siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 17 நவம்பர், 2012

65,000 பேருக்கு மனநலம் பாதிப்பு; சுகாதார அமைச்சு அதிர்ச்சித் தகவல்

 
By.Rajah.வடக்கு கிழக்கில் 30 வருடங்களாகத் தொடர்ந்த போர் காரணமாக 65 ஆயிரம் பேர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவலை சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
இவர்களுள் 62 ஆயிரத்து 674 பேர் ஏற்கெனவே சிகிச்சை பெற்றுள்ளனர், 2 ஆயிரத்து 556 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்று பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது பிரதி அமைச்சர் இந்தத் தகவலைத் தெரிவித்தார். யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
போர் நடவடிக்கைகளின்போது வட மாகாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? இவர்களுக்கு எங்கே சிகிச்சை அளிக்கப்படுகின்றது? இவர்களையும் விசேட தேவையுடையவர்களாகக் கருதி நிவாரணங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா என விநாயகமூர்த்தி கேள்வி எழுப்பினார்.
"யாழ். போதனா வைத்தியசாலையில் 1,271 பேரும், மன்னார் வைத்தியசாலையில் 407 பேரும், வவுனியாவில் 878 பேரும் உள்நோயாளர்களாக சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
""ஏற்கனவே, யாழ். போதனா வைத்தியசாலையில் 25 ஆயிரத்து 976 பேரும், ஏனைய பிரதேச வைத்தியசாலைகளில் 18 ஆயிரத்து 361 பேரும், மன்னாரில் 4 ஆயிரத்து 981 பேரும், வவுனியாவில் 9 ஆயிரத்து 355 பேரும், கிளிநொச்சியில் 2 ஆயிரத்து 514 பேரும், முல்லைத்தீவில் ஆயிரத்து 287 பேரும் என 62 ஆயிரத்து 474 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு அரச மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுவருகின்றது'' என்றார்

0 comments:

கருத்துரையிடுக