siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 3 செப்டம்பர், 2012

மரபணு சோதனை மூலம் தலைமயிர், கண்கள் நிறங்களை அறியலாம்

03.09.2012.BY.rajah.
குற்றம் நடக்கும் இடங்களில் கிடைக்கும் மரபணுக்கள் குற்றவாளிகளின் கண்கள் மற்றும் தலைமயிரின் நிறத்தை கண்டுபிடிக்க உதவும்


குற்றம் நடந்துள்ள இடமொன்றிலிருந்து கிடைக்கும் டிஎன்ஏ மரபணுப் பொருட்களைக் கொண்டு சந்தேகநபர் ஒருவரின் தலைமயிர் மற்றும் கண்களின் நிறங்களை கண்டறிய கூடிய தடயவியல் பகுப்பாய்வு முறையொன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கிடைக்கின்ற டிஎன்ஏ தகவல்களைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காண முடியாது போகின்ற பட்சத்தில், குற்றவாளிகளின் கண்கள் மற்றும் தலைமயிரின் நிறங்களை கண்டறிய முடிவதன்மூலம் சந்தேகநபர்கள் பற்றிய முக்கிய தரவுகள் கிடைக்கும் என்று இந்த சோதனை முறையைக் கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள் குழுவினர் நம்புகின்றனர்.
உதாரணத்துக்கு, ஒரு குற்றச்செயல் தொடர்பில் பலர் மீது சந்தேகம் ஏற்படுகின்றபோது, அவர்களில் பிரதான சந்தேகநபர்களை குறிப்பாக ஊகித்து வரையறை செய்வதற்கு இந்த சோதனை முறை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
journal Forensic Science International என்ற சஞ்சிகையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதுள்ள genetic profiling என்கின்ற, மரபணுத் தகவல்களை சேகரிக்கின்ற பகுப்பாய்வு முறையில் குற்றம் நடந்த இடத்திலிருந்து கிடைக்கின்ற டிஎன்ஏ மரபணுப் பொருட்களை சந்தேக நபரிடமிருந்து கிடைக்கின்ற அல்லது ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டிருக்கின்ற மரபணுக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் நடைமுறையே உள்ளது.
அதாவது காவல்துறையால் கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருக்கின்ற சந்தேகநபர்களில் ஒருவரிடம் அல்லது டிஎன்ஏ களஞ்சியத்தில் ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டிருக்கின்ற டிஎன்ஏ தரவுகளிலிருந்து தான் இந்த பகுப்பாய்வுமுறை சாத்தியப்படுகிறது.
ஆனால் ஹைரிப்ளக்ஸ் என்ற இந்த புதிய தொழிநுட்பம் சந்தேகநபர்கள் எவரும் சிக்காதிருக்கின்ற சந்தர்ப்பத்திலும் உதவக்கூடியது என்று ஆய்வுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் மான்ஃப்ரட் கேய்ஸர் சுட்டிக்காட்டுகிறார்.
டிஎன்ஏ தரவுகளைத் தரக்கூடிய பொருட்கள் மிகக் குறைவாக கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பத்தில் தடயவியல் ஆய்வாளர்கள் பெரும் நெருக்கடியில் இருக்கின்றபோது இந்த தொழிநுட்பம் பெரும் பயனாக அமையும் என்று அவர் கூறினார்.
வழமையான தடயவியல் ஆய்வில் டிஎன்ஏ தரவுகளை சேகரிக்க பயன்படும் பொருட்களின் அளவை விட மிகக்குறைவான பொருட்களைக் கொண்டே தெளிவான தகவல்களை திரட்ட முடியும் என்று நெதர்லாந்திலுள்ள ரோட்டர்டாம் எராஸ்மஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையத்தைச் சேர்ந்த பேராசியர் கேய்ஸர் தெரிவித்தார்.
மூன்று ஐரோப்பிய சமூகங்களிடமிருந்து பெறப்பட்ட மரபணு மாதிரிகளைக் கொண்டு இந்த ஹைரிப்ளக்ஸ் தொழிநுட்பத்தின் மூலம் ஆய்வாளர்கள் அவர்களின் தலைமயிரின் நிறங்களைக் கண்டறிந்து உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதேபோல கண்ணின் நிறத்தையும் இவர்களால் கண்டறியமுடிந்துள்ளது.
phenotypes என்கின்ற, டிஎன்ஏவைப் பெறக்கூடிய பொருட்களின் மூலம் தலைமயிர் மற்றும் கண்ணின் நிறங்களை முன்கூட்டியே கண்டறிவது பற்றி இன்றைய நவீன தடயவியல் துறை தீவிரமாக ஆராய்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது