siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 6 செப்டம்பர், 2012

முல்லைத்தீவில் போரில் பாதிக்கப்படாத மக்களுக்கு இந்திய வீடுகள்: இந்தியாவிடம் முறையிடுவோம்- சிறீதரன் எம்.பி

06.09.2012.BY.rajah.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்றுள்ள 500 வீடுகளில் பெரும்பாலானவற்றை யுத்தத்தினால் பாதிக்கப்படாத மக்களுக்கு வழங்க மாவட்டச் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளமை தொடர்பில் இந்திய அரசாங்கத்திடம் முறையிடவுள்ளதாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் 2ம் கட்டமாக மாவட்டத்திற்குக் கிடைக்கப்பெற்றுள்ள 500 வீடுகளில் பெரும்பாலனவை யுத்தத்தினால் பாதிக்கப்படாத மக்களுக்கு வழங்க மாவட்டச் செயலகம் திட்டவரைபை தயாரித்திருக்கின்றது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாவட்டத்திற்குக் கிடைக்கப் பெற்ற 500 வீடுகளில் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் மட்டும் ஹிக்கிராபுரம் என்ற கிராமத்திற்கு 50வீடுகளும், மாதவள சிங்க குளம் என்ற கிராமத்திற்கு 75வீடுகளும் வழங்கப்பட்டிருக்கின்றது.
இந்த வழங்கல்கள் என்ன அடிப்படையில் வழக்கப்பட்டன என்பது குறித்து சரியான தகவல்கள் எவரிடமும் கிடையாது. மிக மோசமான யுத்தத்தினாலும், மிக நீண்டகால இடப்பெயர்வுகளினாலும் பாதிக்கப்பட்ட மாவட்டத்திலுள்ள 80 வீதத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களுக்கு இதுவரை அரை நிரந்தர வீடு கூட முழுமையாக வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இந்திய அரசாங்கம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வழங்கிய வீட்டுத்திட்டத்தை யுத்தத்தினால் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாத மற்றும் அத்துமீறி தமிழர் பகுதிகளில் குடியேறியிருக்கின்ற சிங்கள மக்களுக்கு எவ்வாறு வழங்க முடியும்?
மேலும் ஹிக்கிராபுரம் பகுதியில் சுமார் 600 ற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வேறு மாவட்டங்களில் வீடுகள் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் அவர்களுக்கு மீண்டும் வீட்டுத்திட்டத்தை வழங்குவது என்ன அடிப்படையில்? இதன் மூலம் முழுமையாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதுவொரு மோசமான நிலையாகும். தமிழ் அதிகாரிகளையே உன்மை நிலையை வெளியிட முடியாமல் அச்சுறுத்தி சிலர் தமது அரசியல் நோக்கங்களை ஈடேற்றி வருகின்றனர். இதேவேளை ஏனைய பிரதேச செயலர் பிரிவுகளுக்கு 50 வரையான வீடுகளே ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
ஏனவே இந்த விடயம் குறித்து இந்திய அரசாங்கம் அறிந்து கொள்ளாமலிருக்கின்றதா? இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் தான் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப் படுகின்றது. என்றவாறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது.
எனவே இந்த விடயம் குறித்து இந்திய மற்றும் தமிழக அரசுகளின் கவனத்திற்கு கொண்டு வருவோம் என்றார்.