siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

மூன்று மாகாணசபைகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி: சப்ரகமுவவில் இரு தமிழ்ப் பிரதிநிதித்துவங்கள்


09.09.2012.BY.Rajsah.

கிழக்கு, வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் தற்போது உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளன. இம்முடிவுகளின் படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3 மாகாணங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.

நேற்று நடைபெற்று முடிந்த தேர்தலின் முடிவுகள் இன்று அதிகாலை வரை வெளியிடப்பட்டது. இம்முடிவுகளின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களை வென்று 3 மாகாணங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.

தமிழர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சப்ரகமுவவில் இம்முறை இரு தமிழ்ப் பிரதிநிதித்துவங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 2 இலட்சத்து 44 வாக்குகளைப் பெற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 14 ஆசனங்களை வென்றுள்ளது.

ஒரு இலட்சத்து 93ஆயிரத்து 827 வாக்குகளைப் பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி 11 ஆசனங்களைத் தன்வசப்படுத்தியுள்ளதுடன் ஒரு இலட்சத்து 32ஆயிரத்து 917 வாக்குகளைப் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களை மட்டுமே பெற்றுக்கொண்டுள்ளது.

இதைத்தவிர 74 ஆயிரத்து 901 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிழக்கு மாகாண சபையில் 4 ஆசனங்கள் கிடைத்துள்ளதுடன் தேசிய சுதந்திர முன்னணி ஒன்பதாயிரத்து 521 வாக்குகளுடன் ஓர் ஆசனத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

இதேவேளை வட மத்திய மாகாண சபையில் அநுராதபுரம் மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக மூன்று இலட்சத்து 38 ஆயிரத்து 552 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 2 போனஸ் ஆசனங்கள் உட்பட 21 ஆசனங்களைத் தனதாக்கியுள்ளது.

இதில் அநுராதபுரம் மாவட்டத்தில் 234387 வாக்குகளையும், பொலனறுவை மாவட்டத்தில் 104165 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்றுக்கொண்டுள்ளது.

இம்மாகாணத்தில் ஒரு இலட்சத்து 96ஆயிரத்து 127 வாக்குகளைப் பெற்று ஐக்கிய தேசியக் கட்சி 11 ஆசனங்களையும் 16ஆயிரத்து 66 வாக்குகளைப் பெற்றுக்கொண்ட மக்கள் விடுதலை முன்னணி ஓர் ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.

இதன்படி வடமத்திய மாகாண சபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது.

சப்ரகமுவ மாகாண சபையில் 4 இலட்சத்து 88 ஆயிரத்து 714 வாக்குகளைப் பெற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 28 ஆசனங்களை வென்றுள்ளது.

இங்கு ஐக்கிய தேசியக் கட்சி 2 இலட்சத்து 86 ஆயிரத்து 857 வாக்குகளைப் பெற்று 14 ஆசனங்களைத் தனதாக்கியுள்ளதுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 25 ஆயிரத்து 985 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

சப்ரகமுவவில் இம்முறை இரு தமிழ்ப் பிரதிநிதித்துவங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து சேவல் சின்னத்தில் களமிறங்கியமை குறிப்பிடத்தக்கது