siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 10 செப்டம்பர், 2012

நிறைவடைந்தது பாராஒலிம்பிக்

10.09.2012.By.rajah.கண்கவர் கலைநிகழ்ச்சி, வாண வேடிக்கைக.ளுடன் நிறைவடைந்தது பாராஒலிம்பிக்[புகைப்படங்கள், காணொளி]


லண்டனில் நடந்த பாராஒலிம்பிக் போட்டி கண்கவர் கலைநிகழ்ச்சி, வாண வேடிக்கைகளுடன் நேற்று கோலாகலமாக நிறைவடைந்தது.

பாராஒலிம்பிக்



மாற்றுத் திறனாளிகளுக்கான 14-வது பாரா ஒலிம்பிக் விளையாட்டு போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த மாதம் 29ஆம் திகதி தொடங்கியது. இதில் 164 நாடுகளை சேர்ந்த 4,294 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மொத்தம் 20 விளையாட்டுகளில் 503 பிரிவுகளில் பந்தயங்கள் நடந்தன.

சாதனைக்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் வீரர், வீராங்கனைகள் ஒவ்வொருவரும் உற்சாகமாக கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர். 282 பேரை களம் இறங்கிய சீனாவே இந்த முறையும் ஆதிக்கம் செலுத்தியது. அவர்களின் பதக்க வேட்டையை எந்த நாட்டாலும் நெருங்க முடியவில்லை.

சீனா முதலிடம்





பாராஒலிம்பிக் போட்டி கண்கவர் கலைநிகழ்ச்சி, வாண வேடிக்கைகளுடன் நேற்று கோலாகலமாக நிறைவடைந்தது. பதக்கப்பட்டியலில் முதலிடத்தை பிடித்த சீனா 95 தங்கம், 71 வெள்ளி, 65 வெண்கலம் என்று மொத்தம் 231 பதக்கங்களை குவித்தது. இதன் மூலம் கடந்த 2008ஆம் ஆண்டு பீஜிங் பாராஒலிம்பிக்கில் 89 தங்கம் உள்பட 211 பதக்கங்கள் பெற்ற தங்களது முந்தைய சாதனையை முறியடித்தது.

ரஷியா 36 தங்கம் உள்பட 102 பதக்கத்துடன் 2-வது இடத்தையும், இங்கிலாந்து 34 தங்கம் உள்பட 120 பதக்கத்துடன் 3-வது இடத்தையும் பெற்றன. பிரதான ஒலிம்பிக்கில் முதலிடம் பிடித்த அமெரிக்கா 31 தங்கம், 29 வெள்ளி, 38 வெண்கலம் என்று 98 பதக்கத்துடன் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இலங்கைக்கு ஒரு பதக்கம்

பதக்கப்பட்டியலில் மொத்தம் 75 நாடுகள் இடம் பிடித்தன. இதில் இலங்கைக்கு ஒரே ஒரு பதக்கம் கிடைத்தது. ரி46 பிரிவின் கீழ் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் இலங்கை வீரர் பிரதீப் கலந்துக்கொண்டு வெண்கலப்பதக்கத்தை வென்றார். இதில் பிரதீப் ஓட்ட பந்தய தூரத்தை 49.82 விநாடிகளில் ஓடி முடித்து வெண்கலப்பதக்கம் வென்றார்.