siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 24 செப்டம்பர், 2012

சாட்டை - சடுதியில் தவறவிட்ட அடி ...

 




24.09.2012.By.Rajah.பிரபல இயக்குனர்கள் மற்ற இயக்குனர்களை வைத்து தயாரிக்கும் படங்கள் தரமானவையாக இருக்கும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் " சாட்டை " ... அதற்காக இப்படத்தை காதல் , பசங்க வரிசையில் சேர்த்து விட முடியாது , ஆனால் முதல் படத்திலேயே ஒரு கருத்தாழம் மிக்க கதையை சொல்ல முற்பட்டதற்காக அறிமுக இயக்குனர் அன்பழகனை பாராட்டலாம் ...
நம்மவர் ஸ்டைல் கதை , இப்படத்தில் கல்லூரிக்கு பதில் அரசு மேல்நிலை பள்ளி , மாணவர்களுக்கு பதில் உடன் பணிபுரியும் சக ஆசிரியர்களையும் சேர்த்து ஒரு ஆசிரியர் திருத்துவது மட்டும் மாறுதல் ...

திருவண்ணாமலையில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு மாற்றலாகி வருகிறார் தயாளன் ( சமுத்திரக்கனி ) , அங்கோ ஏ.ஹெச்.எம் சிங்கம்பெருமாள் ( தம்பி ராமையா ) தலைமையில் அனைத்து ஆசிரியர்களும் சும்மா சம்பளம் வாங்கிக் கொண்டு படிப்பு உட்பட அனைத்திலும் பள்ளியை பின்தங்கிய நிலையிலேயே வைத்திருக்கிறார்கள் , இதை தட்டிக் கேட்க முடியாத நிலைமையில் இருக்கிறார் ஹெச்.எம் ஜூனியர் பாலையா ( இதற்கு தேவையான விளக்கம் எதுவும் படத்தில் இல்லை ) ... தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளியை சமுத்திரக்கனி எப்படி மாற்றிக்காட்டுகிறார் என்பதை மாணவர் பழனி
( யுவன்) , மாணவி அறிவழகி ( மகிமா ) இவர்கள் இடையேயான காதல் , தம்பி ராமையாவின் வில்லத்தனம் , மாணவன் பாண்டியின் காமெடி மற்றும் பாசிடிவ் சாங் உட்பட பல சினிமாத்தனங்களை கயிறாக திரித்து சாட்டையை கொடுத்திருக்கிறார்கள் ...


சமுத்திரக்கனி தயாளனாகவே நம் மனதில் பதிகிறார் ... முக பாவங்கள் குறைவெனினும் அதை தன் குரலால் சமன் செய்கிறார் ... இவர் தன்னம்பிக்கை வசனங்கள் பேசும் போது தியேட்டரில் கைதட்டல்கள் கிடைத்தாலும் படம் நெடுக அதையே செய்வதால் போரடிக்கறது ... ஒரு விதமான ஹீரோயிஸத்துக்குள் இவர் கேரக்டரை புகுத்தாமல் தவிர்த்திருந்தால் இன்னும் அழுத்தமாகவே நம் மனதில் பதிந்திருப்பார் ...

இவருக்கு நிகரான கதாபாத்திரம் தம்பிராமையாவினுடையது ... மனிதர் வெளுத்து வாங்கியிருக்கிறார் ... தன்னிடம் கடன் வாங்கி விட்டு வட்டி தராத ஆசிரியர்களை கலாய்ப்பது , ஆசிரியர்கள் மீட்டிங்கில் சமுத்திரக்கனியை மடக்குவது என்று ரசிகர்களை சிரிக்க வைத்தாலும் போக போக ஓவர் ஆக்டிங் செய்து நிறையவே வெறுப்புமேற்றுகிறார் ... காமெடி அல்லது குணச்சித்திரமான கேரக்டராக இவரை வடிவமைக்காமல் சமுத்திரக்கனியை கொலை செய்யப் போகும் அளவிற்கு பக்கா வில்லனாக மாற்றியது சாட்டையின் சறுக்கல் ...

+2 மாணவன் பழனியாக வரும் யுவனின் முகம் குழந்தைத்தனமாகவும் , தாடி , மீசை மற்றும் அவர் கண்களில் காட்டும் கோபம் இவைகளெல்லாம் ஓட்ட வைத்தது போல ரொம்ப செயற்கையாகவும் இருக்கின்றன ... புதுமுகம் மகிமா அழகாக மட்டுமல்லாமல் நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார் ... படிப்புக்காக இவர் மன்றாடும் காட்சிகள் அருமை ... கடைசியில் வழக்கம் போல இவரும் காதல் வயப்படுவது போல காட்டாமல் இருந்திருந்தால் இவர் கேரக்டருக்கு இன்னும் மெருகேறியிருக்கும் ...


ப்ளாக் பாண்டி , ஜூனியர் பாலையா , குட்லக் லக்ஷ்மன் ,சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்திருப்பவர் இப்படி படத்தில் நிறைய பேர் பொருத்தமாகவே நடித்திருக்கிறார்கள் ... இமானின் இசையில் பழைய நெடி இருந்தாலும் பாடல்கள் யுவபாரதியின் வரிகளோடு சேர்ந்து கேட்பதற்கு இனிமையாக இருக்கின்றன ...

பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளும் அரசு பள்ளி ஆசிரியர்களின் நிலை , மாணவர்களிடையே நண்பன் போல பழகி அவர்களின் குறைகளை கலையாமல் அதை ஊதி பெரிதாக்கும் அவர்களுடைய போக்கு , தற்போதைய முன்னேற்றங்களுக்கு ஏற்றபடி தங்களை மேம்படுத்திக்கொள்ளாத பள்ளி நிர்வாகம் போன்றவற்றை சாட்டை கொண்டு விளாசியிருக்கிறார் இயக்குனர்... அதேநேரம் அரசு கெடுபிடிகளால் மாணர்வகளை சமாளிக்க முடியாமல் திணறும் அரசு பள்ளி ஆசிரியர்களின் நிலையையும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம் ...

படம் நன்றாக ஆரம்பித்து பிறகு சமுத்திரக்கனி மேல் காமுகன் பழி விழுந்து அவரை மக்கள் அடித்து துரத்துவது , ஒரு போட்டியில் கூட கலந்து கொண்டிராத ஒரு பள்ளி மாவட்ட அளவிலான சேம்பியன் பட்டம் வெல்வது , சாகக்கிடக்கும் சமுதிரக்கனிக்காக மாணவர்கள் பாடுவது , அவர் மனைவி பாசிட்டிவாக பேசுவது , மிகைப்படுத்தப்பட்ட தம்பி ராமையா கேரக்டர் இவைகளெல்லாம படத்தை சாட்டை கொண்டு அடிக்கின்றன ... நாடக , சினிமாத்தனங்களை தவிர்த்து ஒரு நேர்மையான நிகழ்வாக படத்தை இயக்குனர் பதிவு செய்திருந்தால் நிச்சயம் எழுந்து நின்று சல்யூட் அடித்திருக்கலாம்