siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 16 அக்டோபர், 2012

கொலையானதாக கூறப்பட்ட சிறுவன் காதலியுடன்

Tuesday  16  October  2012 By.Rajah
ஆஜர் - பரபரப்பு : பீகாரில் "பந்த்' நடத்திய எதிர்க்கட்சிகளுக்கு மூக்குடைப்பு பீகாரில், மதுபானி நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து, அங்கு நேற்று நடந்த, "பந்த்'தின் போது, ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர், லாலு பிரசாத், லோக் ஜனசக்தி கட்சித் தலைவர், ராம்விலாஸ் பஸ்வான் கைது செய்யப்பட்டனர். அதேநேரத்தில், இந்த, "பந்த்'திற்கு காரணமான, படுகொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட சிறுவன், காதலியுடன், டில்லி கோர்ட்டில் ஆஜரானதால், பரபரப்பு ஏற்பட்டது.
வன்முறை : பீகாரின் வடக்கு பகுதியில் உள்ள, மதுபானி நகரைச் சேர்ந்த, சுபாஷ், 17, ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற, பள்ளிச் சிறுவன், கடந்த மாதம், மர்மமான முறையில், படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. இதைக் கண்டித்து, அந்தப் பகுதியில் கடந்த வாரம் நடந்த போராட்டத்தின்போது வன்முறை நிகழ்ந்தது.

வன்முறையாளர்களைக் கலைக்க, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், இரண்டு பேர் இறந்தனர்.
இதைக் கண்டித்து, இடதுசாரி கட்சிகள், லாலு பிரசாத்தின், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ராம்விலாஸ் பஸ்வானின், லோக் ஜனசக்தி கட்சி ஆகியவை, நேற்று, "பீகார் பந்த்' நடத்தின. இதனால், தலைநகர் பாட்னாவில், போக்குவரத்து பாதிப்பு இல்லை; ஆனால், பிற பகுதிகளில் பாதிப்பு அதிகமாக இருந்தது.
மாநிலத்தின், வடக்கு மாவட்டங்களான, கயா, மதுபானி, தர்பங்கா, ஆரா, ஜஹானாபாத் மற்றும் போஜ்பூர் போன்ற இடங்களில் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை; கடைகள் அடைக்கப்பட்டிருந்தன; பஸ் போக்குவரத்து, முற்றிலும் முடங்கியது.
சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீது கற்கள் வீசப்பட்டன; பயணிகள் ரயில், பல இடங்களில் ரத்து செய்யப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட, லாலு பிரசாத், ராம்விலாஸ் பஸ்வான் கைது செய்யப்பட்டனர்.

அதேநேரத்தில், பீகாரில் நேற்று, எதிர்க்கட்சிகள் நடத்திய, "பந்த்'திற்கு காரணமான, படுகொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட சிறுவன் சுபாஷ், காதலி, மணீஷா, 16, ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) டில்லி கோர்ட்டில் ஆஜராகி பரபரப்பை ஏற்படுத்தினான்.
விசாரணை : தன்னை யாரும் கொலை செய்யவில்லை என்று கூறிய அவன், காதலியுடன் ஓடிப்போன தகவலையும் தெரிவித்தான். அந்தச் சிறுவனிடமும், அவனின் காதலியிடமும், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். "எந்த விவகாரம் கையில் கிடைக்கும்; அதன் மூலம் பிரச்னையை ஏற்படுத்தி, மாநிலத்தை ஸ்தம்பிக்கச் செய்யலாம்' என்ற, எண்ணத்தில், நேற்று பீகாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக, "பந்த்' நடத்திய, எதிர்க்கட்சிகளுக்கு, சிறுவன் கோர்ட்டில் ஆஜரான விவகாரத்தால் மூக்குடைப்பு ஏற்பட்டது. சுய விளம்பரத்திற்காகவும், அரசியல் லாபத்திற்காகவும், அரசியல்வாதிகள் போராட தயங்க மாட்டார்கள் என்பது, நேற்றைய சம்பவம் மூலம், உறுதியாகியுள்ளது