siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

தாகித்தவரை தேடுகிற தண்ணீர் - ஆரூர் புதியவன்

0909.2012.BY.Rajah.
னது முதலும் கடைசியுமான ஒரு திருட்டைப் பற்றி தமிழின் மிக மூத்த படைப்பாளி அந்த உயர்ந்தோர் சபையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

பார்வையாளர் வரிசையில் கவிப்பேரரசு வைரமுத்து, கவிவேந்தர் மு. மேத்தா, சந்திராயன் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை,
பேரா. எம்.எப்.கான், முன்னாள் ஆட்சிப்பணி அதிகாரிகள் மற்றும் பிரபலங்கள். சென்னை சோழா ஷெரட்டன் விடுதியில் முத்துப்பேட்டை முஹம்மது முஸ்தபா ஏற்பாடு செய்திருந்த அந்த விழாவிற்கு கவிஞர் சிற்பி. பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

இலங்கையில் நிகழ்ச்சிக்கு அழைத்துத் தங்க வைத்தவர் வீட்டில். தான் நெடுங்காலமாக காதலியைத் தேடுவதுபோல தேடிக்கொண்டிருந்த அந்த நூல் இருந்ததையும், அதை நைஸாக எடுத்துக்கொண்டு வந்ததையும் கவிஞர்களின் கவிஞராய்ப் போற்றப் படும் கவிக்கோ அப்துல்ரகுமான் வெட்கப்படாமல் வெளிப்படுத்தினார்.

"கவிக்கோ போன்றவர்களையே திருட வைக்கும் ஆற்றல் அந்தப் புத்தகத்திற்கு இருந்திருக்கிறது' என்று வைரமுத்து புகழ்ந்தார்.

அந்த நூல்தான், ஜலாலுத்தீன் ரூமி எழுதிய "மஸ்னவீ.'

கிறக்கத்தைப் பரிசளிக்கும் கிரேக்கத்தில், ஹோமர் வடித்த "இலியட்,' "ஒடிஸி'யைப்போல, இதயத்தைக் கடன் கேட்கும் இத்தாலிய மொழியில் "தாந்தே' தந்த தெய்வீக நாடகம்போல, உயர்வான ஆங்கிலத்தில் ஒளி சிந்தும் ஜான்மில்டனின் "இழந்த சொர்க்கம்' போல, கற்பாரைக் கவர்ந்திழுக்கும் கம்பனின் இராமாயணம்போல உலக மகா காவியங்கள் வரிசை யில் அளவாலும் அழகாலும் உயர்ந்து நிற்கிறது

ஜலாலுத்தீன் ரூமி எழுதிய "மஸ்னவீ'. ஆறு பாகங் களைக் கொண்ட இந்நூலில் 22 ஆயிரம் பாடல்கள் உள்ளன என்றும், 25,700 பாடல்கள் உள்ளன என்றும் இரு கருத்துகள் உள்ளன. பாரசீக மொழியில் "மஸ்னவீ'க்கு நூற்றுக்கணக்கான உரைகள் எழுதப்பட்டுள்ளன. அரபி, உருது உள்ளிட்ட மொழிகளிலும் "மஸ்னவீ' மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

கவிதை வடிவில், ஆயிரக்கணக்கான கதைகளை விதைகளைப்போல தன் காவியத்தில் புதைத்து வைத்துள்ளார் ரூமி. ஆல விதை போன்ற சிறிய அவ்விதைகள், ஆழமாய் வாசிப்போர் மனதில் வேர் பாய்ச்சி, விழுதுகளை இறக்கி அதிசயம் புரிகின்றன.

சமயம் கடந்த ஞானப் பறவைகளின் சரணால யமாய்த் திகழும் "மஸ்னவீ', மரபு வழி நூல்களிலிருந்து மாறுபட்ட நூலாக மலர்ந்தது. உன்னதக் காவியம் ஒன்றைப் படைக்க வேண்டுமென்ற பேராவலோடும், தொலைநோக்குத் திட்டமிடலோடும் "மஸ்னவீ'யை ரூமி எழுதவில்லை. ஆங்கில அழகியல் கவிஞன் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின், "கவிதை என்பது வலிமைமிகு உணர்வுகளின் தன்னிச்சையான வெளிப்பாடு' என்ற கூற்றுக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறது மஸ்னவீ.

"மஸ்னவீ'யின் தொடக்கம்கூட வியப்புக்குரியது தான். ரூமியின் மாணவர் ஹுஸாமுதீன், பாரசீகத்தின் மகா காவியங்களாகத் திகழ்ந்த ஹக்கீம் ஸனாயி இயற்றிய "ஹதீகா' மற்றும் "மன்திகுத் தய்ர்' (பறவைகளின் மாநாடு), "அஸ்ரார் நாமா' (ரகசியங்களின் நூல்) ஆகிய நூல்களைப்போல, ஒரு காவிய நூலை நீங்களும் இயற்ற வேண்டும் என்று ரூமியிடம் கோருகிறார்.

மாணவர் ஹுஸாமுதீன் கேட்டவுடன், ரூமி தனது தலைப்பாகைக்குள் இருந்து ஒரு துண்டுக் காகிதத்தை எடுக்கிறார். அதில் 18 பாடல்கள் எழுதப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்து "மஸ்னவீ' மலரத் தொடங்கியது.

ஏரிக்குப் பின்னால் நடந்து வரும் கடல்!

கி.பி. 1207-ஆம் ஆண்டு செப்டம்பர் 30 அன்று துருக்கியிலுள்ள பல்க் என்ற ஊரில் ரூமி பிறந்தார். அவரது தந்தை பஹாவுதீனும் ஒரு கவிஞர். ஞானியாகவும் அறியப்பட்டவர். துருக்கியின் அனதோலியா பகுதியில் உள்ள "ரூம்' என்ற ஊர்தான் இவர்களின் பூர்வீகம். ரூமி என்றால் ரூம்வாசி என்றே பொருள்.

ரூமியின் தந்தை பஹாவுதீன் தன் உள்ளுணர்வுத் தூண்டலால் பல்க்கிலிருந்து துருக்கியின் ஒரு பகுதியான கென்யாவுக்குப் புலம்பெயர்கிறார். மறு ஆண்டில் மங்கோலியப் படையெடுப் பால் "பல்க்' நகரம் முழுவதும் அழிக்கப்படுகிறது.

பல்க்கிலிருந்து புலம்பெயர்ந்து பல பகுதிகள் வழியாக பஹாவுதீன் குடும்பத்தோடு சென்று கொண்டிருந்தபோதுதான் மத்திய ஈரானில் உள்ள நிஷாபூரில் (உமர்கய்யாமின் சொந்த ஊர்) கவிஞானி பரீதுத்தீன் அத்தாரை சந்திக்கிறார்கள்.

ரூமி சிறுவனாக இருந்தபோது இப்னு அரபி என்ற அறிஞரையும் சந்தித்துள்ளனர். இவரது "வஹ்தத்துல் உஜீத்' (அத்வைதம்) என்ற கோட்பாடு கலீல் ஜிப்ரானைக் கவர்ந்திழுத்தது குறிப்பிடத்தக்கது. இப்னு அரபியை மிகக் கடுமையாகக் கண்டனம் செய்யும் அறிஞர்களும் உண்டு.
"மனதிகுத் தய்ர்', "அஸ்ரார் நாமா' ஆகிய காவியங் களை இயற்றிய கவிஞானி ஃப்ரீதுத்தீன் அத்தார், பத்து வயது ஞான பாலகனான ரூமியைப் பார்த்து, "இந்தச் சிறுவன் இறையன்பு கொண்ட பல இதயங் களில் ஒளியேற்றப்போகிறான்' என்று வாழ்த்தியதோடு, தனது "ரகசியங்களின் நூல்' என்ற படைப்பைப் பரிசாக வழங்கிப் பாராட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தையின் பின்னால் நடந்து வந்த ரூமியைப் பார்த்த இப்னு அரபி, "எல்லாப் புகழும் இறைவனுக்கே! என்னே அதிசயம்... ஓர் ஏரிக்குப் பின்னால் கடல் ஒன்று நடந்து வருகிறதே' என்றாராம். முளை யிலேயே அறியப்பட்ட விளையும் பயிராக ரூமி விளங்கியுள்ளார்.

ரூமியின் தந்தையான பஹாவுதீனின் அறிவை வியந்த கொன்யாவின் அரசர், அவருக்காக ஒரு கல்லூரியை நிறுவி, அவரை முதல்வராக நியமனம் செய்துள்ளார். இரண்டாண்டுகளில் தந்தை இறந்து விட அக்கல்லூரியின் முதல்வராக இது பொறுப் பேற்கிறார். அப்போது அவருக்கு வயது 24.
மாணவத் துகள்களை காந்தமாய் ஈர்த்து காந்தமாகவே மாற்றும் ஆசிரிய காந்தமாக ரூமி திகழ்ந்தார். ரூமியின் புதல்வர் சுல்தான் வலத். தனது "ரகசியச் சொல்' என்ற நூலில் 1224-ஆம் ஆண்டு வாக்கில் ரூமியின் அன்பர்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமாய் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

"தாகமுள்ளவர்களைத் தண்ணீரும் தேடிக் கொண்டிருக்கிறது' என்று எழுதிய ரூமி, தன்னை பரிபூரணமாய் பக்குவப்படுத்தும் ஒரு வழிகாட்டியை தாகத்துடன் தேடிக்கொண்டிருந்தார்.

ஷம்ஸ் என்னை சமைத்தார்!

தாகித்த ஆன்மா, மோகித்துத் தேடிய தவ ஞானியாக 1244-ஆம் ஆண்டின் இறுதியில் ரூமியைச் சந்தித்தார் ஷம்ஸ் தப்ரேஸ்.

ஷம்ஸ் தப்ரேஸின் நட்பு ரூமியைப் புதிய வடிவில் வார்த்தெடுத்தது.

"நான் சமைக்கப்படாமல் இருந்தேன். ஷம்ஸ் என்னை சமைத்தார். பிறகு என் பழைய நான் சாம்பலாகிவிட்டேன்' என்று எழுதுகிறார் ரூமி. ஷம்ஸ் தப்ரேஸுடன் ரூமி கொண்டிருந்த அதீதாத் வைத உறவு, ரூமியின் சில மாணவர்களுக்கு சினத் தைத் தூண்டியது. சிலர் தப்ரேசை வரம்பு மீறி ஏசிவிட, தற்காலிகமாகத் தலைமறைவானார் தப்ரேஸ்.

கொன்யாவிலிருந்து டமாஸ்கஸுக்கு ஏகியிருந்த தப்ரேசை சிலர் மீண்டும் அழைத்து வந்தார்கள். பொறாமை மீண்டும் புகைந்தது.

1244 டிசம்பர் இரவு ரூமி திருக்குர்ரானின் "சூரியனும் சந்திரனும் தங்களுக்கென விதிக்கப்பட்ட தனித்தனிப் பாதையில் நீந்துகின்றன' என்ற வசனத் தைப் படித்துக் கொண்டிருந்தபோது, அறைக்கதவு தட்டப்படும் ஓசை. தப்ரேஸ் கதவைத் திறந்தார். யாரும் வரவில்லை. தப்ரேஸும் திரும்பி வரவில்லை. சதி செய்து அவரைக் கொன்றுவிட்டார்கள் என்ற கூற்றும் உள்ளது.

துயரமான திருமண இரவு

தப்ரேசின் பிரிவென்னும் பெரும் சோகம், ரூமியின் கண்களில் கண்ணீர் வெள்ளமாக மாறாமல், அவரது உள்ளத்தில் கவிதை வெள்ளமாக மாறியது.

சோகக் கடலில் மூழ்கிய ரூமி, சுடர்வீசும் ஆன்மிக முத்துக்களை அள்ளி வந்தார்.

"காதலியைத் தேடிப்போன காதலன் காதலியாகவே மாறி, இறுதியில் காதலாகவே மாறியதுபோல ஆனது ரூமியின் நிலை' -என்று குறிப்பிடுகிறார் கவிஞரும் பேராசிரியருமான நாகூர் ரூமி.

ஷம்ஸ் தப்ரேசின் பிரிவு குறித்து ரூமி பாடிய பாடல்கள் 2,500 அடிகளில் "திவானே -ஷம்ஸே', "தப்ரேஸ்' என்ற தொகுப்பாக உள்ளது.

ரூமி உயிர் பிரியும் தருவாயில் தன்னைப் பார்க்க வந்த நண்பரிடம் கூறிய கவிதையில்.
..

"ஆன்மப் புறாக்களுக்காக
நான் ஒரு கூடு கட்டினேன்
என் ஆன்மப் பறவையே...
நீ பறந்துவிடு இப்போது
கூடு என்ன...
ஆயிரம் உறுதியான
கோட்டைகள் உண்டு
என்னிடம் இப்போது...'

என்று முடிக்கிறார்.

கி.பி. 1273, டிசம்பர்-17 அன்று கொன்யாவில்

ஜலாலுதீன் ரூமி மறைந்தார்.

அவர் மறைந்த இரவை ரூமியின் திருமண இரவு (ஷபே-அரூஸ்) என்று அவரது ஆன்மிக மாணவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆம்... அது துயரமான திருமண இரவுதான்