siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 28 ஜூலை, 2012

2015 முதல் ஆண்டுதோறும் 2.5 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஆபத்து ஆய்வில் அதிர்ச்சி தகவல்

 

 
இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரிக்கும். இதன்படி, 2015 முதல் ஆண்டுக்கு
2.50 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் மார்பக புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இன்னும் 10 ஆண்டுகளில் இது பல மடங்கு அதிகரிக்கும் என்ற தகவல் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் லியான் என்ற உலக புற்றுநோய் ஆராய்ச்சி கழக ஆய்வின்படி, இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரிக்கும். இதன்படி, வரும் 2015 முதல் ஆண்டுக்கு 2.50 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளது என்கின்றனர். அதே போல் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

காரணம் என்ன:

மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றி திருமணம் செய்வதை தவிர்ப்பது. குழந்தை பெற்றுக் கொள்வதை தாமதப்படுத்துவது. தாய்ப்பால் கொடுப்பதை
தவிர்ப்பது. கால இடைவெளியின்றி குழந்தை பெற்றுக் கொள்வது ஆகியவை பெண்களிடம் ஹார்மோன் மாறுதலை ஏற்படுத்துகிறது. இதுவும் மார்பக
புற்றுநோய்க்கு காரணமாகிறது.

தாய் மற்றும் உறவினர்களுக்கு இருந்தாலும் மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. மாதவிடாய் சுகாதாரமின்மை, தரமற்ற நாப்கின்களைப்
பயன்படுத்துவது, புற்றுநோய் வைரஸ் தொற்று உள்ளிட்ட காரணங்களால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

ஆனால், இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல், பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

குறிப்பாக கிராமங்களில் மாதவிடாய் சுகாதாரம் பற்றிய அறியாமையால் கருப்பை வாய் புற்றுநோய் வருகிறது. நகர்ப்புறங்களில் நாகரிக மோகத்தில் மார்பக புற்றுநோய் அதிகரிப்பது தெரியவந்துள்ளது.

விழிப்புணர்வு இல்லை:

திருச்சி புற்றுநோய் மருத்துவ நிபுணர் சீனிவாசன் கூறுகையில், மொத்தம் 60 சதவீதம் பேர் நோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு வருவதால், பூரண குணமடைவது கேள்விக்குறியாகிறது. நடுத்தர மற்றும் ஏழைகள் பலர் மருத்துவ சிகிச்சை பெற வசதியின்றி, உயிரை இழக்கிறார்கள். போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம் என்றார்.

எளிதில் குணப்படுத்தலாம்


மார்பக புற்றுநோயை சுயபரிசோதனை, மேமோகிராபி சோதனைகள் மூலம் குறைந்த செலவில், எளிதில் கண்டறியலாம். ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், மார்பகத்தை அகற்றாமலே சிகிச்சை பெறலாம். நாற்பது வயதைக் கடந்தவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுய பரிசோதனை அல்லது மேமோகிராபி சோதனை செய்து கொள்வது அவசியம் என்கிறார் திருச்சி மகப்பேறு மருத்துவ நிபுணர் தமிழ்செல்வி.

இலவச நாப்கின்:


கிராமப்புற, ஏழை பெண்களுக்கு மாதவிடாய் சுகாதாரம் கிடைக்க இலவசமாக நாப்கின் வழங்கும் திட்டம் வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தனியார் நிறுவனங்களில் இருந்து சுகாதாரத் துறையினர் கொள்முதல் செய்து, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்படுகிறது. இதை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவு படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்து சாத்தியமா:

கருப்பை வாய் புற்றுநோய்க்கு காரணமான எச்பிவி எனப்படும் வைரஸ் (ஹூமன் பாப்பிலோமா வைரஸ்) கண்டறியப்பட்டுள்ளது. இதை அழிக்கும் தடுப்பு மருந்தை 13 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கொடுத்தால் தடுக்க முடியும். அதாவது, நோய்க்கான காரணியை 90% வரை தவிர்க்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

மார்பக காம்பை சுற்றி நாள்பட்ட ஆறாத புண்கள். மார்பகத்தில் ஏதேனும் மாற்றங்கள். காம்பில் நீர் அல்லது ரத்தக் கசிவு. மார்பக காம்பு உள்நோக்கி

இருத்தல். மார்பக பகுதியில் சதைகள் கடினமாவது ஆகியவை மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள். துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுதல், ரத்தக் கசிவு

உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சோதனை செய்து கொள்வது அவசியம்

0 comments:

கருத்துரையிடுக