siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 29 செப்டம்பர், 2012

அரசியல் தீர்வு ஒன்றை எட்ட தமிழருக்கு சர்வதேச ஆதரவு; அரசு இனியும் தட்டிக் கழிக்க முடியாது என்கிறார் சம்பந்தன்

29.09.2012.By.Rajah.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதன் முறையாக மாகாண சபைக்கு வந்திருக்கிறது. இந்த நேரத்தில் ஒரு நிலையான அரசியல் தீர்வை எட்டுவ தற்காக சர்வதேசத்தின் ஆதரவும் பங் களிப்பும் எமக்குக் கிடைத்திருக்கிறது. ஆகவே தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டிய தேவை இப்போது அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.
அதில் சர்வதேச மும் உறுதியாக உள்ளது. நீதியை நியாயத்தை உருவாக்காமல் அரசு இனியும் தட்டிக் கழிக்க முடியாது. இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
கிழக்குமாகாண சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் பதவியேற்பு வைபவம் நேற்றுத் திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சபைக்குத் தெரிவான 11 உறுப்பினர்களும் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வில் தலைமை உரை நிகழ்த்துகையிலேயே சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவித்தவை வருமாறு:
நாம் ஒரு தனித் தேசிய இனம். எமக்கென்று ஒரு பாரம்பரியம் இருக்கின்றது. நாம் சரித்திர ரீதியாக வடக்கு, கிழக்கில் வாழ்ந்து வந்திருக்கின்றோம். எம்முடன் இஸ்லாமிய சகோதரர்களும் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். இன்றும் நாம் பெரும்பான்மையுடன்தான் இருக்கின்றோம்.
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இந்நிகழ்வை நான் கருதுகின்றேன். இம்முறை நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டோம். நாங்கள் மாகாணசபையை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.
தவறானவர்களின் கையில் மாகாணசபை நிர்வாகம் இருக்கக்கூடாது. கடந்தமுறை போன்ற நிலைமை தமிழ் மக்களுக்கு இம்முறையும் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டோம்.
ஆட்சி அமைக்கக்கூடிய அதிகாரம் கிடைக்கவில்லையென்றாலும் மாகாணசபைக்குத் தெரிவுசெய்யப்பட்ட 12 தமிழ் உறுப்பினர்களில் 11 பேர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தெரிவுசெய்யப்பட்டிருப்பரென்பது சாதாரண விடயமோ அல்லது இலகுவான விடயமோ அல்ல.
கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் நிற்கின்றார்கள். கொள்கை ரீதியாக தமிழ் மக்கள் இத்தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். முழுமையான வெற்றியைப் பெறுவதற்கு இன்னும் 6 ஆயிரம் வாக்குகளே தேவைப்பட்டன. அதை 3 மாவட்டத்திலிருந்தும் பெற்றிருக்கலாம். ஆனால், மக்கள் முழுமையான பங்களிப்பைச் செய்தார்கள். எமது மக்களுடைய ஜனநாயகத் தீர்ப்பை அரசும், உலக நாடுகளும் மதிப்பளிக்க வேண்டியிருக்கின்றது.
எமது மக்களுடைய தீர்ப்பைப் புறந்தள்ள முடியாது. தெரிவுசெய்யப்பட்ட 11 பேரும் நிதானமாகச் செயற்படவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கு அரசு பல முயற்சிகளைச் செய்தது. ஆனால், அது பலிக்கவில்லை. ஏனைய அரசியல் கட்சிகளை அவர்கள் உடைத்தார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எவராலும் உடைக்கமுடியாது. நாங்கள் ஒற்றுமையாக எமது மக்கள் வைத்த நம்பிக்கைக்கு இணங்க செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
யுத்தம் முடிந்து மூன்று வருடங்கள் கடந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டில் சர்வதேசம் எங்களை அங்கீகரித்துள்ளது. தமிழ் மக்களின் நம்பிக்கையின் பிரதிநிதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அரசின் பல்வேறு திட்டங்களால் எமது இனப் பரம்பல் சிதைக்கப்பட்டுள்ளது. அரசின் திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் குடிப்பரம்பலை இனப் பரம்பலை செய்யக்கூடாது என்று கேட்கின்றோம். இந்நிலையால்தான் எங்களது கலாசாரம் சிதைக்கப்படுகின்றது. எமது பிரதிநிதித்துவம் குறைவடைகின்றது. நாம் அரசியல் தீர்வில் உறுதியாக இருக்கின்றோம்.
நாடு பிரிக்கப்படவேண்டும் என்று கேட்கவில்லை. ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுதந்திரமாக நிம்மதியாக சொந்த இடத்தில் உரிமையுடன் வாழவேண்டும் என்ற உறுதியான முடிவை எமது மக்கள் கூறியிருக்கின்றார்கள். அரசுடன் நாம் ஒத்துழைத்துச் செயற்படத் தயாராக இருக்கின்றோம். எமது மக்களுடைய உரிமைகள் தட்டிக்கழிக்கப்படுமாயின், சாத்வீகப் போராட்டத்தை ஆரம்பிக்க நாம் ஒருபோதும் பின்நிற்கமாட்டோம் என்றார்.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகரசபை, பிரதேச சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்