siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

மட்டு.வில் க.பொ.த (உ/த) மாணவன் கடத்தப்பட்டு விடுவிப்பு

21.08.2012.காத்தான்குடி 05ஆம் குறிச்சி அப்துல் மஜீத் ஆலிம் வீதியைச் சேர்ந்த க.பொ.த (உஃத) மாணவன் குத்தூஸ் முஹம்மட் அப்சர் (வயது 18) நேற்றிரவு (2012-08-20) 09.30 மணியளவில் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு மயக்க நிலையில் இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாண்டு கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சையில் வணிகப் பிரிவில் தோற்றி பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் இம்மாணவன் நேற்று இரவு 09.15 மணியளவில் காத்தான்குடி கேணி லேனிலுள்ள மஸ்ஜிதுஸ் ஸைனப் பள்ளிவாயலுக்கு இஸாத் தொழுகைக்காக சென்று தொழுது விட்டு பள்ளியை விட்டு வெளியேறும் போது சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

குறித்த மாணவன் நேற்று இரவு 09.15 மணியளவில் மோட்டார் சைக்கிளில்(ஸ்கூட்டி பஃப்) காத்தான்குடி கேணி லேனிலுள்ள மஸ்ஜிதுஸ் ஸைனப் பள்ளிவாயலுக்கு இஸாத் தொழுகைக்காக சென்று தொழுது விட்டு பள்ளியை விட்டு வெளியே வந்த போது அவ்விடத்திற்கு வந்த சிலர் அவரை அவர்களுடைய மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றுள்ளதாகவும் அதிகாலை வரை அவரை விடுவிக்காது இன்று காலை சுமார் 07.00 மணியளவில் குறித்த மாணவனின் உறவினர்கள் தேடிச்சென்றுள்ள போது காத்தான்குடி 05 டாக்டர் பரீட்டின் டிஸ்பென்சரிக்கு முன்னால் குறித்த மாணவனை மயக்க நிலையில் கண்டு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாகவும் இதுவரையில் அவர் மயக்க நிலையிலேயே காணப்படுவதாகவும் அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த மாணவர் தாக்கப்பட்டுள்ளார் எனவும் இவரின் மோட்டார் சைக்கிளை ஸைனப் பள்ளிக்கு அருகில் பெற்றுக் கொண்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மாணவனின் தந்தை குத்தூஸ் கருத்துத் தெரிவிக்கையில்,

மாணவன் மயக்க நிலையில் உள்ளதாகவும் உண்மையில் என்ன நடந்தது என்பதைச் சரியாக அறியமுடியாதுள்ளதாகவும் இவர் உயர் தர மாணவன் என்பதால் இவரது படிப்பைக் கெடுப்பதற்கு இது மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

குறித்த மாணவன் இன்று அதிகாலை வரை வீடு திரும்பாததால் மாணவனின் வீட்டார் நேற்றிரவு நித்திரையின்றி பதற்ற நிலையில் இருந்துள்ளனர்