siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 20 செப்டம்பர், 2012

தமிழர்களின் மாகாணத்தில் சிங்கள கூட்டமைப்பின் விருப்பத்தின்படி ஆட்சியொன்று அமைகின்றது

 
 
20.09.20.12.By.Rajah.இலங்கையின் கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்களுடைய மாகாணம் என்றே கணிக்கப்பட்டு வந்துள்ளது. அங்கு தமிழர்களும் முஸ்லிம்களும் கலந்த வாழும் கிராமங்களும் பெருமளவில் உண்டு. தமிழர்களும் முஸ்லிம்களும் “பிட்டும் தேங்காய்ப் பூவும்” போல வாழ்கின்றார்கள் என்றும் இலக்கிய நயம் கொண்ட பார்வையில் நோக்கப்படுகின்றார்கள்.
திருகோணமலை தொடக்கம் அம்பாறை வரை உள்ள வளி மண்டலத்தில் உள்ள காற்றில் தமிழின் அளவே எப்போதும் அலை மோதிக்கொண்டிருக்கும். இவ்வாறு பல தகவல்களை இங்கே நாம் குறிப்பிடலாம்.
மேலும் கிழக்கு மாகாணத்தில் மீன்பிடித் தொழிலிலோ அன்றி நெல் வேளாண்மை செய்யும் தொழிலிலோ, சிங்களவர்களை விட தமிழர்களும் முஸ்லிம்களுமே பெருமளவில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இதன் மூலம் நாம் அறியக்கூடியது என்னவென்றால் கிழக்கு மாகாணம் பொருளாதாரத் துறையிலும் உணவு சார்ந்த விடயத்திலும் தன்னிறைவு அடைவதற்கு அங்கு தமிழர்களும் முஸ்லிம்களுமே அதிகளவில் காரணமாக இருக்கின்றார்கள் என்பதே ஆகும்.
இவ்வாறாக தமிழின் சிறப்புக்களை பறைசாற்றும் கிழக்கு மாகாணத்தின் மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டு பின்னர் அதன் அரசாங்கத்தை யார்? அமைப்பது என்றும் அந்த மாகாணத்தின் முதலமைச்சர் யார்? என்று எதிர்பார்த்து உலகமே காத்திருந்தது.
நாம் முன்னர் குறிப்பிட்டது போல, தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரசும் சேர்ந்து பெற்ற ஆசனங்கள் மகிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்ற ஆசனங்கள் அதிகமானவை.
இவ்வாறிருக்கையில் அங்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கையின் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவின் விருப்பத்திற்கு அமைய ஒரு தமிழ் பேசும் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராகியுள்ளார்.
இந்த முடிவுகளின் படி கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பேசும் மக்களும் குறிப்பான தமிழத் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்த தமிழ் மக்களும் முஸ்லிம் காங்கிரசுக்கு தங்கள் வாக்குகளை அளித்த முஸ்லிம் மக்களும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.
ஏமாற்றப்பட்டவர்கள் கிழக்கு மாகாணத்தின் தமிழ் முஸ்லிம் மக்களாக இருக்கையில் ஏமாற்றியவர் யார்? என்ற கேள்வி யாருக்கும் எழலாம். அதற்குரிய பதிலை நாம் இந்தப் பக்கத்தில் கூறத்தேவையில்லை.
மாகாணத்தின் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளவரின் விடயம் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு இரா. சம்பந்தன் அவர்கள் நேற்று தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் கிழக்கு மாகாண மக்களை ஏமாற்றியவரை நாம் ஊகித்துக்கொள்ள முடியும்.
இங்கே கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் மக்களும் அரசாங்கத்தாலும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீமினாலும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்றே நாம் கருதுகின்றோம்.
ஆமாம் அன்பர்களே! கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியானதும், அரசாங்கம் தனது வேட்பாளர்கள் பற்றிய அறிவிப்புச் செய்தது.
அதேபோல முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் அமைச்சர் றவூப் ஹக்கீமும் தனது வேட்பாளர்களை நியமிக்க போவதாகவும் அறிவித்து தேர்தலுக்கு பின்னர் அரசாங்கத்தோடு சேர்ந்து ஆட்சி அமைக்கப் போவதாக கூறவேயில்லை.
அரசாங்கத்தை பற்றிய கவலை தமக்கு இல்லை என்ற தொனியில்தான் தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றினார். சில கூட்டங்களில் உரையாற்றும் போது அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கண்டித்தும் உரையாற்றினார்கள்.
இதை அவதானித்த முஸ்லிம் மக்கள் ஆயிரக்கணக்கானவர்கள், தேர்தலுக்குப் பின்னர் ஹக்கீம் தனது உறுப்பினர்களோடு தமிழ்த் தேசிய கூட்டமைப்போடுதான் சேர்ந்து கூட்டு அரசாங்கத்தை அமைப்பார், அரசாங்கத்தோடு எந்தச் சந்தர்ப்பத்திலும் சேரவே மாட்டார் என்று நம்பினார்கள்.
இவ்வாறான நம்பிக்கையை தனது முஸ்லிம் மக்களுக்கு ஊட்டி நின்ற ஹக்கீம் இறுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை மாத்திரமின்றி, கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களையும் ஏமாற்றிவிட்டார் என்றே கருதுகின்றோம்.
ஏனென்றால் தேர்தலுக்குப் பின்னர் ஹக்கீம் அரசாங்கத்தோடு சேர்ந்து ஆதரவை வழங்குவார் என்று அந்த முஸ்லிம் மக்கள் பலருக்கு தெரிந்திருந்தால்,அவர்கள் நிச்சயமாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கே வாக்களித்திருப்பார்கள். இதில் உண்மைகள் அடங்கியிருக்கின்றன.
இந்த விடயத்த்pல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு இரா சம்பந்தன் தெரிவித்த சில விடயங்களை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். அவர் கூறுகின்றார் முஸ்லிம் மக்களை ஏமாற்றி அவர்களது வாக்குகளை பறித்துக்கொண்ட ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ், அரசாங்கத்தோடு எதனை அடிப்படையாக வைத்து பேரம் பேசினார் என்று புரியவிலலை.
முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை நாம் விட்டுக்கொடுக்கத் தயாராக உள்ளோம் என்று நாம் அறிவித்தும் கூட, அதை அக்கறை கொண்டு கவனமெடுக்காமல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு முதலமைச்சர் பதவியை வி;ட்டுக் கொடுத்துள்ளார் ஹக்கீம்.
இதன் காரணமாக கட்சியை நம்பி தங்கள் வாக்குகளை அளித்த முஸ்லிம் மக்களை தனது சுயநலத்திற்காக ஏமாற்றிவிட்டார். எனினும் தனது தவறான முடிவின் விளைவை அவர் வெகு விரைவில் அனுபவிப்பார் என்று திரு இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.
இவ்வாறு பார்க்கும் போது அரசாங்கக் கட்சியை சேர்ந்த ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை ஹக்கீம் விட்டுக்கொடுத்ததன் மூலம், அவர் சிங்களக் கூட்டமைப்பின் விருப்பதை பூர்த்தி செய்திருப்பது மாத்த்pரமன்றி தனது மத்திய அரசு மந்திரிப் பதவியையும் காப்பாற்றியுள்ளார் என்றே கூறவேண்டும்