siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 19 செப்டம்பர், 2012

இந்தியக் குடியுரிமை கேட்கும் ஈழத்தமிழர்கள்; அகதி முகாமில் நீண்ட நாள்கள் இருப்போர்

19.09.2012.By.Rajah.
இந்திய அரசு எங்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்று அகில இந்தியத்  தமிழ் இலக்கிய அமைப்புகள் மாநாட்டில் பங்கேற்ற இலங்கை அகதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுடில்லியில் கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் அகில இந்தியத் தமிழ் அமைப்புகள் நடத்திய மாநாட்டில், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம், காண்டியபுரம் அகதிகள் முகாமைச் சேர்ந்த இலங்கை அகதிகள் ஐக்கிய முன்னணி அமைப்பில் இருந்து அதன் தலைவர் எஸ்.ஆர். அந்தோனி, செயலர் பாலகிருஷ்ணன், பொருளாளர் பாஸ்கர் என்கிற யேசுதாஸ், உதவிச் செயலர் பிரான்ஸிஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்ற எங்களது ஆவலைப் பூர்த்தி செய்ய சட்ட ஆலோசகர் புனித. தேவகுமார் ஆலோசனை அளித்தார். அதன் பேரில் முகாமின் ஆணையரிடம் உரிய அனுமதி பெற்று இந்த மாநாட்டில் பங்கேற்றோம்.

தமிழகத்தில் உள்ள 117 முகாம்களில் சுமார் 70,000 அகதிகள் இருக்கிறோம். வெளிப்பதிவாக 50,000 அகதிகள் உள்ளனர். இவர்களில் 32,000 பேர் இந்திய வம் சாவளியைச் சேர்ந்தவர்கள்.

அகதிகளாக தமிழகம் வந்து கால் நூற்றாண்டுக்கும் மேலாக குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சலுகைகள் அளித்தாலும் குடியுரிமை, வாக்குரிமை இல்லாததால் நாடற்றவர்களாக உணர்கிறோம். கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துரிமை என பலவற்றையும் முறைப்படி பெறமுடியாதவர்களாக இருந்து வருகிறோம்.

இலங்கையில் சூழல் மாறுவதாகத் தெரியவில்லை. அப்படியே மாறினாலும் அங்கே செல்ல விரும்பவில்லை. காரணம், அகதிகளாக இங்கு வந்த பலரும் முதியவர்களாகிவிட்டனர். அவர்களது குழந்தைகள் வளர்ந்துவிட்டனர். அவர்களுக்கு இலங்கையும், அங்கிருக்கும் பழக்கம், கலாசாரம் தெரியாது. அவர்கள் இந்தியக் கலாசாரத்துடன் தங்களை இணைத்துக் கொண்டுவிட்டனர்.

 ஆகவே, எங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்.
இலங்கையில் தமிழர்களின் பூர்வீக இடங்கள் சிங்கள மக்களின் ஆதிக்கம் பெற்ற பகுதிகளாகி வருவதாகக் கேள்விப்படுகிறோம்.

நாங்கள் மீண்டும் இலங்கைக்குச் சென்றால் எங்களை இந்தியர்களாகத்தான் பார்க்கின்றனர். அங்கிருந்து இங்கே வந்தால் இலங்கை அகதிகளாகப் பார்க்கின்றனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலரும் இந்தியக் குடியுரிமை பெற விரும்புவதால் இந்தக்கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். இது குறித்துத் தமிழக முதல்வரையும், மத் திய அரசையும் அணுக டில்லித் தமிழ்ச் சங்கம் மூலம் முயற்சி மேற்கொள்ள இருக்கிறோம் என அவர்கள் தெரிவித்தனர்