கு ராணா பிளாட்டினம் மோதிரம் அணிவித்ததுடன் நகைகள் பரிசளித்தார் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து த்ரிஷா கூறுகையில், ராணாவும், நானும் பல வருடங்களாக நண்பர்களாக பழகி வருகிறோம். அதை வைத்து எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்கிறோம் என்று எழுதுகிறார்கள்.
இதெல்லாமே உண்மைக்கு புறம்பானது. ஒரு ஆணும், பெண்ணும் நண்பர்களாக பழகினால் அதில் என்ன தப்பு? அதை வைத்து காதலிப்பதாக கூறுவது சரியல்ல.
தமிழில் தற்போது 3 படங்களில் நடித்து வருகிறேன். மேலும் நிறைய கதைகள் கேட்டு வருகிறேன்.
என்னை தேடி வரும் நல்ல படங்கள் எல்லாவற்றிலும் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். நானோ, எனது குடும்பத்தினரோ என்னுடைய திருமணம் பற்றி இன்னும் யோசிக்கக்கூட இல்லை.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே ராணாவும் நானும் நண்பர்கள். இப்போதுதான் இருவரும் வெளிப்படையாக பொது நிகழ்ச்சிகளுக்கு வருகிறோம். அதை வைத்துதான் இதுபோல் வதந்தி பரப்பப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேனா? பிரியங்கா ஆவேசம்

 Wednesday, 29 August 2012, BY.rajah.
பிரியங்கா சோப்ரா பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக பாலிவுட்டில் தகவல் பரவியுள்ளது.
இது பற்றி அவர் கூறுகையில், என்றைக்குமே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளும் தேவை எனக்கு ஏற்படவில்லை.
இறைவன் எனக்கு எத்தகைய அழகை கொடுத்தானோ அதில் திருப்தியாக இருக்கிறேன். என்னைப்பற்றி பலர் பலவிதமாக எண்ணுகிறார்கள். நான் நிறம் சற்று குறைந்திருப்பதாகவும், சாதாரண தோற்றம் கொண்டவளாக இருப்பதாகவும் பரவலாக பேசுகிறார்கள்.
ஆனாலும் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. தொடக்க காலங்களில் மேக்கப் போடுவது எப்படி என்பதுகூட எனக்கு தெரியாது.
பல்வேறு படங்களில் நடித்த பிறகே அதுபற்றி புரிந்துகொண்டேன். பல நடிகைகளின் நிலைமை இதுதான்.
நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக கூறுகிறார்கள். பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வதற்கு நான் எதிரி அல்ல. அழகையும் நம்பிக்கையையும் அதிகப்படுத்தும் என்ற நிலையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வதில் தவறு இல்லை.
ஆனால் அதுவே மனதை ஆட்டிப் படைக்கும் என்ற நிலை ஏற்பட்டால் அது தவறு. எனக்கு நம்பிக்கை தருவது என்னுடைய படங்களின் வெற்றிதான்.
நடிகையாக இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. எனது பல வயதில் பல்வேறு தோற்றங்களில் நான் மாற்றம் அடைந்திருக்கிறேன். அதற்கு காரணம் என் தோற்றத்தில் நான் செலுத்திய கவனம்தான். இப்போது எப்படி இருக்கிறேனோ அந்த தோற்றம் எனக்கு பிடித்த வகையில் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்

அமலாவுக்கு நடிகை குஷ்பு வரவேற்பு

Wednesday, 29 August 2012, BY.rajah.
அமலா நாகர்ஜுனா மீண்டும் நடிக்க வருவதற்கு நடிகை குஷ்பு தன்னுடைய வரவேற்பை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
நடிகை அமலா 1982- 1992 வரையிலான திரையுலக காலத்தில் தன்னுடைய வசீகரமான நடிப்பினால் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தவர்.
கொலிவுட்டில் வேலைக்காரன், வேதம் புதிது, பேசும் படம், சத்யா போன்ற படங்களில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ் ஆகியோருடன் நடித்திருக்கிறார்.
1992 ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவை திருமணம் செய்த பின்னர், திரை வாழ்க்கையிலிருந்து ஒதுங்கியே இருந்தார்.
இந்நிலையில் Life is Beautiful படத்தின் மூலமாக நடிகை அமலா நீண்ட காலத்திற்கு பின்பு நடிக்க வருகிறார்.
இந்த செய்தியை கேட்ட நடிகை குஷ்பு, என்னுடைய நெருங்கிய தோழி அமலா மீண்டும் நடிக்க வருவது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது என்று தனது இணையதள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்

நான் ஸ்ரீதேவியின் ரசிகர்: அஜித்

 Wednesday, 29 August 2012, BY.rajah.
நடிகை ஸ்ரீதேவி நடிக்கும் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்திற்காக அஜித்குமார் கௌர வேடத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார்.
இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகி வருகின்றது.
இம்மொழிகளில் நடிகை ஸ்ரீதேவியே நாயகியாக நடிக்கிறார். அதாவது ஆசிரியர் வேடம் ஏற்றுள்ளார்.
இந்நிலையில் தமிழில் உருவாகும் இப்படத்திற்காக கௌர வேடத்தில் நடிக்க ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் ரஜினி நடிக்க வில்லை.
இதையடுத்து தயாரிப்பாளர் பால்கி, நடிகர் அஜித்குமாரை அணுகினார். அஜித்தும் இதில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.
இரண்டு நாள்களாக இப்படத்திற்கான படப்பிடிப்பில் கலந்து கொண்ட அஜித், 12 மணி நேரத்தில் தனது வேடத்தை ஏற்று நடித்துக் கொடுத்தார்.
சம்பளம் பற்றி தயாரிப்பாளர் பால்கி பேச, அஜித் மறுத்து விட்டாராம். நான் ஸ்ரீதேவியின் ரசிகன் என்றும் சம்பளம் தேவையில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்

பிரியாணியில் சினேகா, பிரசன்னா

 Wednesday, 29 August 2012, BY.rajah.
வெங்கட் பிரபுவின் பிரியாணி படத்தில் பிரசன்னா, சினேகா நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியானது.
மங்காத்தா வெற்றிக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு கார்த்தியை வைத்து பிரியாணி என்ற படத்தை இயக்க உள்ளார்.
தற்போது கார்த்தி அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பில் உள்ளதால் பிரியாணி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரியாணியில் பிரசன்னா, சினேகா நடிக்க உள்ளதாக வெளியான தகவல் குறித்து வெங்கட் பிரபு விளக்கமளித்துள்ளார்.
இப்படத்தில் பிரசன்னா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஆனால் சினாகா நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்பட வில்லை என்றார்.
படத்திற்கான நாயகி தெரிவு விரைவில் நடைபெறும் என்றும் வெங்கட் கூறியுள்ளார்.
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 2 பாடல்களுக்கு இசையமைத்துள்ள யுவன், அடுத்த பாடலுக்கான பணியில் ஈடுபட்டுள்ளார்.
படத்தின் முதல் பாடலை கவிஞர் வாலி எழுத கேட்டுக் கொண்டதாகவும் மற்ற பாடல்களை வாலியுடன் கங்கை அமரன் எழுத உள்ளதாகவும் வெங்கட் தெரிவித்தார்

ஓணம் பண்டிகையை கேரளாவில் கொண்டாட முடியவில்லை:

 Wednesday, 29 August 2012,BYrajah.
கேரளாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகையான ஓணம் பண்டிகையை நாயகி அசின் மும்பையிலே கொண்டாடுகிறார்.
மலையாள நடிகர், நடிகைகளான மம்முட்டி, மோகன் லால், ஜெயராம், பிருதிவிராஜ், நயன்தாரா, அசின், மீராஜாஸ்மீன், பத்மபிரியா, அனன்யா, கோபிகா போன்றோர் வீட்டிலும், படப்பிடிப்பு தளங்களிலும் புத்தாடை உடுத்தி ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
நடிகைகள் வீட்டு வாசலில் பூக்கோலம் போட்டு, விசேட விருந்து சமைத்து சாப்பிட்டனர்.
தற்போது மும்பையில் 'கிலாடி' என்ற இந்திப் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கும் நடிகை அசின் மும்பையிலேயே ஓணம் பண்டிகையை கொண்டாடினார்.
மேலும் ஓணம் பண்டிகை குறித்து அவர் கூறுகையில், எனக்கு பிடித்த ஓணம் பண்டிகையை கேரளாவில் எனது வீட்டில் கொண்டாடுவது வழக்கம்.
ஆனால் இந்த முறை கேரளா செல்ல முடியவில்லை என்பதால் மும்பையில் கொண்டாடுகிறேன். நண்பர்களை வீட்டிற்கு அழைத்து இரவு விருந்து கொடுக்க உள்ளேன்.
நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது ஓணம் பண்டிகைக்கு மலையாளி அல்லாதவர்களையும் வீட்டுக்கு விருந்துக்கு அழைப்பேன். எனது தாயும் விதவிதமாக சமைத்து தருவார்.
பெரும்பாலும் ஓணம் பண்டிகைக்கு எடுக்கும் புத்தாடை பட்டு பாவாடை சட்டையாகத் தான் இருக்கும்.
உறவினர்கள், நண்பர்களுடன் வீட்டில் ஓணத்தை கொண்டாடுவது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்

சகுனி (வீடியோ இணைப்பு)

29.08.2012.BYrajah.
அரசியலை மையமாக வைத்து படம் வந்து நாட்களாகி விட்டன. அப்படியே வந்தாலும் அவற்றில் பிரச்சார நெடி இருக்கும்.
ஆனால் கார்த்தி நடிப்பில் வந்துள்ள சகுனி, அந்தக் குறையைத் தீர்த்து வைத்துள்ளது. அரசியலை விமர்சித்த மாதிரியும் ஆயிற்று... பொழுதுபோக்குக்கு பொழுதுபோக்குமாயிற்று!
கதை ரொம்ப சிம்பிள். லாஜிக் கூட ஒப்புக் கொள்ளக்கூடியது தான்... நடைமுறைக்கு சாத்தியமா என்ற கேள்வி இருந்தாலும், இப்படியெல்லாம் நடந்தாகூட நல்லாதான் இருக்கும் என்றே தோன்றுகிறது.
காரைக்குடியில் உள்ள கார்த்தியின் ஒரே சொத்து, ஒரு பூர்வீக வீடு. அதையும் ரயில்வே திட்டத்துக்காக இடிக்கப் பார்க்கிறது அரசு.
இந்த வீட்டை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை வரும் கார்த்தி, அமைச்சரிடம் மனு கொடுக்க, அது வழக்கம்போல 'போக வேண்டிய' இடத்துக்குப் போகிறது!
முதலமைச்சரிடம் போனால் நியாயம் கிடைக்கும் என்று போகிறார்... அங்கே உருவாகிறது பகை.
தன் வீட்டை மீட்க வேண்டுமானால் முதலில் முதல்வரை வீழ்த்த வேண்டும்... அதற்கான அரசியல் ஆட்டத்தை சகுனியின் சாமர்த்தியத்தோடும், கண்ணனின் மனிதாபிமானத்தோடும் ஆடுகிறார் கார்த்தி. ஆட்டத்தில் அபாரமாய் வெல்லும் அவர் கடைசியில் அரசியல்வாதியாகிறாரா? என்பது கிளைமாக்ஸ்.
விடலைத்தனமான லுக், தெனாவட்டான பேச்சு, எதிலும் விளையாட்டுத்தனம் என்றே இதுவரை கார்த்தியின் கேரக்டர்கள் அமைந்திருந்தன. முதல்முறையாக இதில் பக்குவமான, புத்திசாலித்தனமான ஆட்டம். அதை அவர் ஆடும் விதம் ரசிக்க வைக்கிறது.
குறிப்பாக இட்லிக்கார ரமணி ஆச்சியை மேயராக்குவதும், பீடி சாமியாரை நெல்லி சாமியாராக மாற்றும் விதமும், வீரத்தமிழன் முன்னேற்றக் கழக தலைவரை முதல்வராக்கத் தரும் ஐடியாக்களும் சுவாரஸ்யமானவை.
முகத்திலும்கூட ஒரு மெச்சூரிட்டி வந்திருக்கிறது கார்த்திக்கு. அவர் போடும் அரசியல் மாஸ்டர் பிளான்களை நம்ப வைப்பது அந்த மெச்சூரிட்டிதான்!
முதல் பாதியில் சந்தானத்தைப் பயன்படுத்திக் கொண்ட விதம், பின்பாதியில் அவருக்கான காட்சிகளை குறைத்து கார்த்தியை முன்னிலைப்படுத்தியிருப்பதும் இயக்குநரின் சாமர்த்தியத்தைக் காட்டுகிறது. நடனம், சண்டை என கிடைத்த வாய்ப்பிலெல்லாம் அழகாக ஸ்கோர் செய்திருக்கிறார் கார்த்தி!
சந்தானமும் கார்த்தியும் ரஜினி கமலாக அறிமுகமாகிறார்கள். சந்தானத்திடம், தான் சென்னைக்கு வந்த கதையை கார்த்தி சொல்லும் விதம் வித்தியாசம்.. நச்சென்று பதிகிறது.
என்ன... கதாநாயகியான ப்ரணிதாவின் பாத்திரம்தான் சுத்தமாகப் பதியவில்லை. உடன் படம் பார்த்த நண்பரின் கமெண்ட்தான் இதற்கு பொருத்தம்: "ஹீரோயின் அழகா இருக்காங்களா இல்லையான்னு கவனிக்கிறதுக்குள்ள அவங்க ரோல் முடிஞ்சு போச்சேண்ணே!"
பீடி சாமியாராக வரும் நாசரைப் பார்க்கும் போதே, சிரிப்பு எட்டிப் பார்க்கிறது. ஆன்மீகத்தை மார்க்கெடிங் செய்து அவர் சேர்த்த ரூ.1000 கோடியை தேர்தலில் இறைக்க வைத்து ஆட்சியைப் பிடிப்பது அட போட வைக்கிறது!
மோசமான முதல்வராக பிரகாஷ்ராஜ். நிஜ அரசியல் தலைவர்களின் தகிடு தத்தங்களை பிரகாஷ்ராஜ் மூலம் புட்டுப் புட்டு வைக்கிறார்கள். பாலம் கட்டுவதன் பின்னணி, பதவியை பங்கிடும் விதம் என எதிலும் குடும்பத்துக்குப் போகத்தான் மற்றவர்களுக்கு எனும் அந்தத் தலைவர் யாரை நினைவுபடுத்த என்பது தெரியாமல் இல்லை!
கோட்டா சீனிவாசராவ் வழக்கம்போல அருமை. இட்லிக்கார ஆச்சி ராதிகா, மேயராக பதவி ஏற்க ஒவ்வொரு படிக்கட்டில் கால் வைக்கும்போதும், அவரது கடந்த காலம் நினைவில் வந்துபோவது சூப்பர்.
எல்லா அரசியல் தலைவரும் பதவி ஏற்கும்போதும், மோசமான உத்தரவுகளில் கையெழுத்திடும்போதும் இப்படி ப்ளாஷ்பேக் கொஞ்சம் எட்டிப்பார்த்தால், அவர்களின் மனசாட்சி சாகாமலாவது இருக்கும்!
ரசிக்கும்படி காட்சிகள் நிறைய இருந்தாலும், அவற்றை ஒரேயடியாகத் திணித்து விட்டது போன்ற உணர்வு. நீளம் வேறு அதிகம். கொஞ்சம் கத்திரி போட்டு ஷார்ப்பாக்கி இருக்கலாம். கிரண் இறந்துவிட்டார் என்ற செய்தி வெளியாகும்போதே, அடுத்து என்ன நடக்கும் என்பது தெரிந்துவிடுகிறது.
ஜிவி பிரகாஷ் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கலாம். மனசெல்லாம் பாடலை படமாக்கியிருக்கும் விதம் ஜிலீர்... பிஜி முத்தையாவுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.
முதல் படத்தையே வித்தியாசமாகத் தரவேண்டும் என்ற முனைப்பில், அரசியல் என்ற ஒரு பெரிய கேன்வாஸுக்குள் விளையாடியிருக்கிறார் இயக்குநர் சங்கர் தயாள். சின்னச்சின்ன சறுக்கல்கள் இருந்தாலும், வெற்றி இலக்கைத் தொட்டுவிட்டார்.
நடிப்பு: கார்த்தி, சந்தானம், ப்ரணிதா, பிரகாஷ் ராஜ், ராதிகா, கிரண், கோட்டா சீனிவாசராவ், மனோபாலா, நாசர்.
இசை: ஜீவி பிரகாஷ் குமார்.
ஒளிப்பதிவு: பிஜி முத்தையா.
பிஆர்ஓ: ஜான்சன்.
தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்.
இயக்கம்: சங்கர் தயாள்.




சௌந்தர்யா படத்தில் பழி வாங்கும் ஆவி நாயகி

 Wednesday, 29 August 2012, BY.rajah.
சந்திரமோஹனின் இயக்கத்தில் ஏ.பி‌.சி‌. ட்‌ரீ‌ம்‌ஸ்‌ எண்‌டர்‌டெ‌ய்‌னர்‌ஸ்‌ தயா‌ரி‌க்‌கும்‌ பு‌தி‌ய படம்‌ செ‌ளந்‌தர்‌யா‌.
பு‌துமுகங்‌கள்‌ கோ‌வி‌ந்‌த்‌, கி‌ல்‌லர்‌ கா‌சி‌ம்‌, ரி‌த்‌தூ‌ஸன்‌, சா‌ரதி‌, சந்‌தோ‌ஷ்‌, வி‌னி‌த்‌ வி‌னு, சஞ்‌சுகொ‌ட்‌டே‌ரி‌ என்‌று பலர்‌ நடி‌க்‌க, இவர்‌களுடன்‌ மா‌றுபட்‌ட வே‌டத்‌தி‌ல்‌ எப்‌.எம்.‌எஸ்‌ நடரா‌ஜன்‌ நடி‌த்‌துள்‌ளா‌ர்‌.
 ஆயு‌ர்‌வே‌த வை‌த்‌தி‌யசா‌லை‌யி‌ல்‌ மஜா‌ஜ்‌ வே‌லை‌ செ‌ய்‌யு‌ம்‌ அழகி‌ய இளம்‌ பெ‌ண்‌ செ‌ளந்‌தர்‌யா‌. அவள்‌ அழகி‌ல்‌ மயங்‌கும்‌ வி‌மல்‌, அவள்‌ தன்‌னி‌டம்‌ அப்‌படி‌ பழகுவா‌ள்‌ இப்‌படி‌
நடந்‌து கொ‌ண்‌டா‌ள்‌ என்‌று இல்‌லா‌த பொ‌ல்‌லா‌த செ‌ய்‌தி‌களை‌ நண்‌பர்‌களுடன்‌ பகி‌ர்‌ந்‌து கொ‌ள்‌ள, அந்‌த பொ‌ய்‌ செ‌ய்‌தி‌யை‌ நம்‌பு‌ம்‌ நா‌ன்‌கு இளை‌ஞர்‌கள்‌, செ‌ளந்‌தர்‌யா‌வி‌டம்‌ செ‌ன்‌று தங்‌களது ஆசை‌க்‌கும்‌ இணங்குமா‌று வலி‌யு‌றுத்துகி‌ன்‌றனர்‌.
அதற்‌கு அவள்‌ சம்‌மதி‌க்‌ மறுக்‌கி‌றா‌ள்‌. இதனா‌ல்‌ ஆத்‌தி‌ரம்‌ அடை‌யு‌ம்‌ அந்‌த நா‌ல்‌வரும்‌ அவளை‌ பா‌லி‌யல்‌ பலா‌த்‌கா‌ரம்‌ செ‌ய்‌கி‌ன்‌றனர்‌. அந்‌த வன்‌முறை‌ தா‌ங்‌காது செ‌ளந்‌தர்‌யா உயி‌ரை‌ இழக்‌கி‌றா‌ள்‌.
பி‌றகு அவள்‌ ஆவி‌யா‌க வந்‌து அவர்‌களை‌ எப்‌படி‌ பழி ‌வா‌ங்‌குகி‌றா‌ள்‌ என்‌பதை‌ பு‌தி‌ய களத்‌தி‌ல்‌, பு‌தி‌ய கோ‌ணத்‌தி‌ல்‌, பு‌தி‌ய ஸ்‌டை‌லி‌ல்‌ படமா‌க்‌கி‌ உள்‌ளே‌ன்‌ என்‌கி‌றா‌ர்‌ இயக்‌குநர்‌ சந்‌தி‌மோ‌ஹன்‌.
மே‌லும்‌ படம்‌ பற்‌றி‌ இயக்‌குநர்‌ சந்‌தி‌மோ‌ஹன்‌‌ கூறுகை‌யி‌ல்‌, இந்‌தப்‌ படத்‌துல ஒரு மெ‌சே‌ஸ்‌ இருக்‌கு. சீ‌ரி‌யஸா‌ இருந்‌தா‌லும்‌ அதை‌ உணர்‌ற மா‌திரி‌ நகை‌ச்‌சுவை‌யோ‌டு சொ‌ல்‌லி‌ருக்‌கே‌ன்‌.
ரெ‌ண்‌டரை‌ மணி‌ நே‌ரம்‌ போ‌வதே‌ தெ‌ரி‌யா‌மல்‌ கலகலப்‌பா‌க படம்‌ இருக்‌‌கும்‌. நல்‌ல அருமை‌யா‌ன பா‌டல்‌கள்‌ இருக்‌கு. ஆட்‌டம்‌ பா‌ட்‌டம்‌னு மனசை‌ அள்‌ளுற மா‌தி‌ரி‌ நி‌றை‌ய கா‌ட்‌சி‌கள்‌ இருக்‌கு.
படத்‌தை‌ப்‌ பார்‌க்‌கும்‌ போ‌து பல இடங்‌களி‌ல்‌ கை‌ தட்‌டி‌, வி‌சி‌ல்‌ அடி‌ச்‌சு என்ஜா‌ய்‌ பண்‌ணிப்‌‌ பா‌ர்‌ப்‌பா‌ங்‌க. இந்‌தப்‌ படம்‌ எல்‌லா‌ இளை‌ஞர்‌களும்‌ பா‌ர்‌க்‌க வே‌ண்‌டி‌ய படம்‌. அந்‌த நோ‌க்‌கத்‌தோ‌டுதா‌ன்‌ எடுத்‌தி‌ருக்‌கே‌ன்‌‌.‌
 அஜ்‌மல்‌ அஜீ‌ஸ்‌ என்பவரின் இசையில், பா‌டல்‌களை‌ கவி‌குமரன்‌ எழுதி‌ உள்‌ளா‌ர்‌. இயற்‌கை‌ எழி‌ல்‌ சூ‌ழ்‌ந்‌த பகுதி‌யா‌ன ஆனை‌மலை‌, ஆனை‌க்‌கட்‌டி‌, தளி‌க்‌குள்‌ளம்‌ பீ‌ச்‌ போ‌ன்‌ற இடங்‌களி‌ல்‌ படமா‌க்‌கி‌ உள்‌ளே‌ன்‌.
ரி‌த்‌தி‌க்‌ சந்‌தி‌ரன்‌ ஒளி‌ப்‌பதி‌வு‌ செ‌ய்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. வி‌றுவி‌றுப்‌பா‌ன சண்‌டை‌க் ‌கா‌ட்‌சி‌களை‌ பு‌ரூ‌ஸ்‌லி‌ ரா‌ஜே‌ஷ்‌ அமை‌த்‌தி‌ருக்கி‌றா‌ர்‌. வி‌த்‌தி‌யா‌சமா‌ன நடன கா‌ட்‌சி‌களை‌ வி‌ஜய ரக்‌ஷி‌த்‌ அமை‌த்‌துள்‌ளா‌ர்‌‌.
பரபரப்‌பா‌ன இந்‌தப்‌ படத்‌தி‌ற்‌கு ஆத்‌மஜன்‌ தி‌ரை‌க்‌கதை‌ எழுதி‌ இருக்‌கி‌றா‌ர்‌. சி‌ன்‌னதா‌க சொ‌ன்‌னா‌லும்‌ பஞ்‌ச்‌ வை‌த்‌த மா‌தி‌ரி‌ வசனங்‌களை‌ தீ‌ட்‌டி‌ உள்‌ளா‌ர்‌ வசனகர்‌த்‌தா‌ ஜே‌.ரமல்‌ பி‌ரபு என்கிறார்‌.
தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ குருவண்‌ண பஷீ‌ர்‌ கூறுகை‌யி‌ல்‌, யா‌ர்‌ தப்‌பு‌ செ‌ய்‌தா‌லும்‌, அவர்‌களுக்‌கு இந்‌த பூ‌மி‌யி‌லே‌யே‌ தண்‌டனை‌ கி‌டை‌ச்‌சி‌டும்‌ என்‌பது தா‌ன்‌ இந்‌தப்‌ படத்‌தோ‌ட கருத்‌து.
இப்‌போ‌து கி‌டை‌த்‌தி‌ருக்‌கி‌ற இளமை‌ வா‌ழ்‌க்‌கை‌யை‌ சரி‌யா‌க நடத்‌த வே‌ண்‌டும்‌. எல்‌லோ‌ருக்‌கும்‌ பொ‌றுப்‌பு‌ இருக்‌கி‌றது. பல பே‌ர்‌ யா‌ரை‌ப்‌ பற்‌றியு‌ம்‌ கவலை‌ப்‌படுவதி‌ல்‌லை‌.
யா‌ருக்‌கும்‌ மரி‌யா‌தை‌ கொ‌டுப்‌பதி‌ல்‌லை‌. யா‌ருக்‌கு என்‌ன நடந்‌தா‌ என்‌ன என்‌று நி‌னை‌க்‌கி‌ற மனநி‌லை‌ இந்‌த தலைமுறை இளைஞர்களிடம் இருக்‌கு.
வி‌ளை‌யா‌ட்‌டு தனமா‌ செ‌ய்‌ற சம்‌பவம்‌ இன்‌னொ‌ருத்‌தருக்‌கு வலி‌யா‌ வே‌தனை‌யா‌ இருக்‌கும்‌. அது மா‌தி‌ரி‌ எல்‌லா‌ம்‌ இருக்‌க கூடா‌து. இந்‌தப்‌ படத்‌தை‌ பா‌ர்‌க்‌கும்‌ ரசி‌கர்‌கள்‌ கண்‌டி‌ப்‌பா‌க தா‌ங்‌கள்‌ செ‌ய்‌த ஒரு சி‌று தவறை‌யா‌வது உணர்‌வா‌ர்‌கள்‌.
தீ‌ங்கு செ‌ய்‌யமா‌ல்‌ இருக்‌கவு‌ம்‌, தெ‌ரி‌ந்‌தோ‌, தெ‌ரி‌யா‌மலோ‌ செ‌ய்‌த தவற்‌றை‌ நி‌னை‌த்‌து சி‌லர்‌ தி‌ருத்‌தி‌க்‌க ஒரு வா‌ய்‌ப்‌பா‌கவு‌ம்‌ ஒரு உணர்‌வை‌ ஏற்‌படுத்‌தும்‌ படமா‌க இந்‌தப்‌ படம் இருக்‌கும்‌‌. செ‌ய்‌த தவறை‌ நி‌னை‌த்‌து ஒரு ஆள்‌ வருத்‌தப்‌பட்‌டா‌ல்‌ கூட எங்‌களுக்‌கு பெ‌ரி‌ய தி‌ருப்‌தி‌ தான் என்று தெரிவித்துள்ளார்.


தென்னிலங்கை சுற்றுலா பஸ் மோதி ஒருவர் படுகாயம்; தென்மராட்சியில் சம்பவம்

29.08.2012.BYrajah.
புத்தூர் வீதி வேம்பிராய் சந்தியில் நடைபெற்ற சாலை விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புத்தூர் வீதி வேம்பிராய் சந்தியில் இன்று மாலை 6.15 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தில் மீசாலை மேற்கைச் சேர்ந்த த. நாராயணபிள்ளை வயது 60 என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு
இச் சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,

தோட்ட வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வேம்பிராய் சந்தியை துவிச்சக்கர வண்டியில் கடந்து சென்று கொண்டிருந்த வேளை புத்தூர் வீதியில் இருந்து ஏ9 பாதையை நோக்கி வந்து கொண்டிருந்த தென்னிலங்கை சுற்றுலா பஸ் குறித்த நபரை மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

அதனையடுத்து அயலவர்களது உதவியுடன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இவ் விபத்திற்குக் காரணம் சாரதியின் கவனக்குறை ஆகும். ஏனெனில் சந்தி என்பதையே கருத்திற் கொள்ளாமலே சாரதி வாகனத்தை செலுத்தி வந்துள்ளார்.

சம்பவத்தையடுத்து அங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடிய வேளையில் சந்தியில் இருக்கும் இராணுவத்தினரால் சாவகச்சேரி பொலிஸாருக்கு விடயம் குறித்து அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு பெருமளவிலான போக்குவரத்து கண்காணிப்பு பொலிஸாரும் சாதாரண பொலிஸாரும் பெருமளவில் பிரசன்னமாகி இருந்தனர்.

அந்த இடம் ஒரு களோபரத்தை அடக்குவதற்கு என பொலிஸார் வருகை தந்ததிருந்த இடமாக மாறியிருந்தது. பெருமளவிலான ஆட்கள் குவிந்திருந்ததால் அவர்கள் பயந்து விட்டார்கள் போலும் இங்கு கூடியிருந்த மக்களை விரட்டுவதிலேயே இராணுவத்தினரும் பொலிஸாரும் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அதுமட்டுமல்ல இங்கு நின்றவர்களை தகாத முறையில் பேசியதுடன் தட்டிக் கேட்க ஆட்களில்லை என்ற நிலையில் அதிகார பலத்தை பிரயோகித்த வண்ணமே இருந்தனர்.

எனினும் அங்கு கூடியிருந்தவர்கள் அவர்களது சொற்களை பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் அவ்விடத்திலேயே நின்றனர் அதன் போது அங்கு நின்ற போக்குவரத்து கண்காணிப்பு பொலிஸார் இவர்களை இப்படி விட்டால் சரிவராது நாவாந்துறை மாதிரித்தான் செய்ய வேண்டும் என சிங்களத்தில் தமக்குள் போசிக் கொண்டதனை தெளிவாக கேட்க முடிந்தது.

அதனடிப்டையில் நோக்கும் போது அதிகரித்த பொலிஸ் பிரசன்னமானது திட்டமிட்ட படியே தான் கொண்டு வரப்பட்டது என்பது தெளிவாகியுள்ளது.

அந்த இடத்தில் 20ற்கும் மேற்பட்ட பொலிஸார் வரவேண்டிய அவசியம் கிடையாது ஆனாலும் குறித்த பஸ்சும் அதில் வந்திருந்தவர்களும் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது தான் இதற்கான காரணம் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடனேயே இவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகள்.

எனினும் இரவு 8மணிக்குப் பின்னரே சம்பவ இடத்தில் இருந்து பஸ் நீதிமன்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆனாலும் அதுவரை சாரதி கைது செய்யப்படவில்லை.

எனினும் சம்பவத்தில் படுகாயமடைந்தவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவரது நிலமை கவலைக் கிடமாகவே உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

ஐயோ என்று அலற மட்டும் தானே தமிழ்

29.08.2012.BY.rajah.
பெரியவர்களின் பொய்கள் என்று தலைப்பிட்ட அந்தக் குறுங்கவிதை, அசையவிடாமல் விழிகளை பிடித்திழுத்தது சில நிமிடங்கள் வரை. இளையநிலா ஜோன் சுந்தரின் யதார்த்தம் சொல்லும்வரிகள் எம் அயலிலுள்ள நிறையப் பெரியவர்களின் பெயர்களுடன் பொருந்துகையில் செம துல்லியமாக இருந்தமையினால் நீங்களும் ஒரு முறை படித்தேயாக வேண்டும் தவறாமல்! செந்தூரி
"ஆளாளுக்கு மூன்று விழிகள் வைத்துக் கொண்டனராம்
பூச்சாண்டியும் கடவுளும்
கொக்குப் போகும் பருத்திப்பூக்கள், நகங்களில் விழுந்தால்
உடைகளாய் மலர்வதைப் போலொரு
சுவாரசியம், பெரியவர்களின் பொய்களில்
"சாமி கிட்ட இருக்கா உன் அம்மா'
என்பதை மட்டும் மறுக்கிறது குழந்தை
"அம்மாவுக்கு முன்னாடியே சாமி செத்துரிச்சா?
எனும் எதிர்க் கேள்வியுடன்!''
உன்னிப்பின் உச்சமாய் எம்மை நாமே திருத்தி எழுதிக்கொள்கின்றபோது, நடுத்தரம் கடந்துவிட்ட வயது, அனுபவம், ஆளுமை, அதிகாரம் போன்ற பெயரிலுள்ள யாவையுமே சுலபமாக எம்மை ஏய்த்துவிடும் வழக்கத்தை தொடர்வது கடிதினும் கடிது.
ஆனால் சுதாகரிக்க மறக்கின்ற ஒவ்வொரு நிமிடத்துளிகளி லும், பின்னந்தலை தொடங்கி பிட்டமூடாக புறக்குதிக்கால் வரையிலும் "மூட்டாள்கள் நீங்கள் '' என்று கண் தேடா இடங்களில் முத்திரை குத்துவது சில பெரியோர்களின் பீடுடைத்த இயல்புகளில் ஒன்று!
ஈழத்தின் இசைப் பாரம்பரியம் கொஞ் சம் "தனிமைகளுடன்' கூடிய தவத்துவ மானது.
போரும், தொடர்பாடல் குறைவும் எம்மூரின் கலைஞர்களையும், கலைப் பண்புகளையும் தனித்துவமானதாகவும், விளம்பரக் குறைவுடன் கூடிய கேள்வி நிரம்பலுடையதாகவும் வைத்திருந்தது எனவும் ஊகிக்கலாம். ஆனால் அவர்கள் எல்லோருமே "ஆலையில்லா ஊரின் சர்க்கரைக்குபிரதியிடும் இலுப்பைப் பூக்கள்'' அல்ல என்பதும் உறுதி.
சர்வதேச தரம், புதுமை விருப்பம், புத்தாக்க நுணுக்கம், கடும்பிரயோக பயிற்சி என்பன மூலம் மேடையாற் றுகைகளும் இணைக்கலைகளும் சற்றும் "சோடை' போகாமல் சுற்று வேலிகளுக் குள் வீற்றிருந்தன என்பதை எடுத்த எடுப்பில் எவருமே வெட்டிப் பேசிவிட முடியாது. ஆனால் இன்றைய வடபுலத் தமிழர்களினால் உட்படும் ரசிகர்கள் என்கின்ற அவதானிகளை எம் பெரியோர் கள் அந்தக் கவிதைக் குழந்தையின் எத் தனத்தில் ஏமாற்றத் துணிந்தது எங்ஙனம் நியாயமாகும்?
இவ்வருடத்துத் தைப்பொங்கல் திருநாளின் அதிகாலை ஆறுமணி தொடக்கமான அரைமணிநேரத்துக்கு, இந்தியத் தொலைக்காட்சியும், உலகத்தமி ழர்களின் "ரிமோட்' விரல்களில் அதிகம் அடிபடும் அலைவரிசையுமான "சன் ரீவி' யில் நாதஸ்வர இசை பொழியும் அற்புதமான வாய்ப்பை அநாயாசமாக பெற்ற ஈழத்து இளம் மேதை ஒருவனின் அறச்சீற்றத்தை "அட!அதுக்கென்ன'' வென்று பூசிப் பொய் மெழுகியிருக்கின்றது எம் கலையுலகம்!
துள்ளிசைப் பண்ணும், உச்ச தாளக் கூட்டமும், சாந்தத்தை மீறிய ஆரவாரமும் கொண்ட கேரளத்துச் செண்டை மேளமும், போர்முனையில் பயன்படும் பேரிகைக் குழல்களும், "போ' புறமென்று தள்ளியதை அருளொழுகும் விழிகளால் வேடிக்கை பார்த்தான் நல்லை நாயகனும் தன் வீதிகளில்!
"நாம சகஜம் ' கொண்ட எமக்கேயான கடல்கடந்த பெருமைகளை தன் விரல்களிலும், குரல்வளையிலும் சிறுகச் சிறுகச் சேமித்து இசைஞானம் பெற்ற மண்ணின் "பாலகனை' ஒதுங்கிநில் ஓரமாய் என்று சொல்ல எவ்வளவு துணிச்சல் எம் பண்பாட்டுப் பொரி வாய்களுக்கு?
"சிங்காரி மேளம்' என்கின்ற புறப் பெயரினால் சுட்டப்படுகின்ற அவ்வகை வாத்தியங்கள் தமிழிசைக் கேற்ற சாந்த இயல்புடையவை அல்ல என்பதும், திருமுறை போற்றுகின்ற சைவப் பாரம் பரியத்திற்கு நேரெதிர்ப் பண்புள்ள ஆரியப் பழமைக்குரியவை என்பதும் தெரியாதவர்களா எம் பெரியவர்கள்?
தென்னிந்தியாவில் தமிழக இந்துக் கோயில்களின் மூன்றாம் வெளி வீதிகளுக்கு கூட அனுமதிக்கப்படாதவர்களை ஆரத்தழுவி ஆராதித்ததில் என்னென்ன "உள்குத்துகள்' என்பது ஆறுபடையப் பனின் பன்னிரு விழிகளின் மூடிய இமைகளுக்கும் சமர்ப்பணம். சுற்றுப்பிர காரம் முழுவதும் சற்றுக் கவனித்தவர்கள் நிச்சயம் இனங்கண்டிருக்க முடியும், செண்டை மேள இசையினது ஆரோகணமும், கலைஞர்களினது அசைவும் உடல் மொழியும், கண்டியச் சிங்கள நடன மற்றும் இசைக்கலைஞர்களினது இசைவையும் அசைவையும் இறுக ஒட்டியிருந்தமையை!
சென்னை விமான நிலையம் வரை வந்த மனோ "ஈழத் தமிழச் சகோதரர்களே! மன்னித்துக் கொள்ளுங்கள்'' என்ற படி திரும்பியிருக்கின்றார். ஹரிகரனின் இசைநிகழ்வுக்கான மெகா விளம்பரங்கள், தவிர்க்க முடியாத காரணமென திருத்தி எழுதி நிறுத்தப்பட்டது. தமிழ்த் திரையுலகுடன் தொடர்புடைய எவரையும் இலங்கை அரசாணைக்குள்ளான நிகழ்வுகளுக்கு இலகுவில் அனுமதித்து விடாமல், கண்ணுக்குள் எண்ணையூற்றிய தமிழக உறவுகளையும் மீறி, "உன்னி' எப்படி ஓரமாய் பாய்ந்து திரும்பியது? "நல்லூரின் ஆன்மிகப் பெருவிழா' என்கிற ஒற்றைச்சொல், எதிர்ப்புக் குரல்களை அடக்கியிருக்கும், அனுமதித்திருக்கும் என்பதே எம் எண்ணம்! உண்மையும் அதுதான்!
ஆனால் நல்லூரானின் பெயர் சொல்லி நடத்தப்பட்ட இசைநிகழ்ச்சியின் தனித்த ஏற்பாட்டாளர்கள் "வடமாகாண சபையினர்' என்பதும், நல்லூர் திருவிழாவை காரணம் காட்டி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியக்கலை விழாவொன்றின் அங்கமே, இது எம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லையே."DIVINE ECSTASY''என்ற தலைப்புடன் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இந்த நிகழ்வுக்கான அழைப்பிதழ் முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே காணப்பட்டது.
திணைக்களத் தலைவர்கள் ஊடாக இதனை விநியோகிப்பதை கருத்தில் கொண்டு அச்சிடப்பட்டதே தவிர சாதா ரண இசை ரசிகர்கள் குறித்து கவனத்தில் எடுக்கப்படவில்லை.
"நிச்சயம் வருவார்கள்'' என்ற துணிச்சலுடன் அலர் மேல் வள்ளியையும், உன்னி கிருஷ்ணனையும், ரி.எம். கிருஷ்ணாவையும் அழகுறு புகைப்பட அழைப்பிதழில் அச்சிட்டவர்கள் வாய்ப்பாட்டுக் கச்சேரி நடைபெறுவதாக குறிப்பிட்டிருந்த இடம் நல்லூரின் "சங்கிலியன் தோப்பு '
""புதிதாக ஏதாவது உருவாக்கி வைத்திருப்பார்களோ'' எனும் பிரமை பிடரியில் அறைய ஆர்வத்தோடு காத்திருந்தால், ஏற்பாடுகளின் போதே தெரிந்தது ""கிட்டுப்பூங்கா'' என்று அழைப்பதில் அவர்களுக்கு தொடரும் "தீட்டு'. அவ்விடத்தை "சங்கிலியன் தோப்பு ' என்று சிலாகிக்க வைத்திருக்கின்றது. எவனாவது எதிர்க் கேள்வி கேட்டாலும் கூட, "பாருங்கள் தமிழ் மன்னனான சங்கிலியனை மறுதலிக்கின்றார்கள்'' என்று முகாரியில் முடித்து நாவடக்கம் செய்யும் முன்னேற்பாட்டுடன் எம் தமிழ்த் தேசிய மூக்கில் குத்தியிருந்தார்கள்.
துப்புரவாக்குதல் என்கின்ற பெயரில் "இடித்துத் துடைத்தழிக்கப்பட்ட' கொவ்வைச் செவ்வாயும் குழந்தை மனமும் கொண்ட போராளியொருவனின் நினைவிடத்தையும், பூங்காவையும் நீளமறந்து விட்டு நிலத்தில் அமர்ந்திருந்தோமா இல்லையா? கொஞ்சம் உண்மை சொல்லுங்கள் அன்பர்களே!
அன்றைக்கு உங்களை விழிமூடி வாய்திறக்க வைத்த "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா! '' என்கின்ற வரிகள் அட்சர சுத்தப் பொய் இல்லையா?
யாழ்ப்பாணத்தின் சுவாசமாய், பல்லின உயிர்ப்பரம்பலோடிருந்த பழைய பூங்காவினை, இயற்கைச் சிதைவினுக்குள்ளாக்கி மனித நடமாட்டம் மிகுந்த "கொங்கிறீட்' கல்லறையாக வர்ணம் பூசி வைத்த ஏமரா மன்னனும், எடுப்பார் பாவை அமைச்சர்களும் , "உள்நோக்கம் எதுவுமே இல்லாத நல்லெண்ணத்துடனேயே, முத்திரைச் சந்தியில் இருந்த பூங்காவைத் துப்புரவுபடுத்தி கச்சேரி வைத்து எம் கலையார்வத்தை வளர்க்கப் பாடுபடுகின்றார்கள்'' என்பதை எத்துணை சுலபமாய் நம்பிவிட்டோம் நாம்.
பம்பாய் வெங்காயம் பாய்ந்திறங்கி உள்ளூர்க் காய்களை ஊசிப்போக வைத்தால், எதிர்க் கேள்வி கேட்கச் சம்மேளனம் இருக்கின்றது. ரம்புட்டானோ, மங்குஸ் தானோ வீதிகளில் நிறைந்து தேன் கதலியையும் ஊர் முந்திரிகையையும் விளை நிலத்திலேயே வெட்டிப்புதைக்க வைத்தால், மனுப்போட சங்கம் இருக்கின்றது. ஆனால் "பாலக்காடுகளின் படையெடுப்பி னால் இம்முறை மண்மூடிப் போன ஈழநல்லூரின் பண்டைத் தனித்துவத்தைப் பாதுகாக்க கலைக் குடும்பத்தின் எந்தச் சங்கமும் கதவைத் திறக்காத மர்மத்துக்குப் பதிலென்ன?
அளவுப் பிரமாணக் குறைவினால் ஐந்து மாதக் குதிரைக் குட்டியில் சங்கிலியனை ஏற்றி உட்கார வைத்து "செத்தும் மிருகவதை செய்யும் மாண்புறு மன்னனாய்' எம்முன்னோனை பழி சுமக்க வைத்த ஆர்வக் கோளாறுகளே நயினையின் கோபுர வாயிலில் கற்பனைக்கு மீறிய தொந்தி சுமக்கும் காவற் பெண்களின் தோற்றத்தால் திராவிடரெல்லோரும் அரக்கர்கள் என்று பூடகம் பேசும் கற்சிலைகள் இன்னும் பல கோயில்களில் இடம்பிடிக்கத் தொடங்கியிருப்பது, கண்ணிருக்குமிடத்தில் இரு புண்களை நீவிர் சூடியதால் வந்த வினைப் பயனே!
"இறக்குமதிச் சரக்கு'' எதுவுமே இல்லாமல் ஈழத்து இளைஞர்களின் தனி முனைப்புடன் உருவாகிக் கொண்டிருக்கும் எண்கோண நீர்த்தடாகத்தை நோக்கி இன்னமும் பத்திரிகை வெளிச்சங்கள் பாயாதிருப்பது துர்ப்பயன்!
"யுனெஸ்கோ' வெளியிட்டுள்ள பண்பாடு, கலாசாரம், மரபுரிமை போன்றவற்றுக்கான வரைவிலக்கணங்களில் உள்ள "தேசிய இனம் ஒன்றினது' என்கின்ற சொற்களை எடுத்தெறிந்து விடுங்கள் தயவுடன். அர்ச்சனைக்கு சமஸ்கிருதம், ஆடலுக்கு மராட்டியம், பாடலுக்கு கர் நாடகம், பின்னணிக்கு மலையாளம் , தொழிலுக்கு ஆங்கிலம், ஆட்சிக்கு சிங்களம், அவலத்தில் "ஐயோ' வென்று அலற மட்டும் தானே ""தமிழ்'' எமக்கு?
மிக்க நன்றிகள் கவிஞர் இளையநிலா ""அம்மாவுக்கு முன்னாடியே சாமி செத்துரிச்சா? ''
என்று உற்றுக் கவனித்து கேள்வி கேட்காத ஈழத்தமிழனின் ஊமைக் குளத்தில் நீங்கள் தூக்கிப் போட்ட ஒற்றைக் கல்லுக்கு! அறுதுயில் கலையாயோ ஆண்ட என்னினமே

சங்கானையில் நவீன சந்தை ரூ. 60 மில்லியனில் உறுதி; பிரதேச சபை உறுப்பினர் கூறுகிறார்

29.08.2012.BY.rajah.சங்கானையில் 60 மில்லியன் ரூபா செலவில் நவீன சந்தைக் கடைக் கட்டடத் தொகுதி "புறநெகும' திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட செயலாளரும் "புறநெகும' தேசிய இணைப்பாளருமான வியானி குணதிலக இதற்கான விசேட அனுமதியைப் பெற்றுத் தருவதாக உறுதி மொழி அளித்துள்ளார்.

இவ்வாறு வலி.மேற்கு பிரதேச சபை தொழில் நுட்பக் குழுத் தலைவரும் உறுப்பினருமான த.நடனேந்திரன்  தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது
 வலி. மேற்கில் கட்டம்டிடிடி "புறநெகும' திட்டத்தின் கீழ் 60 மில்லியன் ரூபா செலவில் சங்கானையில் நவீன  சந்தைக் கட்டடத் தொகுதி அமைக்கப்படவுள்ளது. இதற்கான மக்களின் முன்னுரிமைத் தெரிவு, சபைத் தீர்மானம், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தீர்மானம் என்பன அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

எனினும் இதற்கான மாவட்ட மட்ட தீர்மானமும் மாகாண மட்ட தீர்மானமும் இழுபறியில் உள்ளன. ஆயினும் தேசிய "புறநெகும' இணைப்பாளர், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வின் அனுமதியைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளனர்.

மாகாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இதற்கான நடவடிக்கை எடுக்கக் கோரி  விசேட கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளேன் என்றார்

யாழ். ஆஸ்பத்திரி நோயாளரை பார்வையிட வருவோர் அவலம்; உச்சி வெயிலில் வீதியோரத்தில் பெரும்பாடு



29.08.2012.BY,rajah. யாழ்.மாவட்டத்தின் பல இடங்களில் இருந்து நோயாளர்களைப் பார்வையிடு வதற்கென வந்து மணிக் கூட்டுவீதிப் பக்கம் கூடும் மக்களினால் இந்தப் பகுதியில் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
அதாவது இந்த வீதியில் ஓட்டோக்கள் தரித்து நிற்கின்றன. நடைபாதை வியாபாரங்கள் இடம்பெறுகின்றன. மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு நிலையமும் உள்ளது. பயணிகளை இறக்கும் மினிபஸ்கள் பயணிகளை இறக்கி விடுவதும் ஏற்றுவ துமாகவும் இருப்பதால் இந்தப் பகுதியில் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் காணப்படுகிறது.
நோயாளர்களை பார்ப்பதற்கென உள்ளே விடப்படும் பார்வையாளர்கள் பெரிய கேற் இருந்தும் சிறைச்சாலைக்குள் செல்வது போன்று சிறிய "கேற்' ஊடாகவே உள்ளே அனுமதிக் கப்படுகிறார்கள். இந்த வாசல் ஊடாகவே வைத்தியசாலையின் மருந்துலொறிகள், சடலங்களை ஏற்றிவரும் வாகனங்கள் என்பனவும் உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. அவ்வேளைகளில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பார்வையாளர் உள்ளே செல்வதற்கு தடுத்து வருகின்றனர்.
இதனால் தாம் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்

கடலில் நடிக்க நயன்தாரா மறுப்பு


29.08.2012.BY.rajah.
கொலிவுட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு மணி ரத்னம் இயக்கி வரும் கடல் படத்தில் நடிக்க நயன்தாரா மறுத்துள்ளார்.
மணி ரத்னம் தற்போது கார்த்திக் மகன் கௌதம் ராதா மகள் துளசி இருவரை வைத்து கடல் படத்தை இயக்கி வருகின்றார்.
இப்படத்தில் அரவிந்த் சாமி, அர்ஜுன் இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் அர்ஜுனுக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க பேசி வந்தனர்.
ஆனால் நயன்தாரா இதில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
தற்போது படப்பிடிப்பு இராமேஸ்வரம் பகுதிகளில் நடந்து வருகிறது.
மேலும் நயன்தாராவிற்கு பதிலாக வேறொரு நடிகையை மணிரத்னம் தீவிரமாக தேடி வருகின்றார்
 

மகளை காதலித்த வாலிபனை கொலை செய்த தந்தை

29.08.2012.BY.rajah.
ஜேர்மனியில் 17 வயதுடைய வாலிபர் ஒருவர் தீயிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தான் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் அவருடைய அறையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. குறித்த வாலிபர், தானக்கு யாரோ கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பாதுகாப்பு தேவையெனவும் பொசிசாரிடம் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
பொலிசார் விரைந்து வருவதற்குள் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆனால் பொலிசார் குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட குறித்த நபருடைய காதலியின் தந்தையான 52 வயது மதிக்கத்தக்க நபர் தான் இந்தக் கொலையை செய்துள்ளார்.
இது பற்றி காதலியின் தந்தை தெரிவிக்கையில், 14 வயதுடைய எனது மகளுடன் குறித்த வாலிபன் பழகுவது பிடிக்கவில்லை. பலமுறை நான் கண்டித்தும் இது தொடர்ந்ததால் இந்தக் கொலையை செய்தேன் என தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்


அமெரிக்காவில் புயல் எச்சரிக்கை: 4 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனம்

29.08.2012.BY.rajah.
கரீபியன் கடலில் ஏற்பட்ட இசாக் புயல் அமெரிக்காவில் கடும் புயலாக மாறி லூசியானா மாகாணத்தில் மையம் கொண்டுள்ளது. இதனால் அங்குள்ள நியூ ஒன்லியன்ஸ் நகரம் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.
தற்போது அங்கு கடும் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து வீடுகளில் முடங்கியுள்ளனர்.
எனவே அமெரிக்காவின் லூசியானா, மிஸ்சிசிப்பா, அலபாமா, புளோரிடா ஆகிய 4 மாகாணங்களில் ஜனாதிபதி ஒபாமா அவசர நிலையை பிறப்பித்துள்ளார்.
இது குறித்து ஒபாமா, புயல் தாக்கினால் சேதமும், வெள்ளப்பெருக்கும் பெருமளவில் ஏற்படும் அபாயம் உள்ளது.
வளைகுடா பகுதியில் இருப்பவர்கள் உள்ளூர் அதிகாரிகளின் கோரிக்கைகளை ஏற்று அங்கிருந்து வெளியேற வேண்டும்.
எச்சரிக்கைகளை கடுமையாக பரிசீலித்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள் என்றும் அரசு உங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டு லூசியானாவை தாக்கிய கத்ரீனா புயலுக்கு 1,800 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நகரை மீண்டும் புயல் தாக்கும் அபாயம் உள்ளது.
மேலும் கெய்தி மற்றும் டொமினிகள் குடியரசு நாடுகளில் இப்புயலுக்கு 24 பேர் பலியாகியுள்ளனர்.

ஜெனிவாவில் 12 வயது சிறுமி கழுத்தை நெரித்து கொலை

29.08.2012.BY.rajah.
ஜெனிவாவில் உள்ள கரேஜ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் (Carouge apartment) செம்கார்(Semhar’s) என்ற 12 வயது சிறுமி இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிலிருந்து சென்ற ஒரு மணி நேரத்தில் இச்சிறுமி இறந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பொலிசார் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஜெனிவா செய்திதாள்கள் இச்சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தகவல் வெளியிட்டுள்ளன. பொலிசாரும் இதனை உறுதி செய்துள்ளனர். இறந்து கிடந்த சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதற்கான தடையங்கள் பொலிசாரால் உறுதி செய்யப்பட்டுள்ளன.
கடைசியாக தனது வீட்டிலிருந்து குறுக்கே உள்ள தெருவில் தனது தோழியுடன் நடந்து சென்றதை அருகில் உள்ளவர்கள் அவதானித்துள்ளனர். அதன் பிறகு ஒரு மணி நேரம் கழித்து செம்கார்(Semhar’s) குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் கட்டிலிற்கு கீழ் இறந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
இது குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கனடாவில் 91 வயது பெண் ஒருவர், 67 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன தன்னுடைய மகளை சந்திக்க உள்ளார்.

67 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன மகளை சந்திக்க உள்ள தாய்
[ செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012, 10:58.30 மு.ப GMT ]
29.08.2012.BY.rajah. கனடாவில் கேல்கரி நக.ரில் வசித்து வரும் Bessie Sedor(வயது 91) என்ற பெண், கடந்த 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி தன்னுடைய மகளை விட்டு பிரிந்தார்.
அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி ஒரு விழாவை தன்னுடைய வீட்டில் கொண்டாடுவார். இந்த விழா ஏன் என்று நண்பர்கள் கேட்டால், சரியான பதில் எதுவும் கூறமாட்டார்.
இந்நிலையில் கடந்த மாதம் இவருடைய மகன் தன்னுடைய சகோதரி காணாமல் போனது குறித்து பேஸ்புக்கில் பதிவு செய்து இருந்தார்.
இதனையடுத்து தொலைபேசி அழைப்பொன்று வந்தது. அதில் நான் தான் தொலைந்து போன அந்த பெண் என்று நபர் ஒருவர் தகவல் கொடுத்தார்.
இந்த பெண்ணின் பிறந்த திகதி மற்றும் சில அடையாளங்களை சரிபார்த்த சகோதரர், இவர் தான் தொலைந்து போன தன்னுடைய சகோதரி என்பதை உறுதி செய்தார்.
இதனையடுத்து தன்னுடைய தாயை 67 ஆண்டுகளுக்கு பிறகு, வருகிற செப்டம்பர் மாதம் சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.


கணவன் உயிரணுக்களை தானம் செய்ய மனைவியின் அனுமதி வேண்டும்: பெண் போர்க்கொடி

புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2012, BY.rajah.
கணவன் தன்னுடைய உயிரணுக்களை தானம் செய்ய, மனைவியின் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும் என இங்கிலாந்து பெண் ஒருவர் போர்க்கொடி உயர்த்தி உள்ளார். இங்கிலாந்தில் வசிக்கும் பெண் ஒருவர் பிரபல பத்திரிக்கையான டெய்லி மெயிலுக்கு பேட்டியொன்றை அளித்துள்ளார்.
அதில், என் கணவர் உயிரணுக்களை எனக்கே தெரியாமல் இரகசியமாக தானம் செய்துள்ளார். இது முற்றிலும் தவறு.
ஆண், பெண் இருவரும் திருமண பந்தத்துக்குள் வந்து விட்ட பிறகு, கணவனின் உயிரணுவும் திருமண சொத்தாகி விடுகிறது. எனவே மனைவியின் அனுமதி இல்லாமல் கணவன் உயிரணுக்களை தானம் செய்ய கூடாது.
இந்த விடயத்தில் மருத்துவமனைகள், கிளினிக்குகள் ஆண்களிடம் உயிரணுக்களை தானம் பெறும் போது, மனைவியின் அனுமதியையும் பெற வேண்டும்.

இதைத் தான் மனிதாபிமானம் என்பார்களோ!

29.08.2012.BY.rajah,
போதைப் பொருள் பாவனையாளர்களின் கைகளில் சிக்கி தனது முன் இரண்டுகால்களையும் இழந்து நடக்க முடியாது மரணத்தின் விழிம்பில் இருந்த நாயைக் காப்பாற்றி அதற்கு செயற்கைக் கால்களைக் கொடுத்து நடக்க வைத்துள்ளார் லெமன் பை என்பவர்.
மெக்ஸிக்கோவில் இடம்பெற்ற இச்சம்பவத்திலிருந்து நாயை மீட்டெடுப்பதற்கு சுமார் 6,000 அமெரிக்க டொலர்களை செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இது மீன் என்றால் உங்களால் நம்பமுடியுமா?-காணொளி-

29.08.2012.BYrajah.இப்டிஓர் அதி சயமான மீன் இனத்தைமுன்பு ஒரு போதும் நாம் கண்டது இல்லை அதி சயம் உண்மை கண் குளிர பாருங்க

 

 






 

கிறிஸ்தவர் மற்றும் பெண் ஒருவர் எகிப்து ஜனாதிபதி உதவியாளர்களாக நியமனம்

29.08.2012.BYrajah.
எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சி தனது உதவியாளர்களில் ஒரு கிறிஸ்தவர், பெண் மற்றும் இரு இஸ்லாமிய வாதிகளை நியமித்துள்ளார். கிறிஸ்தவ மிதவாத எழுத்தாளரான சமிர் முர்குஸ் ஜனநாயக ஆட்சி மாற்றத்திற்கான ஜனாதிபதி உதவியாளராகவும், கெய்ரோ பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ் ஞான விரிவுரையாளரான பகினம் அல் ஷர்காவி என்ற பெண் ஜனாதிபதியின் அரசியல் விவகார உதவியாளராகவும் முர்சி நியமித்துள்ளார்.
முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் முன்னாள் உறுப்பினரான மொஹமட் முர்சி தனது தேர்தல் பிரசாரத்தில் கிறிஸ்தவர் ஒருவர் தனது உதவியாளராக பெரும்பாலும் துணை ஜனாதிபதியாக நியமிக்கப் படுவார் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் முன்னாள் நீதிபதியான மஹ்மூத் மெக்கி துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட் டுள்ளார். எனினும் எகிப்து சனத்தொகையில் 10 வீதம் கொண்ட கிறிஸ்தவர்கள் புதிய அரசில் தமது பிரதிநிதித் துவம் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
எகிப்து அமைச்சரவையிலும் ஒரு கிறிஸ்தவரே இணைக்கப் பட்டுள்ளார். இதில் கடும் போக்கு சலபி கட்சியான நூர் கட்சியின் தலைவர் இமாத் அப்துல் கபூர் ஜனாதி பதியின் சமூக தொடர்புகள் குறித்த உதவியாளராகவும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் இஸ்ஸாம் அல் ஹதாத் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான உதவியாளராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர். இதுதவிர 17 ஜனாதிபதி ஆலோசகர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்

2020 இல் காசா பகுதி வாழ தகுதியற்ற பிரதேசம்


29.08.2012.BY.rajah.உடன் நடவடிக்கைக்கு ஐ.நா. வலியுறுத்து

பலஸ்தீனின் காசா பகுதி 2020 ஆம் ஆண்டாகும் போது வாழத் தகுதியற்ற பகுதியாக மாறும் அபாயம் இருப்பதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கு உடன் சுகாதாரம், நீர் விநியோகம், மின்சக்தி மற்றும் பாடசாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
“காசாவில் வசதிகள் உடன் மேம்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் 2020 ஆம் ஆண்டில் அங்கு வாழ முடியாத நிலை ஏற்படும். தற்போதே அங்கு வாழ்வது கடினமாக உள்ளது” என்று ஐ.நா.வுக்கான மனிதாபிமான இணைப்பாளர் மக்ஸ்வெல் கெய்லாட் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இது குறித்த ஐ.நா. அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
அப்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். காசாவின் தற்போதைய சனத்தொகை 1.6 மில்லியனாக உள்ளது. அது 2020 ஆம் ஆண்டாகும்போது 2.1 மில்லியனாக அதிகரிக்கும். இந்த சனத்தொகை அதிகரிப்பால் அங்கு ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 5,800 பேருக்கு மேல் வசிப்பார்கள் என ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும் காசாவின் நிர்வாகக் கட்டமைப்பு சனத்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப வளர்ச்சியடையவில்லை. குறிப்பாக மின் விநியோகம், நீர் விநியோகம், சுகாதாரம், நகர அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் வளர்ச்சியடையவில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காசாவின் கால் பங்கு கழிவு நீரே, மீள் பயன்பாட்டுக்கு பெறப்படுகிறது. எஞ்சிய நீர் மத்திய தரைக் கடலுடன் கலக்கிறது. காசா கடற் பகுதியை இஸ்ரேல் முழுமையாக முடக்கியுள்ளதால் அங்கு எப்போதும் இல்லாத அளவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதோடு அதன் காரணமாக தொடர்ச்சியான மின் தடைக்கும் உள்ளாகி வருகிறது. அதேபோன்று காசாவில் வேலையில்லா தோர் எண்ணிக்கை 45 வீதமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் அடுத்த 8 ஆண்டுகளுக்குள் காசாவின் குடிநீர் தேவை 60 வீதமாக அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ள ஐ.நா. பிரதான நீர் ஆதாரங்களான நீர்த் தேக்கங்களில் ஏற்பட்டுள்ள சேதங்கள் அங்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். உடன் சரி செய்யப்படாவிட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2020 ஆம் ஆண்டாகும் போது காசா பகுதிக்கு மேலும் 440 க்கு மேற்பட்ட பாடசாலைகள், 800 மருத்துவமனை படுக்கைகள் மற்றும் மேலும் 1000 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் முற்றுகை
கடந்த 2006 ஆம் ஆண்டு காசாவில் இஸ்ரேல் இராணுவ வீரர் ஒருவர் போராளிகளால் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கான விநியோகப்பாதைகளை இஸ்ரேல் முடக்க ஆரம்பித்தது. இவ்வாறு கைது செய்யப்பட்ட வீரரே கடந்த ஆண்டு ஒக்டோபரில் கைதிகள் பரிமாற்றத்தின் கீழ் 1,027 பலஸ்தீன கைதிகளுக்கு பதில் விடுவிக்கப்பட்டார்.
எனினும் 2007 ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு ஆட்சிக்கு வந்ததும் இஸ்ரேல் அந்த பகுதிக்கான முழு விநியோகப் பாதைகளையும் முடக் கியது.
இதனால் குறுகிய கடற்கரை பகுதியான காசாவில் ஐ.நா. உதவி, வெளிநாட்டு நிதியுதவி மற்றும் சுரங்கப்பாதை ஊடாகவே அங்குள்ள வர்களுக்கு உணவு, கட்டுமானப் பொருட்கள், மின்னணுப் பொருட்கள், கார்கள் என்பன எகிப்தினூடாக கிடைக்கப் பெறுகின்றன.
காசாவில் 80 வீதமானோர் உதவிகளிலேயே தங்கியிருப்பதால் அப்பகுதிக்கான சர்வதேச உதவிகளை அதிகரிக்குமாறு ஐ.நா.வுக்கான மனிதாபிமான இணைப்பாளர் கெய்லாட் கோரியுள்ளார். “அவர்கள் முற்றுகைக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளார்கள்.
அவர்களுக்கு அரசியல் மற்றும் சாதாரண விடயங்களிலும் எமது உதவி தேவைப்படுகிறது” என்றார். எனினும் ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் போக்கு தொடர்ந்த வண்ணமே உள்ளது.
காசாவில் மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தேர்வான ஹமாஸ் அமைப்பை மேற்கு நாடுகள் தீவிரவாத அமைப்பாகவே கருதுகிறது

மூழ்கும் கப்பலில் தொடர்ந்தும் எண்ணெய்க் கசிவு

29.08.2012.BY.rajah.

 


மீன்களின் இறப்புக்கு எண்ணெய் கசிவு காரணமா? வெள்ளவத்தை கடற்பரப்பில் உயிரிழந்திருக்கும் மீன்களின் இறப்புக்கு கடலில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவுதான் காரணமா? என்பது குறித்து ஆராய்வதற்கென இறந்த மீனின் உடற் பாகங்களை பெற்றுக் கொள்ளவிருப்பதாக நாரா நிறுவனம் தெரிவிக்கிறது. உயிரிழந்த மீன்கள் இரண்டே இதுவரை மீட்கப்பட்டிருப்பதனால் இவை எண்ணெய் கசிவினால் உயிரிழக்கப்படவில்லை என்ற தீர்மானத்திற்கு வரமுடியுமெனவும் நாரா நிறுவனத்தின் அதிகாரியொருவர் கூறினார். இருப்பினும் தொடர்ந்தும் நாம் இது குறித்து விழிப்புணர்வுடன் செயற்பட்டு வருகிறோம். மீனவர்கள் தமக்கு தேவையில்லாத, விற்பனைக்கு உதவாத மேற்படி வகையான மீன்களை கடலில் எறிந்துவிட்டு செல்வதுண்டு மீட்கப்பட்டி ருக்கும் உயிரிழந்த மீன்கள் மீனவர்களால் கடலில் எறியப்பட்டவையாக இருக்கலா மென்றே ஊகிக்க முடிவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, பாணந்துறை கடற்பரப்பில் மூழ்கியிருக்கும் சைப்பிரஸ் நாட்டுக்குச் சொந்தமான கப்பலிலிருந்து தொடர்ந்தும் ஆங்காங்கே எண்ணெய் கசிவு இடம்பெற்று வருவதாகவும் அதனை அகற்றும் பணியில் சமுத்திர வள பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் அதிகார சபையின் பொதுமுகாமையாளர் கூறினார்

தனக்குத் தானே தீ மூட்டி வயோதிப பெண் தற்கொலை!- ஊர்காவற்துறையில் சம்பவம்

 
புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2012, BY.rajah.
தனக்குத்தானே தீ மூட்டி ௭ரிந்து வயோதிப மாது ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் நேற்று நண்பகல் 12.30 மணியளவில் ஊர்காவற்றுறைச் சுருவில் வீதிக்கு அருகிலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
அதே இடத்தைச் சேர்ந்த மேரி பாத்திமா (வயது 62) ௭ன்ற வயோதிபப் பெண்ணே தீமூட்டி உயிரிழந்தவராவார்.
இவருடைய சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் ௭ன்புநோய் தொடர்பாக கைதடி சித்த ஆயுள்வேத வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர் ௭ன்பது குறிப்பிடத்தக்கது

கொள்ளுப்பிட்டி இரவு களியாட்ட இடத்தில் நாகபாம்புடன் நடனமாடிய யுவதி கைது

 
புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2012, BY.rajah.
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள இரவு களியாட்ட இடம் ஒன்றில் நாகபாம்புடன் நடனமாடிய 22 வயதான யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த களியாட்ட இடத்தில் இருந்து கிடைத்த தகவலின் பேரில் அங்கு பொலிஸார் சென்ற போது யுவதி, தமது உடலில் நாகபாம்பை சுற்றிய வண்ணம் நடனமாடிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட பின்னர் சுகவீமுற்ற குறித்த யுவதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்

பல்கலை. விரிவுரையாளர்கள் போராட்டத்தினால் இசட் புள்ளி பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் நெருக்கடி

 
புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2012, BYrajah.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்கப் பிரச்சினைக காரணமாக இசட் புள்ளி பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இசட் புள்ளி சர்ச்சைக்கு தீர்வு வழங்கும் நோக்கில் அதிகளவு மாணவர்களை பல்கலைக்கழகங்களில் சேர்ப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனினும், விரிவுரையாளர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் காரணமாக மாணவர்களை சேர்ப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக அதிகளவில் மாணவர்களை இணைப்பது தொடர்பிலான தீர்மானங்களை எடுக்க முடியவில்லை என தெரிவித்துள்ளது