siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 14 மே, 2013

மதுரையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்த்தாய் !

மதுரையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்த்தாய் ! 
முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
 பெருமை வாய்ந்த தமிழ் மொழியை சிறப்பிக்கும் வண்ணம், அமெரிக்கா நாட்டின் பெருமையையும் புகழையும் உலகளவில் பரப்பும் வகையில் அமைந்துள்ள சுதந்திர தேவி சிலையைப் போல, தமிழர்களின் நாகரீகம், பண்பாடு, இலக்கியச் செல்வங்கள், கட்டடக் கலைத் திறன் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்த்தாய் சிலை அமைக்கப்படும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், ஐவகை நிலங்களான குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை ஆகியவற்றின் மாதிரிகளை உருவாக்கி தமிழர்களின் தொன்மைச் சான்றுகளாய் விளங்கும் சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள மரம், செடி, கொடிகளுடன் தமிழ்த் தாய்ப் பூங்கா ஒன்றும் அங்கு உருவாக்கப்படும்.
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் அறிஞர்களுக்கு திருவள்ளுவர் விருது, திரு.வி.க. விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, பாரதியார் விருது, கி.ஆ.பெ. விசுவநாதம் விருது ஆகியவை திருவள்ளுவர் திருநாளிலும், தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, உ.வே.சா. விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது ஆகியவை சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்றும் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து திருக்குறளை பிற நாட்டு அறிஞர்களும் பாமரர்களும் புரிந்து கொள்ள வழிவகை செய்தவரும், அறநெறிக் கருவூலமான நாலடியார் மற்றும் திக்கெட்டும் தமிழ்ப் புகழ் பரப்பும் திருவாசகம் ஆகியவற்றை மொழி பெயர்த்தவரும் ஆன அயல்நாட்டு தமிழ் அறிஞர் ஜி.யு. போப்பின் தமிழ்த் தொண்டை போற்றும் வகையில், அயல் நாட்டு மொழிகளில் தமிழ் இலக்கியங்களை மொழி பெயர்க்கும் சிறந்த தமிழ் மொழி பெயர்ப்பாளர் ஒருவருக்கு ஜி.யு.போப் விருது வழங்கப்படும்.
விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ஒரு லட்சம் ரூபாய், தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவை வழங்கப்படும். இதற்கென ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த விருது சித்திரைத் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு அன்று வழங்கப்படும்.
இஸ்லாமிய தமிழ்க் காப்பியங்களில் சிறந்த காப்பியமான சீறாப் புராணத்தை இயற்றிய உமறுப் புலவர் தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டை போற்றும் வகையில், தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றி வரும் தமிழ் அறிஞர் ஒருவருக்கு உமறுப் புலவர் பெயரில் விருது வழங்கப்படும்.
விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ஒரு லட்சம் ரூபாய், தங்கப் பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை ஆகியவை வழங்கப்படும். இதற்கென ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த விருது சித்திரைத் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு அன்று வழங்கப்படும். வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப உலகமெலாம் கணினி வழித் தமிழ் மொழி பரவிட வகை செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் 'முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ என்ற பெயரில் ஒரு விருது வழங்கப்படும்.
விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ஒரு லட்சம் ரூபாய், தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவை வழங்கப்படும். இதற்கென ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த விருது சித்திரைத் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு அன்று வழங்கப்படும். இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும் தமிழ்க் கல்வி வளர முதல் நடவடிக்கையாக டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட 2003 ஆம் ஆண்டு 50 லட்சம் ரூபாய் நிதி எனது அரசால் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஒரிசா, உத்தர் பிரதேஷ், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை நிறுவிட மானியங்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளன. ஆந்திராவில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் தமிழ் அறிஞர் மு.வ.வின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ்த் துறை தொடங்கப்பட்டு தற்போது பொன்விழா கண்டுள்ளது.
இத்தமிழ்த் துறையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் முதுகலை, முனைவர் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். ஆனால் தமிழ்த் துறையில் போதிய அளவு ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. எனவே அங்கு தமிழ்ப் படிக்கும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், வருங்காலத்தில் ஆந்திர மாநிலத்தில் தமிழ் மொழியை வளர்ப்பதைக் கருத்தில் கொண்டும், திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைக்கு 3 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நிதி உதவியாக ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழர் பண்பாட்டையும் நாகரிகத்தையும் போற்றி வளர்த்து வரும் தில்லி தமிழ்ச் சங்க வளாகத்தின் நுழைவாயிலில் தமிழர் தம் கட்டடக் கலையை வெளிப்படுத்தும் விதமாக தோரண வாயில் அமைத்திட வேண்டும் எனவும் அதற்கு தமிழக அரசு உதவிட வேண்டும் எனவும் தில்லி தமிழ்ச் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. அவர்களின் கோரிக்கையை ஏற்று தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு தோரண வாயில் கட்ட நிதி உதவியாக 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதை மனநிறைவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பேரறிஞர் அண்ணாவால் 1968ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உலகத் தமிழ் மாநாட்டின் போது அறிவிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழர் தம் வாழ்க்கை வளத்தை எடுத்துக் கூறும் தொல்காப்பியத்தின் பெயரால் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்விருக்கை ஏற்படுத்தப்படும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொல் காப்பியத்திற்கு எழுதியுள்ள பல்வேறு விளக்க உரைகளை ஒன்று சேர்த்து முறைப்படுத்துவது, பிற பல்கலைக்கழகங்களுடன் இணைந்து தொல்காப்பியம் குறித்தான பயிலரங்குகள், கருத்தரங்குகள் நடத்துதல் போன்ற பல்வேறு தமிழ் வளர்ச்சிப் பணிகள் இந்த ஆய்விருக்கையின் மூலம் மேற்கொள்ளப்படும். இதற்கென உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 50 லட்சம் ரூபாய் வைப்புத் தொகையாக வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளத

0 comments:

கருத்துரையிடுக