siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 24 செப்டம்பர், 2012

பாக்கிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்ப்பது ஈழத் தமிழர்களா ?

24.09.2012.ByRajah.கடந்த திங்கட்கிழமை திருச்சியில் வைத்து கைதான அன்சாரி என்னும் நபரிடம் இருந்து, இந்திய இராணுவ ரகசியங்கள் இருந்த செய்தி பற்றி அறிந்திருப்பீர்கள். அடிக்கடி கொழும்பு சென்றுவரும் அன்சாரி, இந்தியாவில் விசாகபட்டினத்தில் உள்ள அணு நீர்மூழ்கி கப்பல் தளம், ஊட்டியில் உள்ள இராணுவத்தளம், மற்றும் இந்தியாவின் அணு சக்தி குறித்தும் பல தகவல்களை படு சிம்பிளாகத் திரட்டியுள்ளார். இந்தியாவின் இராணுவ ரகசியங்கள் அன்சாரி போன்ற சதாரண நபர்களால் திரட்டப்படக்கூடிய வகையிலா அமைந்துள்ளது என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, இச் சந்தர்பத்தை பயன்படுத்தி இலங்கை அரசு, ஈழத் தமிழர்களையும் இதில் கோர்த்து விட்டுள்ளது. அதாவது இலங்கையில் உள்ள பாக்கிஸ்தான் தூதர் இந்தியாவை உளவுபார்க்கிறார் என்ற செய்தியை தமிழ் ஊடகங்களே பெரிதும் வெளியிட்டன. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத இலங்கை அரசு தற்போது ஈழத் தமிழர்களை குறிவைத்து தாக்கியுள்ளது.

அதாவது இலங்கை, இந்தியாவை உளவுபார்க்கும் ஒரு களமாக மாறியுள்ளது என்ற, உண்மை நிலையை மறைக்க.... இலங்கை முயற்சிக்கிறது. இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் ஈழத் தமிழர்களை கொழும்பில் உள்ள பாக்கிஸ்தான் தூதரக அதிகாரிகள் சந்திப்பதாகவும், அவர்களில் சிலருக்கு பணம் கொடுத்து அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்புவதாகவும் கொழும்பில் இருந்து வெளியாகும் அரசு சார் பத்திரிகை ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. இதனை அப்படியே காப்பியடித்து செய்திவெளியிட்டுள்ளது ரைம்ஸ் ஒப் இந்தியா. இதனால் இந்தியாவில் தற்சமயம் தங்கியுள்ள ஈழ அகதிகளும், மற்றும் இந்தியா- இலங்கைக்கு அடிக்கடி சென்றுவரும் வியாபாரிகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகவுள்ளனர். ரைம்ஸ்-ஒப்- இந்தியாவின் இச்செய்தியானது, இந்திய உளவுத்துறையை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்பி விடும் ஒரு நடவடிக்கையாக அமைந்துள்ளது.

கொழும்பில் இருக்கும் சிங்கள அரசியல்வாதிகளும், சிங்கள புத்திஜீவிகளும் நன்கு திட்டமிட்டு இப்பரப்புரையை இலங்கையில் மேற்கொண்டுள்ளனர். இதனை ஏதாவது ஒரு இந்திய ஊடகம் செய்தியாகப் போடாதா என்று அவர்கள் எதிர்பார்த்தவேளை, இதனை ரைம்ஸ் ஒப் இந்தியா வெளியிட்டுள்ளது சிங்களவர்களுக்கு குதூகலம் தரும் செய்தியாக அமைந்துள்ளது. பல வருடங்கள் ஊடகத்துறையில் அனுபவமிக்க ரைம்ஸ் ஒப் இந்தியா போன்ற ஊடகங்கள், ஆதாரம் இல்லாத இதுபோன்ற செய்திகளை அதுவும் சிங்களப் ஊடகம் வெளியிட்ட செய்தியை எவ்வாறு பிரசுரிக்கிறார்கள் ? இச் செய்தி தொடர்பாக இந்திய மத்திய அரசும், கியூப் பிரிவு பொலிசாரும் விழிப்புடன் இருப்பது நல்லது. இலங்கை அரசின் மற்றுமொரு திட்டமிட்ட நடவடிக்கை இதுவாகும் என்பதனை இவர்கள் விளங்கிக்கொள்ளவேண்டும்