siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 4 அக்டோபர், 2012

இலங்கை கடற்படை வீரரின் துப்பாக்கியில் இருந்து ஒரு குண்டுகூட வெளியேறாது! ரவி விஜயகுணரத்ன!


Thursday04October2012.By.Rajah. தமிழகமீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை. எனது தனிப்பட்ட தலையீடு, உத்தரவின்றி இலங்கை கடற்படை வீரரின் துப்பாக்கியில் இருந்து ஒரு குண்டுகூட வெளியேற வாய்ப்பில்லை என வடக்கு பிராந்திய இலங்கைக் கடற்படைத் தளபதி ரவி விஜயகுணரத்ன கூறியுள்ளார்.
போர் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட காங்கேசன்துறை துறைமுகத்தின் கட்டமைப்பு வசதிகள் இந்திய அரசு உதவியுடன் புனரமைக்கப்படும் பணிகளை இந்திய ஊடகவியலாளர்கள் நேற்று நேரில் பார்வையிட்டனர்.
ஊடகவியலாளர்களிடம் வடக்கு பிராந்திய இலங்கைக் கடற்படைத் தளபதி ரவி விஜயகுணரத்ன தெரிவித்தவை யாதெனில்:
காங்கேசன்துறையில் ஆறு கட்டங்களாக புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உள்நாட்டுச் சண்டைக்கு முன்பு, இப்பகுதி விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தது.
இங்குள்ள கடல் பகுதியில் சுமார் 10 கப்பல்கள் தற்கொலைப் படையினரால் மூழ்கடிக்கப்பட்டன. கடலுக்குள் புதைந்த அவற்றின் இடிபாடுகளை அகற்ற ஆறு கட்ட திட்டத்தை இந்திய அரசு உதவியுடன் இலங்கை அரசு செயல்படுத்தி வருகிறது.
அதில், முதல் மூன்று கட்டங்களாக, கடலுக்குள் சிக்கிய கப்பலின் இடிபாடுகள் உள்ளிட்டவை வெளியே எடுக்கப்பட்டன. இப்போது மீதமுள்ள மூன்று கட்ட நடவடிக்கைகளில், கடலில் கப்பல்கள் வந்து செல்ல வசதியாக, அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்திய அகழ்வாய்வு நிறுவனம் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
இப்போது இந்தியாவின் காரைக்காலில் இருந்து வரும் சரக்குக் கப்பல்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு வெளியே மயிலாடி என்ற சிறிய துறைமுகத்தின் ஆழமான கடல் பகுதியில் நிறுத்தப்படுகின்றன.
அங்கிருந்து சிறு கப்பல்கள் மூலம் சரக்குகள் காங்கேசன்துறை வழியாக வடக்கு மாகாணங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இந்தியாவில் சேது கால்வாய்த் திட்டம் நிறைவேறுவதை எங்கள் நாடு மிகவும் விரும்புகிறது. அத்திட்டம் செயல்வடிவம் பெற்றால் இலங்கை-இந்தியா இடையேயான வர்த்தகம் பன்மடங்கு உயரும். இந்தத் திட்டத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை. மேலும் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கை வலுப்படுத்தப்படும். நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து ஊடுருவ முயலும் நடவடிக்கைகளும் ஒடுக்கப்படும்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்துவதாகத் தமிழகத்தில் பரவலாக பேசப்படுவதை நாங்கள் அறிகிறோம். ஆனால், அதில் உண்மை இல்லை. பொதுவாக, தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்களது பகுதியில் இருந்து பகலில் புறப்பட்டு நடுக்கடலில் தங்குகின்றனர். நள்ளிரவில் அவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி காங்கேசன்துறை, கச்சத்தீவு அருகே வருகின்றனர்.
டிராய்லர் கப்பல்கள் மூலம் அவர்கள் இலங்கைக் கடல் பகுதியில் உள்ள மீன் வளத்தைச் சுரண்டுகின்றனர். மீண்டும் அதிகாலை வருவதற்குள் இந்திய கடல் எல்லைக்குள் சென்று விடுகின்றனர்.
இலங்கைப் போரின்போது, இவ்வாறு தமிழத்தைச் சேர்ந்த மீனவர்கள் வாடிக்கையாக செயல்பட்டனர். இப்போது வடக்குப் பகுதியில் அமைதி திரும்பியுள்ளது. மீள் குடியேற்றப்பட்ட இலங்கை மீனவர்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாரம்பரிய மீன்பிடித் தொழிலைத் தொடங்கியுள்ளனர்.
இதனால் தங்களது வாழ்வாதாரத்துக்கு உரிய மீன் வளத்தைத் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் எடுத்துச் செல்வதை இலங்கை மீனவர்கள் எதிர்க்கின்றனர். அதனால் அவர்களுக்குள்ளாகவே சில நேரங்களில் பிரச்னை ஏற்படுகிறது. இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் பரஸ்பரம் பேசி சமரசத்துக்கு வர வேண்டும்.
இந்திய, இலங்கை மீனவர்களிடையே நீடித்து வரும் மீன்பிடிப் பிரச்சினைக்கு இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளே காரணம் என்று இலங்கை கடற்படை குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் தமிழக அரசியல் தலைவர்கள் மீன்வள நிறுவனங்களை நடத்தி வருவதாக அறிகிறோம். அவர்கள் அதிக மீன் வழங்கும் மீனவர்களுக்கு அதற்குத் தக்கபடி கூலி கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.
அதிக மீன் தேவையைக் கருதி, அப்பாவித் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடிக்க முயல்வதாக அறிகிறோம்.
அதனால் ஒட்டுமொத்தமாக நாங்கள் தமிழக மீனவர்களைக் குற்றம் கூற விரும்பவில்லை.
இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை.
எனது தனிப்பட்ட தலையீடு, உத்தரவின்றி இலங்கை கடற்படை வீரரின் துப்பாக்கியில் இருந்து ஒரு குண்டுகூட வெளியேற வாய்ப்பில்லை.
அந்த அளவுக்கு எங்களுக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா மீதும், இந்திய பாதுகாப்பு அமைப்புகள் மீதும் எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது.
இலங்கைக் கடற்படையில் பணியாற்றும் நான் உள்பட முக்கிய அதிகாரிகள் இந்திய ராணுவக் கல்லூரியில் பயிற்சி பெற்றவர்கள். எங்களுக்கு இந்தியர்கள் வழிகாட்டி போன்றவர்கள் என்றார் ரவி விஜயகுணரத்னே