Link

ணக்கம் வருக வருக....

Pages

செவ்வாய், 18 டிசம்பர், 2012

இவ்வாண்டில் 950,000வது சுற்றுலாப் பயணிகள் வருகை



இலங்கைக்கு இவ்வாண்டின் 950,000வது சுற்றுலாப் பயணி பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் காலை 8.25மணிக்கு வந்தடைத்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
நாட்டில் வளர்ந்து வரும் சுற்றுலாத்துறைக்கு இதுவொரு மைல்கல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று போலந்து நாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வருகை தந்த ரஸ்ய தம்பதியினரே 950,000ஆவது சுற்றுலாப் பயணிகளாகும்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்பாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அண்மைய விபரங்களில், கடந்த ஒக்டோபர் மாதத்தில் மொத்தமாக 80, 379 சுற்றுலாப்பயணிகள் இலங்கையை வந்தடைந்திருந்தனர்.

2011ஆம் ஆண்டுக்கான சுற்றுலாப் பயணிகள் இலக்கான 800,000 கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 19ஆம் திகதி இலங்கை எட்டியிருந்தது.

இதேவேளை, 2016ம் ஆண்டளவில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2.6 மில்லியனாக இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பதாகவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது

வங்கியில் கொள்ளையடித்த மிட்ரோம்னியால் பரபரப்பு


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவிற்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்த மிட்ரோம்னி வங்கியில் கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் வெல்ஸ் பர்ஸோ வங்கியின் கிளை உள்ளது.
இந்த வங்கிக்குள் நுழைந்த மர்ம நபர், பணத்தை கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏனெனில் இவர் புளோரிடா மாகாண கொடியை போன்ற சட்டையும், மிட்ரோம்னி போன்று முகமூடியும் அணிந்திருந்தார்.
இதுகுறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்[புகைப்படங்கள்].






நீதிபதி உட்பட 3 பேர் தலை துண்டிக்கப்பட்டு கொலை

உக்ரைன் நாட்டில் நீதிபதி, அவரது மகன் மற்றும் மகனின் காதலி தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். உக்ரைன் நாட்டின் கஹார்கிவ் மாகாண நீதிபதி வொலோ டைமர் ட்ரோபர்மோ(வயது 58).
இப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், வொலோ மகனுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் திடீரென கடந்த 15ஆம் திகதியன்று, மிக கொடூரமான முறையில் கொல்லப்பட்ட நிலையில் நீதிபதி, அவரது மகன் மற்றும் காதலி பிணமாக கிடந்தனர்.
இதனையடுத்து விரைந்து வந்த பொலிசார் சடலங்களை மீட்டதுடன், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பொலிசார், வீட்டில் சில பொருட்கள் காணாமல் போயிருந்ததால் கொள்ளையடிக்கும் திட்டத்துடன் புகுந்த கொள்ளையர்கள் மூவரையும் கொலை செய்து தப்பியோடி இருக்கலாம் என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே கடந்த 15ஆம் திகதி அந்நாட்டின் நீதிபதிகள் தினம் என்பதால், கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஜப்பான் புதிய பிரதமரின் அறிவிப்பால் சீனா அதிர்ச்சி.


தீவுப் பிரச்னையில் சீனாவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றும், அது ஜப்பானின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அந்நாட்டின் அடுத்த பிரதமராக பொறுப்பேற்க உள்ள ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் சுதந்திர ஜனநாயகக் கட்சி (எல்டிபி) தலைமையிலான கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் ஷின்சோ அபே அடுத்த பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். அபேவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதுடன், புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆளும் ஜப்பான் ஜனநாயகக் கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து, இப்போதைய பிரதமர் யோஷிஹிகோ நோடா பதவி விலக உள்ளார். தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்த பிரதமராக பொறுப்பேற்க உள்ள அபே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், சீனாவுடனான சர்ச்சைக்குரிய தீவு பிரச்னையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாக அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:
தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்றதற்கு, மக்களுக்கு மீண்டும் எங்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அர்த்தம் இல்லை.
மாறாக, ஜனநாயகக் கட்சியின் தவறான கொள்கைகளால் கடந்த மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் அரசியல் மந்த நிலைக்கும் குழப்பத்துக்கும் முடிவு கட்ட வேண்டும் என மக்கள் தீர்மானித்துள்ளனர்.
எங்கள் கட்சித் தலைமையில் புதிதாக பொறுப்பேற்க உள்ள அரசுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார வல்லரசு நாடான ஜப்பானின் பொருளாதாரம் சர்வதேச நிதிநெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள முன்னுரிமை அளிக்கப்படும். "யென்' மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்காகு தீவுக் கூட்டங்கள் (டியாவூஸ் என சீனா அழைக்கிறது) ஜப்பான் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி.
சர்வதேச சட்டப்படி இந்தத் தீவுக் கூட்டங்களை ஜப்பான் சொந்தம் கொண்டாடுவதுடன், தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. எனவே, இதுதொடர்பாக மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. தேசிய நலனை கருத்தில் கொண்டு ஜப்பான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் நல்லுறவை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இதுவிஷயத்தில் சீனா சற்று பின்தங்கி உள்ளது. எனவே, இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து அந்த நாடு சிந்திக்க வேண்டும் என்றார் அபே.
ஜப்பான் தேர்தலில் எல்டிபி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்த நாட்டுடனான உறவை மேம்படுத்தத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. அதேநேரம், அபே அடுத்த பிரதமராக பொறுப்பேற்க உள்ள நிலையில், சீனா தனது அச்சத்தையும் வெளிப்படுத்தி உள்ளது.
""ஜப்பான் உடனான இப்போதைய எல்லைப் பிரச்னையை முறையாகக் கையாள வேண்டும். இதுவிஷயத்தில் அந்த நாடு எத்தகைய முடிவை எடுக்கும் என்பது கவலை அளிப்பதாக உள்ளது'' என சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் தெரிவித்தார்.
கிழக்கு சீன கடல் பகுதியில் உள்ள தீவுக் கூட்டங்களுக்கு சீனாவும் ஜப்பானும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இதனால் இரு நாடுகளுக்கிடையிலான மோதல் வலுத்து வருகிறது. இரு நாடுகளும் தங்கள் கடற்படையை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுத்தி உள்ளன.
சீனாவுடனான பதற்றம் அதிகரித்ததற்கும், அமெரிக்காவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டதற்கும் ஜப்பான் ஜனநாயகக் கட்சியின் தவறான கொள்கைகளே காரணம் என அபே குற்றம் சாட்டி உள்ளார். அதேநேரம், அமெரிக்காவுடனான உறவை புதுப்பிக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
எல்டிபி தலைமையிலான அரசு 50 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து ஆட்சியில் இருந்தது. கடந்த 2009-ல் நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்தது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. அபே இதற்கு முன்பு 2006-2007-ல் பிரதமராக இருந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது

தோள்பட்டை வலி, மூட்டு வலி குறித்த பதில்கள்!

   

தோள்பட்டை வலி, மூட்டு வலி குறித்த சந்தேகங்களுக்கு கோவை திருச்சி ரோட்டிலுள்ள ஆர்த்தோ ஒன் எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை மைய
நிர்வாக இயக்குநரும், ஆர்த்ரோஸ் கோபிக் மற்றும் விளையாட்டு காயங்களுக்கான சிறப்பு மருத்துவ நிபுணருமான டாக்டர் வி.டேவிட்ராஜன் அளித்த
பதில்கள் வருமாறு:


எனக்கு வயது 45. 2வது மாடியில் குடியிருக்கிறேன். தரை தளத்தில் உள்ள குடிநீர் குழாயில் இருந்து குடும்பத்தின் தேவைக்கு 25 குடம் வரை தண்ணீர் எடுக்க வேண்டும். 2வது மாடிக்கு குடத்தை தூக்கி செல்வதால் கை, கால் மூட்டு பாதிக்குமா?

தொடர்ச்சியாக குடத்தில் தண்ணீர் எடுத்து செல்லக்கூடாது. சிறிது நேரம் இடைவெளி விட்டு எடுத்து செல்லலாம். பெரிய குடத்தை பயன்படுத்த
கூடாது. சிறிய குடத்துடன் ஏறி இறங்கும் போது உடலுக்கு பயிற்சி தான். ஆனால் இடைவெளி விட்டு கொண்டு சென்றால் பாதிப்பு குறையும்.

வீட்டில் மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின் உள்ளிட்ட நவீன உபகரணங்கள் உள்ளன. கடினமான வேலை எதுவும் நான் செய்வதில்லை. இருப்பினும் தோள்பட்டை வலிக்கிறது. சற்று கனமான பொருளை தூக்கிவிட்டால் கூட, வலி தாங்க முடிவதில்லை. நாற்பது வயதை நெருங்கும் எனக்கு பயமாக இருக்கிறது.
இதற்கு உடற்பயிற்சி முக்கியம். தோள்பட்டையில் வலி இருந்தால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

இட்லி, தோசை மாவு விற்கிறேன். தூங்கும்நேரம் தவிர எப்போதும் வேலைதான். தோள்பட்டை வலியால் அவதிப்படுகிறேன். ஒரு மருத்துவமனைக்கு சென்றபோது டெஸ்ட் செய்து பார்த்து, ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். வலி நிவாரணி மாத்திரை சாப்பிடுவது தற்காலிக தீர்வாக
உள்ளது. 50 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால், ஆபரேஷன் செய்தால் ஆபத்து என்று சிலர் பயமுறுத்துகிறார்களே...


பயப்பட தேவையில்லை. நவீன நுண்துளை சிகிச்சை உள்ளது. இதன் மூலம் சிகிச்சை செய்வதால் எந்தவிதமான ஆபத்தும் இல்லை.

வயது 65 ஆகிறது. தோள்பட்டை வலிக்கும் போது கழுத்தும் வலிக்கிறது. இரண்டு வலிகளும் ஒன்றுதானா? வேறு என்றால், மருத்துவம் தனி தனியாக பார்க்க வேண்டுமா?

கழுத்து வலி ஏற்பட்டால் தோள்பட்டை வலியும் வர வாய்ப்பு அதிகம். கழுத்து எலும்பு தேய்மானத்தால் தோள்பட்டை வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு சிறிய அளவிலான தலையணைகளை பயன்படுத்தலாம். கழுத்து வலிக்கென சிறப்பு உடற்பயிற்சி இருக்கிறது. இந்த வலி தொடர்ந்து
ஏற்பட்டால் தக்க மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உடற்பயிற்சி செய்வது நல்லது.

என் மகள் 8ம் வகுப்பு படிக்கிறாள். வீட்டில் ஒரே இடத்தில் 2 மணி நேரத்திற்கு குறையாமல் அமர்ந்து கம்ப்யூட்டரில் பேஸ்புக், நெட்டில் செலவிடுகிறாள். இதனால் அவளுக்கு மூட்டு பிரச்னை எதாவது வருமா?

கம்ப்யூட்டரில் பணியாற்றும் போது ஒரே நிலையில் அமர்ந்து இருப்பதால் உடலில் உள்ள எல்லா மூட்டுகளும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
இதை ஆர்எஸ்ஐ என்பார்கள். இதற்கென தனி சிறப்பு உடற்பயிற்சி உள்ளது. இதை மேற்கொண்டால் பாதிப்புகளை தவிர்க்கலாம். உடற்பயிற்சி
மேற்கொள்ளாவிட்டால் நாளடைவில் தனித்தனி மூட்டுகளில் பாதிப்பு ஏற்படும்.

இடுப்பில் சில மாதங்களாக வலி. பஸ்சில் நிற்க முடியாது. வலி உயிர் போகும். வாக்கிங் போனால் சரியாகும் என்றார்கள். அதன்படி வாக்கிங் சென்றபோதும் வலி ஏற்பட்டது. பின்னர் படிப்படியாக வலி குறைந்து இப்போது இடுப்பு வலி இல்லை. இந்த வலி வந்தது ஏன்? போனது ஏன்? வாக்கிங் போனால் இடுப்பு, மூட்டு வலிகள் மாயமாகுமா?

நடைபயிற்சி மேற்கொண்டால் மூட்டுகள் வலிமை பெறும். திறந்த வெளியில் சூரிய ஒளி உடலில் படும்படியாக நடைபயிற்சி செய்ய வேண்டும்.

மூட்டு வலி, வீக்கத்திற்கு மருந்து உள்ளதாக விளம்பரம் செய்கிறார்கள். சிகிச்சைக்கு செல்லாமலேயே இந்த மருந்துகளை வாங்கி குடிக்கலாமா? சரியாகுமா? அல்லது பணமும் காலமும் விரயமாகுமா?

கண்ட மருந்துகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இதனால் உடலில் பக்க விளைவுகள் ஏற்படும். உரிய மருத்துவரிடம் சிகிச்சை பெற்று அவர்
அளிக்கின்ற மருந்து மாத்திரைகளை சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும்.

எனக்கு வயது 28. கலாசி தொழிலாளி. மூட்டு வலி சில நேரங்களில் ஏற்படுகிறது. இதை தாங்க முடியவில்லை. மது குடிப்பது தவறு என்று
தெரிந்தாலும், அதுதான் வலிக்கு மருந்தாக இருக்கிறது. வேறு தொழிலுக்கும் செல்ல வழியில்லை. என்ன செய்வது?


உடற்பயிற்சி என்பது எல்லோருக்கும் அவசியமான ஒன்று. முரட்டு தனமாகவும், அதிக அளவு எடைகொண்ட மூட்டைகளை சுமக்க கூடாது