siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

போலீஸுக்கு போக்கு காட்டிய பொன்முடி கைது.

         
Sunday 07 October 2012 .By.Rajah.கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த, தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி, செஞ்சியில் பதுங்கியிருந்தார். போலீசார், நேற்று காலை, அவரை கைது செய்ய சென்றபோது, காரில் ஏறி தப்பினார். வழியில், மூன்று கார்களில் மாறி, கிராமங்கள் வழியாக தப்பிய பொன்முடியை, போலீசார், அவரது வீட்டில் நேற்று மதியம் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த, பூத்துறை கிராமத்தில், செம்மண் குவாரியில் இருந்து மண் வெட்டி எடுக்க, தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன், கவுதமசிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன், தி.மு.க., பிரமுகர் ஜெயச்சந்திரன், சதானந்தன் ஆகியோர், 2007, அக்டோபர் மாதம் உரிமம் பெற்றனர். அனுமதிக்கப்பட்ட அளவை விட, செம்மண் வெட்டி எடுத்ததாக புகார் எழுந்தது.செம்மண் குவாரியை, வானூர் தாசில்தார் குமாரபாலன், ஆய்வு செய்தார். அப்போது, சதானந்தம் என்பவர், சிலருடன் வந்து, "குவாரிகள் எல்லாம் முன்னாள் அமைச்சர், அவரது மகன், உறவினர்களுக்குச் சொந்தமானது' எனக் கூறி, அதிகாரிகளை கடமையை செய்ய விடாமல் தடுத்ததாக, போலீசில், வானூர் தாசில்தார், புகார் செய்தார்.
புகாரில், "தி.மு.க., ஆட்சியின் போது, கனிம வள அமைச்சராக, கூடுதல் பொறுப்பை பொன்முடி வகித்தார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மகன் மற்றும் உறவினர்களுக்கு, செம்மண் குவாரிக்கு உரிமம் வழங்கினார். அவர்கள், நிபந்தனைகளை மீறி, மணல் எடுத்துள்ளனர். இதன் மூலம், அரசுக்கு, 28 கோடி ரூபாய், இழப்பு ஏற்படுத்தியுள்ளனர்' என, கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி மற்றும் உறவினர் ராஜமகேந்திரன், குவாரி மேலாளர் சதானந்தம் உள்ளிட்ட, ஐந்து பேர் மீது, கனிம வளச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, தி.மு.க., பிரமுகர் ஜெயச்சந்திரன் என்பவரை கைது செய்தனர். தலைமறைவான முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டவர்களை, போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
முன்ஜாமின் மனு:

முன்ஜாமின் கோரி, பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன், மேலாளர் சதானந்தம் ஆகியோர், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.மனுவை விசாரித்த, நீதிபதி அக்பர் அலி, முன்ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்தார்.
செஞ்சியில் பதுங்கல்:

தலைமறைவாக இருந்த பொன்முடி,திடீரென நேற்று காலை, 9:12 மணிக்கு, செஞ்சிக்கு காரில் வந்தார். அரசுக்கு எதிராகவும், தன் மீது போடப்பட்ட வழக்கையும் கண்டித்து கோஷம் எழுப்பினார். அருகில் பூக்கடை வைத்திருந்த பெண்ணிடம், அ.தி.மு.க., அரசுக்கு எதிரான, தி.மு.க.,வின் பிரசார நோட்டீசைக் கொடுத்தார். பின், காலை, 9:16 மணிக்கு, அருகில் தயாராக நின்றிருந்த, முன்னாள் எம்.எல்.ஏ., கண்ணனுக்குச் சொந்தமான, சுமோ காரில் ஏறினார்.பொன்முடி வருகையை சற்றும் எதிர்பார்க்காத செஞ்சி போலீசார், சுதாரித்து, காரை மறிக்க முயன்றனர். இதற்குள் கார் வேகமாக புறப்பட்டுச் சென்றது. காரை பின் தொடர, இரண்டு ஜீப்களில் போலீசார் புறப்பட்ட போது, போலீசாரின் கார்களை, தி.மு.க.,வினர் சுற்றி வளைத்து, மறியல் செய்தனர்.அவர்களை தள்ளிவிட்டு வந்த போலீசார், பொன்முடி சென்ற, முன்னாள் எம்.எல்.ஏ., கண்ணனின் சுமோ காரை விரட்டிச் சென்றனர். விழுப்புரம் செல்வதற்குள் கைது செய்ய போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். கஞ்சனூர் போலீஸ் நிலையம் முன், காரை மறித்து, கைது செய்ய போலீசார் காத்திருந்தனர்.ஆனால், செஞ்சியில் இருந்து புறப்பட்ட சிறிது தூரத்திலேயே, பொன்முடி, வேறு காருக்கு மாறினார். மூன்று கார்களில் மாறி, கிராமங்கள் வழியாக விழுப்புரம் சென்றார்.காலை, 10:40 மணிக்கு, விழுப்புரம், நேருஜி சாலையில் உள்ள, நகர தி.மு.க., அலுவலகம் முன் நடந்த துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.



விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.,சண்முகவேல் மற்றும் போலீசார், நகர, தி.மு.க., அலுவலகத்திற்கு வந்தனர். பொன்முடியிடம் கைது வாரன்ட்டை காண்பித்தனர். "வீட்டிற்குச் சென்ற பின் கைது செய்து கொள்ளுங்கள்' என, பொன்முடி, போலீசாரிடம் தெரிவித்தார்.இதையடுத்து, கட்சித் தொண்டர்கள் புடைசூழ, விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் காரில் ஊர்வலமாகப் புறப்பட்ட பொன்முடி, சண்முகபுரம் காலனியில் உள்ள வீட்டிற்குச் சென்றார். மதியம், 1 மணிக்கு, பொன்முடியை போலீசார் கைது செய்து, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.அவரிடம் விசாரணை செய்த போலீசார், மாலை, 3 மணிக்கு, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி கயல்விழி முன் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, பொன்முடியை வரும், 19ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். பின், கடலூர் மத்திய சிறைக்கு பொன்முடி அழைத்துச் செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.