siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 22 டிசம்பர், 2012

வடபழநியில் அரசு பஸ் தீப்பிடித்து எரிந்தது


சென்னை ஆற்காடு சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பஸ், திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

அரசு பஸ்

சென்னை வடபழனி பணிமனையில் இருந்து வடபழனி–குன்றத்தூர்(தடம் எண்: எம்.88) செல்லும் அரசு பஸ், நேற்று காலை வழக்கம் போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு குன்றத்தூர் சென்றது. நேற்று பிற்பகல் குன்றத்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு போரூர் வழியாக வடபழனி நோக்கி வந்து கொண்டிருந்தது.

பஸ்சை டிரைவர் தங்கவேல் ஓட்டினார். கண்டக்டர் கருணாநிதி பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார்


புகை வந்தது
 
மதியம் 1 மணியளவில் வடபழனி பஸ் நிலையத்துக்கு முன்பு ஆற்காடு சாலையில் சாலிகிராமம் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பஸ்சின் டிரைவர் சீட்டுக்கு அருகில் இருந்த என்ஜினில் இருந்து புகை வரத்தொடங்கியது. இதையடுத்து டிரைவர் தங்கவேல், பஸ்சை சாலையின் ஓரமாக நிறுத்தினார். அதற்குள் என்ஜினில் இருந்து அதிகளவில் புகை வெளியே வர ஆரம்பித்தது.

இதனால் பயந்து போன டிரைவர் தங்கவேல், பயணிகள் அனைவரையும் பஸ்சில் இருந்து கீழே இறங்கி விடும்படி கூறி விட்டு, தானும் பஸ்சில் இருந்து கீழே குதித்தார். பஸ்சில் பயணம் செய்த 40–க்கும் மேற்பட்ட பயணிகள், அலறியடித்துக்கொண்டு பஸ்சின் படிக்கட்டு வழியாக கீழே முண்டியடித்துக்கொண்டு இறங்கி ஓடினார்கள்.

தீப்பிடித்து எரிந்தது

பயணிகள் அனைவரும் பஸ்சில் இருந்து இறங்கிய சிறிது நேரத்தில் பஸ்சின் முன்பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்து கொண்டு பஸ் தீப்பிடித்து எரிந்தது.

உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் பஸ் முழுவதும் தீ வேகமாக பரவி, கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் போல் காட்சி அளித்தது.

சாலையோரம் பஸ் நிறுத்தப்பட்டதால் அருகில் இருந்த கடைகளிலும் தீயின் அனல் பரவியது. எனவே கடைக்காரர்கள் தங்களது கடைகளை மூடி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

இதற்கிடையில் அசோக்நகர் தீயணைப்பு வீரர்கள் வந்து எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். ஆனால் அதற்குள் பஸ் முழுவதும் எரிந்து எலும்புக்கூடு போல் காட்சி அளித்தது.

போக்குவரத்து பாதிப்பு

போக்குவரத்து மிகுந்த சாலையில் பஸ் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் வாகனங்கள் ஏதும் செல்ல முடியாமல் சாலையின் இருபுறங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவ்வழியே சென்றவர்கள் எரிந்து கொண்டிருந்த பஸ்சை தங்களது செல்போனில் படம் பிடித்து சென்றனர்.

பஸ்சில் கரும்புகை வந்தவுடன் டிரைவர் அனைத்து பயணிகளையும் இறங்கச்சொன்னதால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினார்கள். தீ விபத்தில் எரிந்த பஸ்சை, போலீசார் வடபழனி பணிமனைக்கு எடுத்துச் சென்றனர்.

அரசு பஸ் தீப்பிடித்து எரிந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவுசெய்துவிசாரித்துவருகின்றனர்{காணொளி,}

0 comments:

கருத்துரையிடுக